தமிழுக்கு நேர்ந்த சோதனை!

1 மறுமொழிகள்
மும்பை வாழ் ஏழைத் தமிழர்தம் குழந்தைகள் தமிழ் வழியில் கல்விபயில மும்பை மாநகராட்சி வாய்ப்பு அளித்து வருவதற்கு நாம் முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதேநேரத்தில், தற்போது 8-ம் வகுப்பை தமிழ் வழியில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி வருத்தமளிக்கிறது.

மும்பை பெருநகரில் தமிழர்கள் அதிகம். தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலிருந்தும் - படித்தவர், படிக்காதவர் இரு தரப்பிலும் - குறைந்தது ஒரு குடும்பம் அங்கே வாழ்கிறது. இவர்களில் வணிகம் செய்வோர், அலுவலகங்களில் பல நிலைகளில் வேலை பார்ப்போர் நீங்கலாக, பெரும்பகுதியினர் அன்றாட உழைப்பில் பிழைப்போர்.

தமிழ்நாட்டில் வாழ்கிறோம் என்ற கற்பிதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தமிழர் மட்டுமே வாழும் இடங்கள் அங்கு உண்டு. நிறையச் சம்பாதிக்கும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர். ஆனால் ஏழைத் தமிழ்க் குழந்தைகள் படிக்க வாய்ப்புள்ள ஒரே இடம் மும்பை மாநகராட்சிப் பள்ளிகள். இவர்களுக்காக 48 தமிழ் வழிப் பள்ளிகள் உள்ளன. 15,000 குழந்தைகள் படிக்கின்றனர்.

எட்டாம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வில் குஜராத்தி, கன்னட மொழிகளில் தேர்வு எழுத அனுமதி உள்ளபோது, தமிழுக்கு மட்டும் அனுமதியில்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழனுக்குச் சென்ற இடமெல்லாம்... எதிர்ப்பு!

போதுமான ஆசிரியர், பாடப்புத்தகம் இல்லை என்பதால் அனுமதி மறுக்கப்படுவதாகக் கல்வி அலுவலர் சொல்லும் காரணம் நம்பும்படியாக இல்லை. தற்போது மும்பை மாநகராட்சியில் பயிலும் குழந்தைகள், செலவு மிகுந்த ஆங்கில வழிக் கல்விக்கு மாற முடியாது. அடிப்படையில் அவர்கள் ஏழைகள். தற்போது படிப்பை தமிழ் வழியில் தொடர முடியாத சுமார் 800 குழந்தைகளுக்கு உதவிட தமிழக அரசு எந்த வகையிலாவது முயற்சிக்க வேண்டும்.

மத்திய ஆட்சியில் தொடர திமுகவின் ஆதரவை நம்பி இருக்கும் காங்கிரஸ் கட்சி மராட்டியத்தில் ஆட்சியில் இருப்பதால், தமிழக முதல்வரின் கோரிக்கையை நிச்சயம் தட்ட முடியாது.

மும்பைத் தமிழ்க் குழந்தைகளுக்கு இன்று ஏற்பட்டுள்ள இன்னல், தொழில் காரணமாக மாநிலம் கடந்து, நாடு கடந்து செல்லும் தமிழர் அனைவருக்கும் உள்ளது. தமிழை மறக்காமல் இருக்கும் தமிழனைத் தமிழகம் மறந்துவிடுவது தொடர்கதையாக உள்ளது.

ஆங்கிலம் கற்க விரும்பும் அயல்மொழி மாணவர்களுக்காக இங்கிலாந்து அரசு வெளியிடும் இலக்கண நூல்கள், மொழிப் பயிற்சி நூல்கள் நிறைய. அதேபோன்று பிரஞ்சு மொழி, கலாசாரம், நுண்கலையை வளர்த்தெடுக்க தனிஅமைப்பு உள்ளது. அவர்கள் உண்மையாகவே அதற்காகப் பாடுபடுகிறார்கள். தங்கள் மொழியைக் கற்கும் அயல்மொழியினருக்காக எளிய கற்பித்தல் முறை, கற்றல் கருவிகள் அனைத்தையும் புதிய தொழில்நுட்பத்துக்கு மாற்றியுள்ளனர்.

ஆனால் நமக்கோ, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் தமிழ் வம்சாவளியினருக்கும் தமிழைச் சொல்லித் தரவே வழியில்லை. இதன் விளைவாக, வெளிமாநிலம், வெளிநாடு வாழ் தமிழனின் குழந்தைகள் தமிழை மறக்கின்றனர். தென்ஆப்பிரிக்காவிலும், மொரீஷியஸிலும் தமிழ் வம்சாவளியினர் தேவாரம், திருவாசகத்தை ஆங்கில எழுத்தில் எழுதி, பிழையான தமிழ் உச்சரிப்புடன் பாடி வரும் அவலம் இதற்கு ஒரு சான்று.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்தம் குழந்தைகள் தடையின்றித் தமிழ் பயில, முடிந்தால் தமிழ் வழியில் பயில, ஆதரவான சூழலை, கற்றலுக்கான தொழில்நுட்ப வசதிகளை தமிழக அரசுதான் உருவாக்க வேண்டும்.


தமிழர் தூங்கும் பின்னிரவில் திரைப்பாடல்களை, திரைப்படங்களை ஒளிபரப்பும் ஊடகங்கள், அந்நேரத்தில் விழித்திருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தமிழ்மொழிப் பயிற்சி வகுப்புகளை ஒளிபரப்ப தமிழக அரசு நிபந்தனை விதிக்கலாம். இதனால் உறுதியாக ஒரு நன்மை உண்டு - ஆங்கிலம் கலவாத தமிழ் பேசும் தமிழ்க் குழந்தைகளின் கூட்டம் தமிழகத்தில் இல்லாவிட்டாலும் உலகின் பிற பகுதிகளிலாவது பல்கிப் பெருகும்.

நன்றி: தினமணி - தலையங்கம்



மும்பைக்கு தமிழ்ப் பாட புத்தகம் தரத் தயார்:- கருணாநிதி கடிதம்

மும்பை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் 8-ம் வகுப்பில் தமிழிலேயே தேர்வு எழுத தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இப்பிரச்னை குறித்து ஜூன் 26-ம் தேதி "தினமணி" நாளிதழில் தலையங்கம் வெளியாகி இருந்தது. அதைப் படித்த முதல்வர் உடனடியாக இதில் பரிகார நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை(27/6/08) எழுதிய கடிதம்:

மும்பை மாநகராட்சி சார்பில் 8 மொழிகளில் தொடக்க கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ் மொழியிலும் தொடக்க கல்வி பயிற்றுவிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் 48 பள்ளிகளில் 15 ஆயிரம் மாணவர்கள் பயன் அடைந்துவருகின்றனர்.

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை 8-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுமாறு கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் குஜராத்தி, கன்னட மாணவர்கள் அவர்கள் தாய்மொழியிலேயே 8-ம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது பாரபட்சமான நடவடிக்கை ஆகும்.

இந்த முடிவுக்கு சில நிர்வாகக் காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகள் தமிழில் படித்த மாணவர்கள் 8-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் தேர்வு எழுத நேர்வதால், அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் மன அழுத்தத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

மாணவர்களின் தாய்மொழியில் தொடக்கக் கல்வி அளிப்பது சிறந்த முயற்சி. அதை நீங்கள் தொடர வேண்டும். தமிழில் பயிற்றுவிக்க ஆசிரியர்கள், புத்தகங்கள் தேவைப்பட்டால் மும்பை மாநகராட்சிக்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளது.


தமிழ் மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை தமிழில் பயிற்றுவிப்பதைத் தொடர வேண்டும். இந்த விஷயத்தில் 15 ஆயிரம் மாணவர்களுக்கு உதவும் வகையில் நல்ல முடிவை மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி: தினமணி - தமிழகம்

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

கவரி வீசிய காவலன்!

0 மறுமொழிகள்
வேந்தே!

நினது போர்க்களத்தில் முழங்குகின்ற நின்னுடைய வீரமுரசு, எனக்கு அச்சம் தருவதாகவும் குருதியைப் பலிகொள்ளும் வேட்கையுடையதாகவும் இருக்கிறது. அது, கருமையுடைய மரத்தினால் செய்யப்பட்ட பக்கங்களையும் குற்றம் தீர வாரினால் இறுகப் பிணிக்கப் பட்டும் உள்ளது. நீண்டு தழைத்த மயில் தோகை மாலையினால் அணிசெய்யப்பட்ட அது, புள்ளிகளையுடைய நீலமணி மாலையை அணிந்துள்ளது போன்றிருக்கிறது.

அரண்மனையிலிருந்த கட்டில், எண்ணெய் நுரையைப் போன்று மென்மையான பரப்பினையுடைய பூக்கள் பரப்பப் பட்டிருந்தது. அது, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்த வீரமுரசு அமரக்கூடிய முரசுக் கட்டில் என்பதை அறியாமல் அதன் மீது ஏறிக் கிடந்து உறங்கினேன்.

அதனைக் கண்ட நீயோ சினங்கொண்டு நினது வாளினால் என்னை இரு கூறாக்கிக் கொல்லாது விடுத்தாய்.

அதுமட்டுமல்லாது, என்னருகே வந்து நின்னுடைய வலிமையான முழவு போன்ற தோளினை உயர்த்திக் குளிர்ச்சியுடன் அருளுடன் எனக்குக் கவரி வீசவும் செய்தாய்! இச்செயல், நீண்டு அகன்று பரந்த உலகில் உயர்நிலை உலகமாகிய அங்கு தங்குதல் என்பது உயர்ந்த புகழுடையவர்க்கு அல்லாது பிறர்க்கு இயலாது என்பதை நன்கு கேட்டிருந்த தன்மையாலோ?

வெற்றியுடைய தலைவனே! நீ செய்தது எதனாலோ? எனின், நீ நல்ல தமிழின் இனிமை முழுவதும் உணர்ந்தவன் ஆகையால் இத்தகைய பண்பு நினக்கே உரியது! ஆகையால், இச்செயலும் நின்னால் சாலும்.

பாடியவர்: மோசிகீரனார்.

பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

திணை:பாடாண். துறை: இயன் மொழி.

குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந்துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.


மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?


மின்தமிழ் இடுகை: புலவர் இரவா

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் இராசேந்திரன்

0 மறுமொழிகள்
"சமூக மதிப்போடு சம்பாத்தியமும் தரும் மொழி தமிழ்''!

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக ஒன்பதாண்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பொறுப்பில் இரண்டரை ஆண்டுகள், மொழிபெயர்ப்பியல் அகர முதலித் திட்டக் கூடுதல் முழுப் பொறுப்பு இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக மூன்றாண்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வுப்பணி தனி அலுவலராக இரண்டாண்டுகள், தமிழ்ப் பல்கலைக் கழகச் சிறப்புத்தகைமை மற்றும் விரிவுரையாளராக மூன்றாண்டுகள், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு நூலகத்தில் பன்னிரண்டாண்டுகள், குறள்பீடம் பொறுப்பு, மொழிபெயர்ப்புத் துறையின் துணை இயக்குநர் என்று 34 ஆண்டுப்பணி அனுபவம்.

மேலும்

சுவடிகளைப் பதிப்பித்தல், வெளியிடல், தமிழ்ப் பயிற்றுவித்தல், தமிழ் ஆய்வு, தமிழாய்விதழ் பதிப்பு, மின்-அகராதி, பிழைதிருத்தி போன்ற கணினித் தமிழ் வளர்ச்சிப் பணிகள், சங்க இலக்கியங்களை இந்தியிலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்தல், செம்மொழித் தமிழ் இலக்கியத் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், தமிழாய்வு மற்றும் நிர்வாகப் பணிகளாக என் 34 ஆண்டுக் காலப் பணி அனுபவங்கள்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானதற்கு இவரைவிடச் சிறந்த அனுபவசாலி நிச்சயமாக இருக்கமுடியாது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முனைவர் ம. இராசேந்திரனை சென்னை, திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

உங்கள் குடும்பம் பற்றி?

பிறந்த ஊர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்னவாசல். சொந்தஊர் குடவாசல். ஞானாம்பாள் - மகாதேவன் தம்பதியரின் ஒரே மகன். இரண்டு சகோதரிகள். என் தந்தை ஒரு தவில் வித்வான். எங்கள் குடும்பம் ஓர் இசைக்குடும்பம். எனக்கு ஒரு வயதாக இருக்கும்போதே தந்தை காலமாகிவிட்டார். தாயின் அரவணைப்பிலும் தாய்மாமன் வளர்ப்பிலும் பள்ளிப்படிப்பை முடித்தேன்.

இசைக் குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் இசை பயிலாமல், தமிழில் ஆர்வம் காட்டியதற்குக் காரணம் என்ன?

இசையும் தமிழும் பிரிக்கமுடியாவை. இசை குடும்பத்தில் இருந்து வந்த நான், இசையும் தமிழுமாக வளர்ந்து, திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றேன். எங்கள் தலைமுறையில் முதன்முதல் படித்து பட்டம் பெற்றது நான்தான். நான் கோபாலகிருஷ்ண ஐயரின் மாணவன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். அன்றைக்கு இருந்த ஆசிரியர்கள் தமிழுணர்வோடு பேசிப்பழகியதாலும் பாடம் நடத்தியதாலும் எனக்கு தமிழ்மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

உங்களது தொடர் வளர்ச்சிக்குக் காரணம்?

தொடந்து படித்ததுதான்.

உங்கள் துணைவியார், குழந்தைகள் பற்றிக் கூறுங்களேன்?

துணைவியார் பெயர் மைதிலி.

இரண்டு பெண்கள். மூத்தபெண் தென்றல், இளையவள் எழில். என்னுடைய இரண்டு பெண்களுக்கும் கலப்புமணம்தான் நடந்தது. தமிழ்மேக்னா என்று ஒரே ஒரு பேத்தி.



உங்கள் குடும்பத்தில் தமிழிலக்கிய ஆர்வம் எப்படி?

குடும்பத்தில் அனைவருக்குமே தமிழார்வம் அதிகம். என்னுடைய இளைய மகள் மூன்று வயதிலேயே கவிதை சொல்வாள். இதைக்கண்டு நான் வியந்ததுண்டு.

இன்றைக்குத் தமிழ் படித்தால் சமுதாயத்தில் மதிப்பு கிடைப்பதில்லை என்றும், தொழில்நுட்பத்துறை போன்றவற்றில்தான் பணி வாய்ப்புகளும் ஊதியமும் அதிகம் என்றும் கூறிவருகின்றனரே அது குறித்து தங்கள் கருத்தென்ன?

சமூக மதிப்பைத் தருவது மொழி. சம்பாத்தியம் தருவது தொழில்நுட்பத்துறை. சம்பாத்தியம் மட்டுமே வாழ்க்கையாகாது. சமூகத்தில் மதிப்போடு சம்பாத்தியத்தையும் தரும் ஒரே மொழி தமிழ்மொழி மட்டும்தான்.

உ.வே.சா. தமிழ்ப்படித்ததால் அவருக்கு எந்தவித இழப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பார்க்கப்போனால் அவர் தமிழ்பயிலாமல் இருந்திருந்தால் இன்றைக்குத் தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். என்னைப் பொறுத்தவரை தமிழால் உயர்ந்தவர்கள்தான் அதிகம்.

செம்மொழி ஆய்வு மையம் குறித்து உங்கள் புதிய பணியின் பங்களிப்பென்ன?

செம்மொழி ஆய்வு மையம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படவுள்ளது. அந்த நிதி பகிர்வில் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால், அதன் பணிகளில் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்ந்துச் செயலாற்றும்.

தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி கிடைத்தது குறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சூழலிலும், ஏற்கெனவே தமிழ் பாடங்களைப் பள்ளிக்குழந்தைகள் படிக்க நேர்ந்ததும், ஆலயங்களில் தமிழ் அனுமதிக்கப்பட்டிருப்பதுமான இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரானது குறித்து மிகுந்த பெருமைப்படுகிறேன்.

தமிழ் வளர்ச்சி குறித்து தங்கள் கருத்து என்ன?

தமிழைத் தனியாக வளர்க்க முடியாது. சார்புப் படுத்தித்தான் வளர்க்கமுடியும், பக்தி காலத்தில் பக்தியை வளர்ப்பதற்காக மொழி வளர்க்கப்பட்டது. ஜனநாயகத் தேர்தல் காலத்திலும் மொழி வளர்க்கப்பட்டது. இன்றைக்கு மொழி வளர்த்தெடுக்கப்போவது எது என்பதைக் கண்டறிந்தால் போதும். அது உலகமயமாக்களில்தான் உள்ளது. உலகமயமாக்கல் என்பது முதலில் குடும்பத்தில் இருந்து உருவாகவேண்டும். ஏனென்றால், ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் வேறு வேறு நிறுவனங்களில் பணிபுரிபவராகவும், ஒரு தொலைக்காட்சியில் பல்வேறு அலைவரிசைகளைப் பார்ப்பவராகவும் இருக்கின்றனர். எதிலும் ஒற்றுமை கிடையாது. உலகமயமாக்கல் என்பது முதலில் வீட்டுக்குள்ளேயே உருவாகவேண்டும். இந்த ஒற்றுமைதான் உலகமயமாவதற்கு நம்மைத் தயார்படுத்தும்.

கி.மஞ்சுளா

படங்கள்: ஏ.எஸ். கணேஷ்

நன்றி: தினமணியின் ஞாயிறு கொண்டாட்டம்
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

சோழர்கள் | 5 நிமிட வாசிப்பு!

2 மறுமொழிகள்
சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.

காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.

கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. அவர்கள் சூடும் மலர் ஆத்தி.

பொருளடக்கம்
1 தோற்றமும் வரலாறும்
2 முற்காலச் சோழர்கள்
2.1 முற்காலச் சோழர்களின் வீழ்ச்சி
2.1.1 களப்பிரர்கள்
2.1.2 வீழ்ச்சி
2.1.3 தமிழ்நாட்டில் சோழர்கள்
3 பிற்காலச் சோழர்கள்
3.1 இராஜராஜ சோழன்
3.2 இராஜேந்திர சோழன்
3.3 பின்வந்த சோழ மன்னர்
3.4 முதலாம் குலோத்துங்கன்
3.5 சோழப் பேரரசின் வீழ்ச்சி
4 சோழ நாடு
5 ஆட்சி
5.1 அரசுரிமை
5.2 உள்ளாட்சிப் பிரிவுகள்
6 சமூகநிலை
6.1 பெண்டிர்
6.2 உடன்கட்டை ஏறுதல்
6.3 ஆடல் மகளிர்
6.4 சோழரும் சாதியமும்
6.5 அடிமைகள்
7 வெளிநாட்டு வணிகம்
8 சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள்
8.1 கலைகள்
8.2 கல்வி
8.3 மொழி
8.4 இலக்கியம்
8.5 சமயம்
9 இவற்றையும் பார்க்கவும்
10 மேற்கோள்கள்
11 வெளி இணைப்புகள்

மேலும் வாசிக்க...

தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதர்

3 மறுமொழிகள்
கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல், கற்பனையைப் பறக்கவிட்டு, வண்ணங்களைக் குழைத்தெடுத்து, தன் திறமை முழுவதையும் கொட்டி, அழகு சொட்டும் வண்ண ஓவியம் ஒன்றை எழுதினானாம் ஒருவன்.

மற்றொருவன் அதன் கீழே அவனது பெயரை எழுதினானாம். யாருடைய பெயர் ஓவியத்தில் உள்ளதோ, அவனே சித்திரத்தை எழுதியதாக இன்றளவும் நம்பப் படுகிறதாம். ஏறத்தாழத் தமிழிசையின் கதை யும் இது தான்.

வரலாறு எழுதாமையும் அதைப் பேணாமையும் தமிழரின் மிகப் பெரும் குறைகள். தமிழரின் சாதனைகளுக்கு உரிமை கொண்டாட நினைப்போரின் வேலை சுளுவானது. நமது வரலாற்றைத் திரிப்பது எளிது. புதைக்கப்பட்ட வரலாற்றைத் தோண்டி எடுக்கவும் திரிக்கப்பட்ட சரித்திரத்தைத் திருத்தி அமைக்கவும் கடும் முயற்சிகள் தேவை. தமிழிசையின் வேர்களைக் கண்டு பிடித்து, அது கர்நாடக இசையாகத் திரிந்து வந்துள்ளதை நிறுவிய ஆராய்ச்சியாளர்களின் முன்னோடி ஆபிரகாம் பண்டிதர். 'யாழ் நூல்' இயற்றிய விபுலானந்தருக்கும் முந்தியவர் பண்டிதர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் கர்நாடக இசையையும் பழைய தமிழ் நூல் களையும் ஆழமாக ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் எழுதிய நூல் 'கருணாமிர்த சாகரம்'.

ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்டது அந்நூல். இசையின் வரலாறு, அறிவியல், இலக்கியம், இசை வாணர்கள் பற்றி விரிவாகவும் நுட்பமாகவும் அது அலசுகிறது. இசை பற்றிய கலைக்களஞ்சியமாக அதைச் சொல்லலாம்.

புஷ்பக விமானம், கூடுவிட்டுக் கூடுபாய்தல் எனப் பண்டிதர் கயிறு திரிக்கவில்லை. ஆய்வுப் பொருளை அறிவியல் பார்வையில் அவர் அணுகினார். கேள்விகளை எழுப்பினார். விடைகளைக் கண்டறிந்தார். தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கும் வாதங்களை அடுக்கினார். பின்னப் பகுப்பு முறையில் அமைந்த நமது சுருதியமைப்பில் ஏழு சுவரங்களும் பன்னிரண்டு சுவர தாளங்களும் உள்ளன. இருபத்தி நான்கு சுருதிகள் இருப்பதுதானே முறை! ஏன் இருபத்திரண்டு சுருதிகள் மட்டும் உள்ளன? அது தவறல்லவா என்ற வினாக்களைத் தொடுத்தார். வித்துவான்களிடமும் அறிஞர்களிடமும் விவாதித்தார். பத்திரிக்கைகள் வாயிலாக மக்களிடமும் விடை பெற முயன்றார். தாய்ப்பண் எனும் அடிப்படை இராகம் மேளகர்த்தாவிலிருந்து பிறக்கிறது. கர்நாடக சங்கீதம் எழுபத்திரண்டு மேளகர்த்தாக்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், "32 மேளகர்த்தாக்களுக்கு மட்டுமே ஜன்யராகத்தகுதி இருப்பது ஏன்?" என ஆபிரகாம் பண்டிதர் கேட்டார். சங்க இலக்கியங்கள், சிலப் பதிகாரம், பக்தி இலக்கியங்களைக் கற்றுணர்ந்து, அவற்றில் இசை, இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகளையும் ஆராய்ந்து விளக்கினார். நாதசுவரம், கின்னாரி போன்ற வாத்தியங்கள் கடல்கோளுக்கும் முந்திய தொன்மையுடையவை என நிறுவினார். நமது செங்கோட்டி யாழே நவீன கால வீணை என்றும் நிரூபித்தார்.

தமிழாசிரியராகப் பணிபுரிந்த ஆபிரகாம் பண்டிதர், ஒரு சித்த வைத்தியருமாவார். சுருளி மலையில் வசித்த கருணானந்தர் என்ற ஞானியிடம் பண்டிதர் மருத்துவ முறைகளையும் மூலிகை இரகசியங்களையும் கற்றறிந்தார். தஞ்சாவூரில் ஒரு தோட்டம் அமைத்து மூலிகை ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்து வந்தார். தமிழ் வைத்திய முறையைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக அரசு அவருக்கு 'இராவ் பகதூர்' என்ற பட்டம் வழங்கியது.

1907ஆம் ஆண்டு 'கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற புத்தகத்தைப் பண்டிதர் வெளியிட்டார். தொண்ணூற்றைந்து தமிழ்ப் பாடல்கள் அதிலிருந்தன. அத்தனையையும் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதரே. ஒவ்வொன்றுக்கும் அவரே இசையமைத்து அவற்றின் சுவரங்களையும் வெளியிட்டார்.

இசையுலகில் சுடரொளிவிட்டுப் பிரகாசித்த ஜாம்பவான்களுடன் தன் வாழ்நாள் முழுவதிலும் அவர் தொடர்பு கொண்டிருந்தார். கோனேரிபுரம் வைத்யநாத ஐயர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், பஞ்சாபகேச பாகவதர் ஆகிய இசைவாணர்கள் பண்டிதரின் நண்பர்கள்.

தென்னிந்தியாவின் முதல் இசை மாநாட்டை மாபெரும் அளவில் பண்டிதர் நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். இசை மாநாடுகள் பண்டிதரது சொந்த செலவில் நடந்தன. ஒவ்வொன்றிலும் பயன் மிகு விவாதங்கள் நடந்தன. புது கருத்துகள் வெளியாயின.

டிசம்பர் 14, 1912இல் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்ற அமைப்பைப் பண்டிதர் தோற்று வித்தார். தென்னிந்திய இசை வளர்ச்சியே அதன் குறிக்கோள். இசைப்பள்ளி ஏற்படுத்துதல், இசை ஆராய்ச்சி, இசை பற்றிய சந்தேகங்களைத் தீர்த்தல் என்பன சங்கம் பின்பற்றிய முறைகள். தஞ்சாவூரின் திவான், ஆபிரகாம் பண்டிதரின் இசை மாநாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதே பாணியில் அகில இந்திய அளவில் இந்திய இசை பற்றிய மாநாட்டைப் பரோடாவில் கூட்டினார். அதில் பண்டிதர் பங்கேற்றுக் கட்டுரை வாசித்தார். மாநாட்டில் ஆபிரகாம் பண்டிதரது மகள் மரகதவள்ளியம்மாள் வீணை மீட்டினார்.

பண்டிதரின் மூன்றாவது மகனாகிய வரகுண பாண்டியன், தம் தந்தை 1919ஆம் ஆண்டு மறைந்தபோது விட்டுச் சென்ற ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார். 'பாணர் கைவழி என்னும் யாழ்நூல்' அவரது படைப்பு.

தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்பன குயிலுவக் கருவிகள் எனப்பட்டதாக வரகுண பாண்டியன் கூறுகிறார். மிடறு என்றால் 'தொண்டை' எனப் பொருள். மிடற்று இசையே வாய்ப்பாட்டு. கஞ்சக்கருவி உலோகத்தால் ஆனது. ஜலதரங்கம், மோர்சிங் போன்றவை கஞ்சக் கருவிகள்.

யாழ் முதலிய இசைக் கருவிகளின் விவரிப்பை வரகுண பாண்டியன் தருகிறார். யாழின் பதினெட்டு உறுப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார். தனது தந்தை, சகோதரனைப் போலவே பண்டிதரின் மகள் மரகதவள்ளியம்மாளும் தமிழிசை ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ளவர். கருணாமிர்தசாகரத்தின் இரண்டாம் பகுதியை அவர் எழுதியுள்ளார்.

1859ஆம் ஆண்டு பிறந்த ஆபிரகாம் பண்டிதரின் 148ஆம் பிறந்தநாள் விழாவின் போது அவரது குடும்ப வாரிசான முனைவர் அமுதா பாண்டியன் 'கருணாமிர்தசாகரம்' பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டார். ஆறு ஆண்டுகள் ஆராய்ச்சிகளின் பலனான அப்புத்தகத்தின் முதல் பிரதியைப் பேராசிரியர் அன்பழகன் கொடுக்க பண்டிதர் வழி வந்த முத்தையா பாண்டியன் பெற்றுக்கொண்டார். பாடல்கள் இயற்றிப் பண்ணமைத்து, இசையாராய்ச்சி செய்து, மாநாடுகள் நடத்தி, நூல் வெளியிட்டு தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு மனமும், தமிழ்ப்பற்றும், இசை ஆர்வமும் நூற்றாண்டுகள் கடந்து, தலைமுறை களைத் தாண்டி மங்காமலிருக்கின்றன.


நன்றி - கலைகேசரி
சொல்புதிது இதழ்-9 இல் வெளிவந்த கட்டுரை

பழகினால்தானே இனிமை தெரியும்!

2 மறுமொழிகள்
மொழி: பழகினால்தானே இனிமை தெரியும்!

- ரவிக்குமார்.

அம்மாவை "மம்மி' என்றும் அப்பாவை "டாடி' என்றும் அழைப்பதையே பெரிதும் விரும்புகின்றனர் தமிழ்நாட்டின் பெற்றோர்கள். குழந்தைகளைச் சொல்லிக் குற்றமில்லை. இந்தளவிற்கு நர்சரி மோகத்திலும், ஆங்கில மோகத்திலும் ஊறிப்போயிருப்பவர்கள் பெற்றோர்கள்தான். "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது போல், அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ்ச் சொற்களை சென்னையின் பல பகுதிகளிலிருக்கும் குழந்தைகளுக்கும் மாதத்திற்கு இரண்டு முறை சென்று சொல்லிக் கொடுத்து வருகிறார் விஜய் பார்த்திபன் என்னும் தமிழ் ஆர்வலரும் அவரின் நண்பர்களான தமிழ் ஆர்வலர்களும்.

வரைகலை பணிபுரியும் விஜய் பார்த்திபன், இதற்காகவே "பழகு தமிழ் பயிலரங்கம்' என்னும் அமைப்பை கடந்த ஏப்ரல் 14 அன்று தொடங்கியிருக்கிறார். இனி தமிழ்ப் பேச்சு... அவரின் மூச்சு...


""பஸ், ஸ்டாப்பிங், ரோட், சைக்கிள்... இப்படி நாம் அன்றாடம் பேசும் ஆங்கில வார்த்தைகளையே பேருந்து, நிறுத்தம், சாலை, மிதிவண்டி... என்று தமிழில் பயன்படுத்த குழந்தைகளுக்குச் சொல்கிறோம். அவர்களும் சந்தோஷமாகப் பயன்படுத்துகின்றனர். பெற்றோர்களும் கூட இப்போது ஆர்வமாக இந்தப் பயிலரங்குகளுக்கு வரத் தொடங்கியிருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், அன்றாடப் பயன்பாட்டில் அதிகம் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் அடுக்ககங்களில் வாழும் பெற்றோர்கள் கூட அவர்களின் குழந்தைகளோடு எங்களின் இந்தப் பயிலரங்குகளில் பங்கெடுக்கின்றனர்.

யாராவது எங்களின் பகுதிகளில் இப்படியொரு பயிலரங்கை நடத்துங்களேன் என்று அழைத்தாலும், நாங்கள் அவர்களின் இடத்தில் சென்று நடத்துகிறோம். இதற்காகவே தமிழ்நாடு முழுவதுமிருக்கும் தமிழ் ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். மாதத்தில் இரண்டாவது, நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மாம்பலம் பகுதிகளிலிருக்கும் கிட்டு பூங்காவில் இந்தப் பயிலரங்கை நடத்துகிறோம். முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகிலிருக்கும் வரதராஜப் பேட்டை என்னும் குடிசைப் பகுதியிலிருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நல்ல தமிழில் பேசுவதற்குப் பயிற்சியளிக்கிறோம். இதேபோல் ஒவ்வொரு பகுதிக்கும் நாங்களே நேரில் சென்று பயிற்சியளிக்க இருக்கிறோம்.

சிறிது காலத்திற்குப் பிறகு அந்தப் பகுதியில் நீங்கள் கொச்சைத் தமிழே கேட்க முடியாது.
தமிழ் அன்பர்களின் வீடு, பூங்கா, இப்படி எந்த இடத்திலும் இந்தப் பயிலரங்கு நடக்கும். ஒவ்வொரு கூட்டத்திலும் ஏறக்குறைய 25 லிருந்து 50 பேர் வரை கூடுகின்றனர். ஒவ்வொரு சந்திப்பிலும் 20 முதல் 50 ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளைச் சொல்லித் தருகிறோம். இல்லை இல்லை, ஞாபகப்படுத்துகிறோம் அவ்வளவுதான்!

ஏனென்றால், இதில் பெரும்பான்மையானவை நமக்குத் தெரிந்ததுதான். செவ்வியல் மொழியாக தமிழ் இருந்தாலும், அன்றாடம் மக்கள் செப்பும் மொழியாகவும் தமிழ் இருக்கவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்.
வீட்டிற்கு உள்ளேயும், பொது இடங்களிலும் நமது அன்றாட பயன்பாட்டு மொழியாக தமிழைத் தொடர்ந்து பேசிவந்தாலே போதும். ஏறக்குறைய 200 வார்த்தைகள் வரை தெரிந்தாலே போதும், நமது அன்றாட பயன்பாட்டில் முழுக்க முழுக்க நாம் தமிழில் பேசமுடியும். தமிழர்கள் தமிழில் பேசவேண்டும் என்று முதலில் நினைக்க வேண்டும். அதை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும்.

முன்னேறிய நாடுகளான சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் கணினிப் பயன்பாட்டில் கூட அவர்களின் மொழியைத்தான் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டுள்ளார்களே தவிர, ஆங்கில மொழியைப் பயன்படுத்தி அல்ல. இந்த உணர்வு தமிழர்களுக்கும் வேண்டும்.

அடுத்தமுறை நீங்கள் பேருந்தில் பயணிக்கும் போது, "பாரீசுக்கு ஒரு டிக்கட்' என்று கேட்பதற்குப் பதில், "பாரிமுனைக்கு ஒரு பயணச்சீட்டு' என்று கேட்டுப் பாருங்கள். நடத்துனர் நிச்சயம் கொடுப்பார்.

அதேபோல், தானி (ஆட்டோ) திருவல்லிக்கேணிக்கு வருமா? என்று ஓட்டுனரிடம் கேட்டுப் பாருங்கள். முதலில் நீங்கள் கேலி செய்கிறீர்களோ என்று அவர் நினைத்தாலும், அவரும் புரிந்து கொள்வார் உங்களின் நல்ல தமிழின் இனிமையை. பயன்படுத்தினால்தானே தமிழின் இனிமை தெரியும்..'' என்றார் விஜய் பார்த்திபன்.


நன்றி:தினமணி கதிர்.

மின்தமிழ் இடுகை: ஆல்பர்ட் பெர்னாண்டோ

ஈன்றாரை இழந்த புறப்பாடல்கள்!

0 மறுமொழிகள்
காதலை மொழிவது அகநானூறு என்றால், காதலைத் தவிர்த்த உணர்வுகளை மொழிவது புறநானூறு. நானூறு இனிய பாடல்களின் தொகுப்பு.

எல்லாப் பாடல்களுக்கும் பாடியவர் யார்?

பாடப்பட்டவர்கள் யார் யார்? என்றெல்லாம் குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.

ஆனால் பாடிய புலவர் பெருமக்கள் யார் என்று தெரியாத நிலையில் புறநானூற்றில் பதினான்கு பாடல்கள் உள்ளன. பாடல்களின் பொருளாழம் கருதி இவை இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்தகு "ஈன்றாரை இழந்த புறப்பாடல்களில்" சில:
ஒருத்தி தன் கணவனுடன் காட்டுவழியாக வந்துகொண்டிருக்கிறாள். அங்கு நேர்ந்த போரில் கணவன் இறந்துவிடுகிறான். வருத்தத்துடன் அருகிருக்கும் குயவனை நாடிச் செல்லும் அவள், குயவனிடம் இவ்வாறு வேண்டுகிறாள்: "குயவனே! என் அன்பிற்குரிய கணவன் வீர மரணம் அடைந்துவிட்டான். அவனை அடக்கம் செய்ய பெரிய தாழியை செய்துகொடு. அந்தத் தாழியில் அவனுடன் நானும் அடக்கம் ஆகவேண்டும். அதற்கேற்ப பெரிய தாழியாகச் செய்," என்று வேண்டுகிறாள். பாடல் இதுதான்:


"கலம்செய் கோவே கலம் செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லிபோலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலிது ஆக வனைமோ
நனைத்தலை மூதூர்க் கலம் செய் கோவே". - (புறம்-256)

கணவனின் வீர உணர்வைத் தனித் தகுதியாகவே போற்றிய மனைவியாகத் திகழும் இவள், காட்டு வழியே அவனுடன் பயணம் செய்ததை அழகியதோர் உவமையாகச் சொல்கிறாள். வண்டிச் சக்கரத்தில் உள்ள ஆரத்தைப் பொருத்தி, அதாவது அதன்மேல் ஒட்டிக்கொண்டு வந்த சிறிய பல்லியைப்போல் பாலையைக் கடந்து வந்தேன் என்கிறாள். பயணத்தின் பொழுது ஆரத்தைவிட்டு விழாத வண்ணம் பல்லி எவ்வாறு உறுதியாகப் பற்றிக்கொண்டு வந்ததோ, அதுபோல் நானும் கணவனை உறுதியோடும், உரிமையோடும் பற்றி வந்தேன்' என்பது இங்கே நுட்பமான பொருளாகும். பாடல் இருக்கிறது, பாடலை ஈன்றவர் யார் எனத் தெரியவில்லை.

*****

இரண்டு தலைவர்களுக்கிடையில் பகை. ஒருவனது பசுக்கூட்டத்தை அடுத்தவனின் வீரர்கள் தங்கள் ஊருக்குக் கடத்திச் செல்கின்றனர். ஒரு வீரன் மட்டும் விரைந்து சென்று பகைத் தலைவனை வழி மறைத்து வீரர்களுடன் போரிட்டுப் பசுக்களை மீட்டு வந்து தமது தலைவனிடம் ஒப்படைக்கிறான். இவனது இந்த வீரம் பகைத் தலைவனுக்கு செருப்புக்கும் பாதத்திற்கும் இடையில் சிக்கிய சிறு கல் போல் இருந்து மிகவும் உறுத்தியதாம்; வருத்தியதாம்.


"செருப்பு இடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கன்
குச்சின் நிரைத்த குருஉமயிர் மோவாய்ச்
செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
யார் கொலோ அளியன் தானே".... - என்று நீள்கிறது இந்தப் புறப்பாடல் (257)

அந்த வீரனின் புறத்தோற்றத்தை இவ்வாறு சொல்லோவியமாக்கிக் காட்டுகிறார் புலவர். அவன் திரண்ட கால்களை உடையவன். அழகிய வயிற்றை உடையவன். குச்சுப்புல் நிரைத்தது போன்ற நிறம் பொருந்திய தாடியை உடையவன். காதுகளையும் கடந்து செல்லும் முன்னே தாழ்ந்த கதுப்பினையுடையவன்.

*****

கடத்திச் சென்ற பசுக் கூட்டங்களை மீட்டு வருகையில் இந்தத் தலைவனைப் பகைவர்கள் சூழ்ந்து நின்று கொன்று விடுகின்றனர். அவனுக்கு நடுகல், அதாவது நினைவுச்சின்னம் எழுப்பி ஊரார் போற்றி வணங்குகின்றனர். இந்நிலையில் அவ்வூருக்கு வருகை தரும் பாணன் ஒருவனை நோக்கி இவ்வாறு கூறுகிறான் தலைவனின் நண்பன்:

"ஒரு பெரிய ஆண் யானையின் காலடியைப்போல விளங்கும் ஒரு கண்ணையுடைய பெரிய பறையையுடையவனே! இரவலனே! புகழ் பூத்த எம் தலைவனின் நடுகல்லை வணங்கிச்செல்க. அப்பொழுதுதான் நாட்டில் மழை பொழியும்; வளம் கொழிக்கும்; மலர்கள் நிறைந்த இடத்தில் தேனை உண்ண வண்டுகள் மொய்க்கும்'' என்று தனது நம்பிக்கையையும் தெரிவிக்கிறான். தலைவன் மீது கொண்ட பற்றினை விளக்கும் புறப்பாடல் இதோ:


"பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
வண்டுமேம் படூஉம் இவ் வறநிலை யா
ேபல்லாத் திரள்நிறை பெயர்தாப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விளங்கியோன் கல்லே!" - (புறம்-263)
*****

வீரனொருவன் பகைவரின் யானைகளைக் கொன்றுவிட்டு தானும் புண்பட்ட நிலையில் நிற்கிறான். அவ்வேளையிலும் தம்மைத் தாக்கவரும் யானையை எதிர்த்துக் கொல்கிறான். அவனது இந்த வீரத்தைக் கண்ட அவனது மன்னனும், இத்தகைய போர்க்களத்தில் இறப்பதைவிடவும், புலவர்களால் பாராட்டப்பெறும் சூழல் நமக்கு வேறில்லை என உணர்ந்து போரிட்டு இறந்துவிடுகிறான். அத்தகைய தலைவன் இப்போது எங்கு உள்ளானோ என்கிறார் புலவர்.


"ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றோடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
....... ........ .........


நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும் இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ....." (புறம்-307)

இங்கே ஓர் உவமை! எதிர் வரும் பகைவரையெல்லாம் தீர்த்துக் கட்டுகிறான் இந்த வீரன். இது எப்படி இருக்கிறதென்றால், "புல்லும் நீரும் இன்றி, உப்பு வாணிகரால் கைவிடப்பட்ட - முடமாகிவிட்ட எருமைக்கடா தன்னருகே உள்ள அனைத்தையும் தின்று தீர்த்துவிடுவதைப் போல் உள்ளது," என்கிறார் புலவர்.

இந்தப் பாடல் தலைவனொருவனின் ஊர்நலம் கூறும் பாங்கினைக் கொண்டுள்ளது. ஆம்! இவ்வூரில், புலியிடம் அகப்பட்டுக்கொண்டு பிறகு தப்பித்தாவிச் செல்கின்ற ஒரு மான் கன்றுக்குச் சினமில்லாத ஒரு முதிய பசு தன் பாலைத் தரும் பண்புடையது. மேலும் பரிசிலரான பாணர்க்கு அவர்கள் எண்ணிய வண்ணம் நல்கும் ஈகை; போர்க்களத்தில் உரல் போன்ற கால்களையுடைய களிற்றைக் கொல்வதற்காக மட்டும் வாளை உறையினின்றும் எடுக்கும் பண்பு இவற்றை உடையவனது ஊராம் இந்த ஊர்.


"புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும்
கா...........பரிசிலர்க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
வெள்வேல் ஆவம் ஆயின் ஒள்வாள்
கறையடி யானைக்கு அல்லது
உறை கழிப் பறியா வேலோன் ஊரே!" - (புறம்-323)

கவிமாமணி டாக்டர் வேலூர் ம. நாராயணன்.

நன்றி: தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

தமிழியல் ஆய்வுகள்: தேவை நேர்மையும் உழைப்பும்

0 மறுமொழிகள்
தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் ஆந்திரம், கர்னாடகம், புதுதில்லி முதலான மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் பல தமிழியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக் கழகங்களில்
ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்),
முனைவர் (பி.எச்.டி)
பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இன்றைக்கு வெளிவருகின்ற ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகள், ஆய்வு மற்றும் திறனாய்வு நூல்கள் தகுதி உடையனவாக இருக்கின்றனவா என்பதில்தான் நமக்குக் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

இன்றைக்குக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்குச்
சுவடிகளைப் படித்தல்,
படியெடுத்தல்,
பதிப்பித்தல்,
மெய்ப்புத் திருத்தம் செய்தல்
தொடர்பாக ஒரு தாளைப் பாடமாக வைத்தல் வேண்டும். பழந்தமிழ் இலக்கியங்கள் முழுவதும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன. வருகின்ற கல்வியாண்டில் சில பல்கலைக் கழகங்களில் தமிழ் முதுகலையில் செம்மொழித் தமிழ் பாடமாக நடத்தவிருக்கும் நிலையில் இவற்றைத் தொடர்புடைய அறிஞர்கள் கவனத்தில் கொள்வது சிறந்ததாக இருக்கும்.

மறைமலை அடிகளார்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
பட்டினப்பாலை ஆராய்ச்சி
என்று ஆய்வு செய்து ஆய்வுக்கு புத்தொளி பாய்ச்சினார். இவரது "மாணிக்கவாசகரின் வரலாறும் காலமும்" என்ற ஆய்வு நூல் கால ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவியது. அடிகளார் தொடங்கிய கால ஆராய்ச்சி அவருடைய மாணவரான பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளையால் தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்வேறு கால ஆராய்ச்சியை மேற்கொள்ளச் செய்தது.

இதனைத் தொடர்ந்து;
தமிழ் தாத்தா உ.வே.சா.,
எம்.எஸ்.பூர்ணலிங்கம்பிள்ளை,
நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்,
ரா.இராகவையங்கார்,
மு.இராகவையங்கார்,
கா.சுப்ரமணிய பிள்ளை,
தஞ்சை கே.சீனிவாச பிள்ளை,
பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்,
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்,
ஔவை சு.துரைசாமிப்பிள்ளை,
விபுலானந்த அடிகளார்
முதலான அறிஞர்கள் தமிழ் ஆய்வில் ஈடுபட்டுப் புத்தொளி ஊட்டினர்.

இவர்களை அடியொற்றிப் பல்கலைக்கழக அளவில் ஆய்வேடுகளை அளித்து ஆய்வு நெறிமுறைகளைத் தொடங்கி வைத்த பெருமைக்குரியவரான
ரா.பி.சேதுப்பிள்ளை,
பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்,
மு.வரதராசன்,
அ.சிதம்பரநாதன் செட்டியார்,
வ.சு.ப.மாணிக்கம்,
மா.இராசமாணிக்கனார்,
மொ.அ.துரையரங்கனார்
போன்றவர்கள் விளங்கினர். தொடக்கக் காலத்தில் பரந்துபட்ட தலைப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர்த் தனித்தனி நூலாய்வாக விரிவடைந்தது.

இந்நிலையில் ஆய்வு நெறியாளர்கள் பெருகி, ஆய்வாளர்களின் எண்ணிக்கை பன்மடங்காயிற்று. தொடக்க நிலையில் ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் ஒரே தலைப்பில் வேறுவேறு பல்கலைக் கழகங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. காலப்போக்கில்
நுண்ணாய்வு,
திறனாய்வு,
ஒப்பாய்வு,
நாட்டுப்புறவியலாய்வு,
உளவியல்,
கவிதை,
நாடகம்,
சிறுகதை,
நாவல்,
பெண்ணியம்
என்றிவ்வாறு பன்முகநோக்கில் ஆய்வுகள் பல்கிப் பெருகின.

இன்றைய நிலையில் இந்தியாவில் அறிவியல் துறைகளில் நிகழும் ஆய்வுகள் உலகத் தரத்துக்கு உயர்ந்துவிட்டன. அந்த அளவிற்கு,

தமிழியல் ஆய்வுகளின் தரம் உயர்ந்து நிற்க வேண்டாமா?

எத்தனை அறிஞர்களின் தமிழ் ஆய்வுகள் பிறரால் மேற்கோள்களாகக் காட்டப்படுகின்றன?

இதனால் அனைத்து ஆய்வுகளும் தகுதி அற்றன என்று எவரும் கருதிவிடக்கூடாது. தகுதியுடைய தமிழியல் ஆய்வுகள் நூற்றுக்கு இருபது விழுக்காடு என்பது மிகமிகக் குறைவாகும். ஆராய்ச்சிக்குச் செலவு செய்யப்படும் பணத்திற்கு இது போதாது.
பல பல்கலைக் கழகங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்கின்றனர். ஆனால் ஒரு சிலர்தான் முறையாக ஆய்வு செய்து ஆய்வேட்டை அளிக்கின்றனர். இவற்றுள் தகுதியான ஆய்வேட்டை உருவாக்குவது நெறியாளரின் கையில்தான் இருக்கிறது.

ஆய்வுக்கு வரும் எந்த மாணவரும் எதைப்பற்றி ஆய்வு செய்யப்போகிறோம் என்ற தெளிவில்லாமலேயே வருகின்றனர். சில நேரங்களில் நெறியாளரே ஆய்வுத் தலைப்பைக் கொடுத்து, படிக்க வேண்டிய நூல்களைக் குறித்துக் கொடுத்து, படிக்க வைத்து, செய்திகளைத் திரட்டச் செய்து மாணவரை வேலை வாங்க வேண்டியிருக்கிறது. இன்றைக்குக் கணினி மூலம் இணையத்தின் வழி ஆய்வாளருக்குத் தேவையான அனைத்துத் தரவுகளையும் பெறமுடியும்.

இன்றைக்கு எத்தனை விழுக்காடு ஆய்வாளர்கள் இணையத்தைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தேவையானத் தரவுகளைத் திரட்டுகிறார்கள்?
அதேபோல இன்றைக்கு ஆய்வேடுகளில் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இலக்கண ஆய்வை மேற்கொள்கின்ற ஆய்வேடுகளில் கூடப் பிழைகள் தாராளமாக இருக்கின்றன. தமிழில் "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பதற்கேற்ப ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு. அதேபோல, ஒவ்வொரு புள்ளிக்கும் அதாவது மெய்யெழுத்துக்கும் பொருள் உண்டு.


திருமண அழைப்பிதழில் "எம்பெருமான் திருவருளால்" என்று இருக்கின்ற இடத்தில் "எமபெருமான் திருவருளால்' என்று தவறுதலாக அச்சானால் சரியா?

மெய்யெழுத்துக்குப் புள்ளி இல்லாத காரணத்தினால் பொருளே மாறிவிடும். எனவேதான் ஆய்வேட்டில் பிழைகள் இல்லாமல் வருதல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதேபோல இன்றைக்கு ஆய்வேடுகளில் "திருட்டு போக்கு" மலிந்துவிட்டது. வெளிநாடுகளில் ஒரு சிறிய ஆய்வுத்திருட்டுகூட அவருடைய ஆசிரியர், ஆய்வு வாழ்வுக்கு முடிவு கட்டிவிடும். உரையாடும்போது கூறும் செய்திகளைக்கூட அவர்கள் தங்கள் ஆய்வுகளில் "இன்னார் கூறியது" என்று ஒத்துக்கொள்வர். ஆனால் இங்கோ பெரும் போராசிரியர்கள் பிறர் எழுதிய நூலையே தம் பெயரில் வெளியிட்டு விடுகின்றனர்.

ஆய்வுலகில் இன்றைக்கு மிகமிக வேண்டியது நேர்மை. புலமை குறைந்திருந்தால் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் ஆய்வில் நேர்மை கெட்டால் ஆசிரிய சமூகமே அவர்களை ஒதுக்கித்தள்ளி தண்டிக்க வேண்டும். எந்தத் திருட்டுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் இவ்வாறு இலக்கியத் திருட்டு செய்பவர்களுக்கு மன்னிப்பே அளிக்கக்கூடாது. அப்போதுதான் ஆய்வுலகம் செம்மையுறும். ஆய்வேடுகளின் சீரழிவுக்கு 80 விழுக்காடு நெறியாளரும், ஆய்வேடுகளை மதிப்பிடுபவர்களுமே காரணமாவர். ஆய்வை வழிநடத்தும் பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு ஆய்வு மாணவர்களைப் பார்ப்பதற்கே நேரம் இருப்பதில்லை. இதுதான் இன்றைய நிலை.

மேலும் இக்காலத் தமிழியல் ஆய்வில் பிறதுறையறிவு மிகவும் தேவை. முனைவர் பட்ட ஆய்வுகள் புதிய கோட்பாடுகளை வகுக்கும் போக்கிலோ அல்லது அதற்குத் துணைபுரியும் போக்கிலோ அமைதல் வேண்டும். இக்கால அறிவியல் கருவிகளைப் பயன்படுத்திப் புதிய புதிய கருத்துக்களை ஆராய்ந்து எண்ணிப்பார்த்து ஆய்வேடுகளில் அவற்றைப் பயன்படித்த வேண்டும்.


தமிழியல் ஆய்வுகள் ஒருங்கிணைந்த ஆய்வாகப் பல்துறையறிவுடன் அமையவேண்டும். அத்துடன் ஆய்வாளர்களின்
ஆய்வுப்பொருள் பற்றிய அறிவு,
ஆய்வுப்பற்று,
தன்முயற்சி,
விடாமுயற்சி,
பொறுமை,
உரிமை ஒப்படைப்பு,
நுண்ணோக்கு,
அயராத உழைப்பு,
நடுவுநிலைமை,
எண்ணித்துணிதல்
ஆகிய பத்துக் கூறுகள் அமைதல் வேண்டும்.

ஆய்வாளராகத் தன்னைப் பதிவு செய்தவுடனேயே அவற்றைக் கருத்தில் கொண்டு ஆய்வை மேற்கொண்டால் அது ஆய்வாளருக்கும், ஆய்வு நெறியாளருக்கும் பெருமை தருவதோடு தமிழியல் ஆய்வும் செம்மையாக அமைந்து தமிழ்ச் சமுதாயத்துக்குத் தகுந்த பலனளிக்கும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி

நன்றி: தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

ஸ்ரீ மஹா பாரத பர்வங்கள்

1 மறுமொழிகள்
ஸ்ரீ மஹா பாரத பர்வங்கள் என்ற தலைப்பில் கும்பகோணம் கல்லூரி சமஸ்கிருத பண்டிதர் தி.ஈ. ஸ்ரீநிவாசாச்சாரியாரல் மொழிபெயர்க்கப்பட்டு அதே கல்லூரி தமிழ் பண்டிதர் ம.வீ. இராமானுஜாசாரியாரால் தொகுக்கப்பட்டு 1908 லிருந்து வெளிவரத்தொடங்கிய மகா பாரத தமிழ் மொழிபெயர்ப்பு முழுதும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவர 1932 வரையிலான காலம் தேவைப்பட்டது. அது வெளிவந்த காலத்திலே சுதேசமித்திரன் ஹிந்து போன்ற பத்திரிகைகளால் பெரிது பாராட்டப்பட்டது. உ.வே.சாமிநாதய்யர் கூட, இக்காரியத்தை தானே செய்யும் எண்ணத்திலிருந்ததாகவும், ஆனால் ம.வீ. இராமானுஜாச்சாரியரின் வெளியீடுகளைப்பார்த்த பிறகு தான் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டதாகவும் பாராட்டியிருக்கிறார்.

அதன் பிறகு இந்த மஹாபாரத மொழிபெயர்ப்பு மறு பதிப்பு வெளிவந்ததில்லை. 80 ஆண்டுகளுக்கு மேலான இந்த இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன்ஸின் எஸ். வெங்கட் ரமணன் 2002 லிருந்து ஸ்ரீமஹாபாரத பர்வங்கள் என்ற அதே தலைப்பில் பாகம் பாகமாக மறு பதிப்பு கொண்டு வந்துள்ளார். அனுசாசன பர்வத்திலிருந்து ஸ்வர்காரோஹண பர்வம் முடிய உள்ள 9-வது பாகம் இப்போது வெளிவந்துள்ளது. இதோடு 1902-1932 காலத்தில் வெளிவந்த ஸ்ரீ ம்.வீ ராமானுஜாச்சாரியாரின் மகா பாரத மொழிபெயர்ப்பின் மறு பதிப்பு முற்றுப்பெற்றுள்ளது. ஒவ்வொரு பாகமும் சுமார் 800 பக்கங்களிலிருந்து 1100 பக்கங்கள் கொண்டது. ஒவ்வொரு பாகத்தின் விலை ரூ. 450/-

அவ்வப்போது இந்த மறுபதிப்பு பாகம் பாகமாக வெளிவந்து கொண்டிருந்த போது என் நண்பர்களுக்கு நான் இதை அறிவித்து வந்திருக்கிறேன். 9-வது பாகம் கடைசியாக இப்போது வெளிவந்ததும் இக்காரியம் இது பற்றிய செய்தி, இப்படித்தான் தெரிந்தவர்கள் அடுத்தவர்களுக்குச் சொல்லி பரப்பட்டு வருகிறது. பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும் சக்தி இல்லாத காரணத்தால். இப்பதிப்பு தவிர ஸ்ரீ மகாபாரதத்தை முழுமையாக தமிழ் மொழிபெயர்ப்பில் தரும் பிரசுரம் வேறு இப்போது இல்லை.

வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

S.Venkatramanan,
Shri Chakra Publications,
Door No. 14, Valmiki Street,
Plot No. 78, Selvaraj Nagar Ext-2
Urappaakkam (West)
PIN 603 211 Ph no.044 - 27466110 Shri Mahabharata Parvangal. 9 volumes. Rs 450 (each vol)

இது என்னால் ஆன அணில் சேவை. அவ்வளவே.

வெங்கட் சாமிநாதன்.

களப்பிரர் காலக் குடைவரைக்கோயில்

0 மறுமொழிகள்
வரலாற்றின் கட்டுமானத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு நினைவுச்சின்னங்களுக்கும், இலக்கியங்களுக்கும் உண்டு. நினைவுச் சின்னங்களில் குறிப்பிடத்தகுந்தவையாக கருதப்படுவது அழியாச்சின்னங்களாக இன்றுவரை "இறவாப்புகழுடன்'' விளங்கி வரும் கோயில்களைக் குறிப்பிடலாம்.

மனிதனின் சமயப்பற்றினை வெளிக்காட்டும் ஆதார சான்றாக எழுப்பப்பட்டதே "கோயில்'' எனலாம். காலத்தால் முந்தைய பல குடவரைக் கோயில்களையும், எண்ணிலா வரலாற்றுக் கல்வெட்டுகளையும் தன்னகத்தே கொண்டது பாண்டியநாடு. பாண்டியநாட்டின் வரலாற்றிச் சின்னங்களுள் ஆண்டிச்சிப்பாறை குடைவரைக் கோயிலுக்கும் இடம் உண்டு. அறியப்படாத பழைமையான நினைவுச் சின்னங்களில் இதுவும் ஒன்று.

குகைக்கோயிலின் அமைவிடம்:

தென்பாண்டி நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியிலிருந்து இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள கிராமமே "பதினாலாம்பேரி''. இதற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள குடைவரைக்கோயிலே "ஆண்டிச்சிப்பாறை குடைவரைக்கோயில்''. அப்பாறையை ஆங்கிலத்தில் ''Beddar women's rock'' என்று திருநெல்வேலி மாவட்ட தல பேரகராதி குறிப்பிடுகின்றது. இதன் அருகாமையில் காணப்படும் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னம் "மறுகால்தலை சமணர் கற்படுக்கை'' .

கோயிலின் அமைப்பு:

குடைவரைக் கோயிலானது மலையின் வலப்புறச்சரிவில் குடையப்பட்டுள்ளது. கோயிலின் வாயில் கிழக்கு நோக்கி இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. வாயிலின் பக்கவாட்டுச் சுவர் இருபுறமும் ஒரே அளவினதாக இல்லாமல் ஒருபுறம், மற்றொரு புறத்தைவிட பருமனாகவும், சீரற்ற நிலையிலும் காட்சியளிக்கிறது. மேற்புறம் சீராக செதுக்குவதற்கு முயற்சிகள் நடந்திருப்பதை காணமுடிகிறது. கோயிலின் கருவரை சதுரமானதாகவே காட்சியளிக்கிறது. கோயிலின் உட்பகுதியானது ஐந்து அடி அகலத்தையும், ஏழு அடி உயரத்தையும் கொண்டதாகக் குடையப்பட்டுள்ளது. இக்குடையப்பட்ட அறையின் இடப்புறத்தில் வாயிலை ஒட்டிய பகுதியில் விநாயகர் உருவமும், அதன் இடப்புறம் பின் உள்ள பாறையில் பெண் தெய்வம் ஒன்று அமர்ந்திருப்பது போன்ற உருவமும் புடைப்புச் சிற்பமாக (Bas relief) காட்சியளிக்கிறது.

குடைவரையின் வெளிப்புறம் இருபுறமும், தூண்களை உருவாக்க மேற்கொண்ட குடைவுப் பணியானது முற்றுப் பெறாத நிலையில் இருப்பதைக் கண்டுணர முடிகிறது. தூணில் அதிக வேலைப்பாடுகள் இல்லை. குடைவரையின் நடுப்பகுதியில் பீடம் மட்டும் உள்ளது. பீடத்தின் மையப்பகுதியில் வட்ட வடிவிலான உருவம் ஒன்றை செதுக்க முயன்றுள்ளதையும் காணமுடிகிறது. பீடத்தின் இருபுறமும் ஆராதனை செய்யும் மங்கலநீர் கீழே விழுந்து தேங்குவதற்கு வட்டவடிவிலான குழி அமைக்கப்பட்டுள்ளது.

குடைவரையின் இடப்புறம், மேலும் ஒரு குடைவரையினை உருவாக்கிட முயன்றுள்ளதை காண முடிகிறது. ஆனால் அப்பணியும் தொடக்க வேலைப்பாட்டுடனேயே முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. மலைப்பகுதியின் நடுவில் இக்குடைவரை ஏற்படுத்த முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். குடைவரையின் மேற்புறம், சுற்றுப்புறம் போன்றவை கடினமான பாறைகளைக் கொண்டதாகவே காட்சியளிக்கிறது.

விநாயகர் உருவம்:

பரிவார தெய்வமாக விநாயகரின் புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் உருவமானது அதிகளவு நுண்ணிய வேலைப்பாடுகள் இல்லாதவாறு உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகர் இருகரங்களை உடையராகவே காட்சியளிக்கிறார். வலதுபுறத்தந்தம் சற்று ஒடிந்த நிலையிலும், இடப்புறத்தந்தம் முழுமையாக இருப்பது போலவும் உள்ளது. அகன்ற காதுகளை உடையவராகவும், தலையில் மகுடம் இல்லாமலும் விநாயகர் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமர்ந்த நிலையில், தும்பிக்கை இடப்புறம் வளைந்த நிலையில் காணப்படும் விநாயகர், வலக்கரத்தில் "சங்கினை" ஏந்தியவராக காட்சியளிக்கிறார். விநாயகரின் ஆடை மடிப்புகூட தெளிவாக இச்சிற்பத்தில் காணமுடிகிறது.

பெண் தெய்வத்தின் உருவம்:

விநாயகருக்கு வலப்புறம் பின்புறப்பாறையில் பெண் தெய்வத்தின் உருவம் புடைப்புச் சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெண்ணின் தலையில் வட்டவடிவிலான "மகுடம்'' அணிவிக்கப்பட்டு, கண்கள் மூடியவாறும், மார்புக் கச்சை அணிந்தவாறும், காதுகள் நீள்காதுகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. காதில் எவ்வித அணிகலன்களும் இல்லை. ஆடை வகையினை தெளிவாக காண இயலவில்லையென்றாலும், தொடை வரையிலான ஆடையை அணிந்திருப்பது தெரிகிறது.



இருகால்களையும் தரையில் ஊன்றிய நிலையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலையின் பீடத்தினை உற்று நோக்க, மலரினை தலைகீழாக கவிழ்த்திருப்பது போன்ற உருவம் புலப்படும். வலது மணிக்கட்டில் "வளையல்'' போன்ற ஒரு அணியை இப்பெண் அணிந்திருக்கிறாள். பெண்ணின் வலக்கரத்தில் மலரை ஏந்தியிருப்பது போன்றும் இடப்புறத்தில் "சேடிப்பெண்'' சாமரம் வீசுவது போன்றும், சேடிப்பெண்ணின் சிகையலங்காரமும், பெண் தெய்வத்தின் அலங்காரமும் ஒன்று போலவே காட்சியளிக்கின்றன. பெண் தெய்வத்தின் காலில் எவ்வித அணியும் இல்லை. இக்குடைவரையினை பொறுத்தமட்டில் இவ்விரண்டு புடைப்புச் சிற்பங்கள் மட்டுமே காணப்படுகின்றன.

குடைவரைக் கோயிலின் மேற்பகுதி வேலைப்பாடுகள் பெருமளவில், முதலாம் மகேந்திரவர்மனால் குடைவிக்கப்பெற்ற மகேந்திரவாடி குகைக்கோயிலின் முகப்பினை ஒத்துக் காணப்படுகின்றன. தூண்கள் வேலைப்பாடு இல்லாதது பல்லவரது தொடக்ககால குடைவரையின் சிறப்பம்சம் எனலாம். முதலாம் மகேந்திரவர்மனே, "மலைப்பாறைகளைக் குடைந்து, குகைக்கோயில்களை முதன்முதலாக அமைத்தான்" என்பதை மண்டகப்பட்டு கல்வெட்டு உணர்த்தும்.

பாண்டியர்களின் கூரை முகப்பின் மேற்புறத்தோற்றம், வேலைப்பாடு நிறைந்ததாக இல்லை. பெரிய மண்டபங்களும், உயர்ந்த விமானங்களும் இல்லை. பாண்டியரது பெரும்பாலான குடவரைகளில் மாடங்கள் குடையப்பெற்று, அவற்றில் தெய்வத் திருமேனிகளின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக உருவாக்கப்பட்டிருக்கும். இவ்வொற்றுமைகள் அனைத்தும் "ஆண்டிச்சிப்பாறை குடைவரை கோயிலுக்கும் பொருந்துகிறது". ஆனால் முற்காலப் பாண்டியர்கள், பல்லவர்கள் குகைக்கோயில்களை அமைக்கும் முன்னரே "குடைவரைக்கோயில்களை அமைத்தனர். பாண்டியர்களால் குடைவிக்கப்பட்ட பிள்ளையார்பட்டி குடைவரையே காலத்தால் முந்தயது. இங்கு காணப்படும் தமிழ்ப்பிராமி எழுத்துக் கல்வெட்டே இதற்கு சான்றாகும்''.

பிள்ளையார்ப்பட்டி குகைக்கோயிலானது களப்பிரர்கள் காலத்தில் உண்டாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற கருத்தும் வரலாற்றாளர்களால் வலியுறுத்தப்படுகிறது. இவற்றை ஆராயும்போது ஆண்டிச்சிப்பாறை குடைவரைக்கோயில் முற்காலப் பாண்டிய மன்னர்களின் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று எண்ணுவதற்கு வாய்ப்புண்டு. ஏனெனில் பாண்டிய மன்னர்கள் ஊருக்கு வடகோடியில் சப்த மாதர் உருவங்களை சாஸ்தா கணபதியுடன் அமைத்திருந்தனர். சாஸ்தா இருந்த இடத்தில் சிவன் வீரபத்திரனாகவும், ஐராவதம் இருந்த இடத்தில் விநாயகரும் வடிவமைக்கப்பட்டதை அறியமுடிகிறது. மேலும் தொடக்க காலத்தில் கணபதிக்கு இரு கைகளே அமைக்கப்பெற்றன. விநாயகர் இல்லாமல் பாண்டியர் குடைவரை அமைக்கப்பட்டதில்லை. பிள்ளையார்பட்டி விநாயகர் பாண்டியர்களின் குடைவரை கோயிலமைப்பிற்கு சான்றாக விளங்குபவர். இவையணைத்தையும் கொண்டு ஆராய்கையில் ஆண்டிச்சிப்பாறை குகைக்கோயில் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததே என்று முடிவு கொள்ளலாம்.

ஆய்வாளர் இல. கணபதிமுருகன்

நன்றி: தினமணி


மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

தமிழ் வழியில் உயர் கல்வி

0 மறுமொழிகள்
அண்மையில் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக செனட் பேரவை முதுகலையில் (எம்.ஏ.) அரசியல் மற்றும் பொது நிர்வாகப் படிப்பை மாணவர்களுக்கு தமிழ் வழியில் பயிற்றுவிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

150 ஆண்டுகளைக் கடந்த சென்னைப் பல்கலைக்கழகம் முதன்முதலாக முதுகலையில் தமிழ் வழிக்கல்வி முறையை அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறையில் துவக்கியிருப்பதும், இளங்கலை பட்டப்படிப்பை கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் முதல் இரண்டாண்டுகள் தமிழைக் கட்டாயம் ஒரு பாடமாகக் கற்க வேண்டும் என்ற அரசின் அறிவிப்பும் அனைத்துத் தரப்பு தமிழ் ஆர்வலர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

தாய்மொழியில் உயர்கல்வி என்ற சிந்தனை இப்போதுதான் அரும்புவதுபோல் இந்த அறிவிப்புகள் மூலம் தோற்றமளித்தாலும் இதற்கான வித்து எப்போதோ ஊன்றப்பட்டது. இன்றுவரை இம்முயற்சி ஏன் முற்றுப் பெறவில்லை என்பதே இன்று நம் முன்னர் உள்ள கேள்வி?

தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இருந்த பசுமைப்புரட்சிக்கு வித்திட்டவர் என்று அனைவரின் பாராட்டைப் பெற்ற சி. சுப்பிரமணியம், உயர்கல்வியில் தமிழ்வழிக் கல்விக்கான ஆரம்பக் கட்டப் பணிகளைத் துவக்கியவர் என்றால் அது மிகையாகாது. பள்ளிக்கல்வி வரை தமிழ்வழி பயிற்று முறையில் பயின்றவர்கள் கல்லூரிக் கல்வியை எட்டிப் பிடித்ததும் ஆங்கில வழியில் பயில வேண்டிய கட்டாயம் அன்றைய நாளில் இருந்து வந்தது. அந்நிலையைப் போக்க, பட்டப்படிப்பிலும் தமிழ் வழியில் மாணவர்கள் பயில வேண்டும் என்ற நோக்கில் சி.எஸ். அன்றைய தினம் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்களை அழைத்து இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடங்களைத் தமிழில் மொழி பெயர்த்து பாடப் புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்ற யோசனையை வெளியிட்டார். அதையடுத்து இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கென தமிழ் வழிப் பாடப்புத்தகங்கள் பல அன்றைய தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் வாயிலாக வெளியிடப் பெற்றன.


அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் வாயிலாக இன்றைய முதல்வர் 1970-இல் முதல்வராகப் பொறுப்பில் இருந்தபோது இந்தப் பணி மேலும் முடுக்கிவிடப்பட்டு, புத்துயிர் பெற்றது. அதன் பயனாய்
வரலாறு,
பொருளாதாரம்,
வணிகவியல்,
சட்டவியல்,
இயற்பியல்,
புவியியல்,
இயைபியல்
போன்ற துறைகளில் தமிழ்வழிக் கல்வியை, கல்லூரி நிலையிலும் தொடரும் வகையில் பல புத்தகங்கள் வெளியிடப் பெற்றன. இதனால் கல்லூரிகளில் இளங்கலையில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாயிற்று. மேலும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் அனைவருக்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, தமிழ்வழிப் பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்குவது என்ற திட்டத்தையும் அரசு அறிவித்தது. அரசுக் கல்லூரிகளில் மட்டுமே தமிழ் வழியில் பயிலும் வசதி இன்றுவரை இருந்து வருகிறது. இங்கு பயில்பவர்கள் பெரும்பாலும் கிராமத்திலிருந்து வருகின்ற அடித்தட்டு சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களே. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் முதுகலை படிப்பைத் தமிழ்வழியில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது என்று சொல்வதைக் காட்டிலும் அதற்குரிய வசதிகள் இல்லை என்று சொல்வதே சாலப் பொருத்தமாகும்.

குறிப்பாக பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் பட்டப்படிப்பைத் தமிழ்வழியில் பயில இன்றுவரை அதற்குரிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பை தமிழ்வழியில் தொடர எண்ணும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் தமிழில் இல்லை என்று சொல்லுமளவில் தான் இன்று வரை நாம் உள்ளோம்.

தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அறிவியல் கழகம், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் போன்ற அமைப்புகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்தாலும் முதுகலை படிப்பு மாணவர்களுக்கென அறிவியல் மற்றும் பொறியியல் துறை பாடங்களில் தமிழாக்கங்கள் இன்றுவரை போதிய அளவில் அந்நிறுவனங்களால் கொண்டு வரப்படவில்லை. தமிழகத்தில் உள்ள எந்தப் பல்கலைக்கழகத்திலும் முதுகலை படிப்பைத் தமிழ்வழியில் பயில்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இந்த நிலை முற்றிலும் களையப்படுவதோடு அதற்குரிய வாய்ப்புகளையும் தமிழகப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கித் தர வேண்டும்.

முதுகலை படிப்பையே இன்று வரை தமிழ்வழியில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது ஒரு புறம். முதுகலை படிப்புக்குப்பின் ஆய்வுப்பட்டங்களைப் பெற எண்ணுபவர்களுக்கு, அந்த ஆய்வுகளைத் தமிழ் வழியில் மேற்கொள்வதற்கான வழிகாட்டிகளும் இல்லை, வசதிகளும் இல்லை என்பதும் அதன் மறுபுறம். தமிழ் வழியில் பயில்வதற்கான முழுமையான வசதிகள் ஏற்படுத்தி இருப்பின் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அதற்குரிய வாய்ப்புகளோ, வசதிகளோ இல்லாமல் தமிழ் வழியில் பயில வேண்டும் என்று சொன்னால் அதுவே உண்மைக்குப் புறம்பானதன்றோ! எது எப்படியோ, நம் அறிவியல் மற்றும் கலையியல் பேராசிரியர்களும், அறிஞர்களும் தமிழ் வழி நின்று ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டவில்லை என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை. அதே நேரத்தில் சில பேராசிரியர்கள் தங்களது அறிவியல் ஆய்வுகளையும், படைப்புகளையும் தமிழில் கொண்டு வந்த போதும் அது தமிழ்வழித் தேடலுக்குப் போதுமானதாக இல்லை. அப்படிப்பட்டவர்கள் மேற்கொண்ட முயற்சி சமுதாயத்தில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்ற கூற்றையும் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். தமிழ் மொழியில் நன்கு புலமை பெற்ற அனுபவமிக்க கல்வியாளர்களை இதுபோன்ற முயற்சிகளில் நாம் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொண்டோம் என்ற கேள்வியையும், நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.


தமிழ் மொழி தன் தொன்மையாலும், இலக்கணச் செறிவாலும், இலக்கிய வளத்தாலும் செம்மொழி என்ற தனிப் பெருமையை இன்று பெற்றுள்ளது என்பது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பெருமை. அப்பெருமையோடு நாம் நின்றுவிடாமல் மற்ற துறைகளான
அறிவியல்,
பொறியியல்,
மருத்துவ இயல்,
உயிரியல்,
பயிரியல்,
உடற்கூறியல்,
வானியல்,
கடலியல்,
நிலவியல்,
கலை அறிவியல்,
சமூகவியல்,
பொருளியல்,
நிர்வாகவியல்,
சட்டவியல்,
அரசியல்
போன்ற அனைத்துத் துறைகளிலும் உயர்கல்வியைத் தமிழ் வழியில் பயில வேண்டும் என எண்ணுவோருக்குத் தேவையான வகையில் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்று எண்ணுமளவுக்குத் தமிழ்மொழியில் நூல்களைப் படைத்தாக வேண்டும். அனைத்துத் துறைகளிலும் தமிழ்மொழி மூலமாக முதுகலை படிப்பும், ஆராய்ச்சியும் மேற்கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் உயர்கல்வியில் புதிய உத்திகளையும், புதிய திறனாய்வு முறைகளையும் தமிழில் உருவாக்குவதற்கான அடிப்படைக் காரணிகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் தமிழாய்ந்தவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், அறிவு ஜீவிகளுக்கும், அரசுக்கும் இருக்கிறது.

செம்மொழி என்ற மதிப்பை - உரிய உயர்வைத் தமிழ் மொழிக்குப் பெற்றுத் தந்த தமிழ்நாடு அரசு மட்டுமே இதற்கான முயற்சிகளை எடுக்க முடியும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் முயற்சிகளால் எட்டப்படும் இலக்கின் மூலம் சிலர் அதன் பயனை முழுமையாக நுகர்ந்த பின்பு தான் அதன் பெருமை சமுதாயத்துக்குத் தெரியவரும். அதுவே பின்னர் உயர்கல்வியையும், ஆராய்ச்சியையும், தமிழ் வழியில் மேற்கொள்ள உதவும். அதன்வழி நின்று சாதனைகள் படைக்க வேண்டும் என்ற உணர்வை அதிக அளவில் மக்களிடையே ஏற்படுத்துவதற்கு வழி வகுக்கும். இப்படிப்பட்ட முயற்சிகளே சிறப்பான ஆய்வுகள் தமிழில் வெளிவருவதற்குப் பெருந்துணை புரியும். இத்தகைய தமிழ் வளர்ச்சியைக் கனவு கண்டு முயன்று நம்முன் வைத்துவிட்டுச் சென்ற புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தம் கருத்தாக,

"உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!
------------------------

எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோமில்லை.
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்'' - இந்நாள் எந்நாள்?

வி.சீ. கமலக்கண்ணன்
(கட்டுரையாளர்: தலைவர், சென்னைப் பல்கலைக்கழக அலுவலர் பேரவை)

நன்றி:தினமணி தலையங்கம்

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

பதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும் (2)

0 மறுமொழிகள்
பதங்களையோ ஜாவளியையோ இப்படி வார்த்தைகளைக் கேட்டு நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது. ஏனெனில் அன்று ஆடிக்கொண்டிருந்தவர்கள், கௌரி அம்மாள், பாலசரஸ்வதி போன்றவர்கள். அபிநய தர்ப்பணை ஆங்கிலத்தில் எழுத ஆனந்த குமாரஸ்வாமிக்கு உதவியவர் மைலாப்பூர் கௌரி அம்மாள் என்று தெரிகிறது. பாலசரஸ்வதியைப் பற்றி ஏதும் சொல்லவே தேவையில்லை. ரவீந்திர நாத் தாகூரையும், மாயா ப்ளீசெட்ஸ்காயாவையும், சத்யஜித் ராயையுமே தன் நடனத்தில் மயங்கச் செய்தவர் அவர். ஒரு உன்னத நிகழ்ச்சி. பரதமே சிருங்காரம் தானே, சிருங்காரத்தை விட்டால் பரதம் ஏது? என்பவர் அவர். இப்படி ஒரு பார்வை வித்தியாசத்துக்கெல்லாம் இக்கலையில் இடம் உண்டு தான். சிருங்காரத்தையே முற்றிலுமாக ஒதுக்கி பக்தியையே அழுத்தமாகக் கொள்ளும் ருக்மிணி தேவிக்கும் இதில் இடம் உண்டு தான். அதுதானே நடனம் பிறந்த பரிணாமம் பெற்ற வரலாறே. ஆனாலும் நான் பார்த்த ஒரு காட்சி.

உன்னைத் தூதனுப்பினேன் என்னடி நடந்தது
உள்ளது உரைப்பாய் சகியே

என்று தொடங்குகிறது அந்த பதம். 'தலைவனுக்கு என்ன ஆயிற்று? ஏன் அவர் வரவில்லை? என்று போய் பார்த்து வா' என்று தன் தோழியை அனுப்புகிறாள் தலைவி. தோழி திரும்பி வருகிறாள். தலை கலைந்து, நெற்றி குங்குமம் அழிந்து நெற்றியில் பரவியிருக்கிறது. ஆடையும் கலைந்து காணப்படுகிறது. கன்னங்களோ கன்னிப் போய் சிவந்திருக்கிறது

என்னடி நடந்தது? என்ற கேள்வி கேட்கும் முகத்தின் பாவங்களும், ஆங்கீகா அபிநயமும், கண்கள் பேசும் பாவங்களும் ஒன்றல்ல, இரண்டல்ல. முதலில் சாதாரண கேள்வி, பின்னர், தோழிக்கு வழியில் ஏதோ நேர்ந்து விட்டதோ என்ற கவலை, பின்னர், போன இடத்தில் வேறு யாரும் அவளை ஏதும் செய்து விட்டனரோ என்ற கலக்கம், இது தலைவன் செய்துவித்த கோலம் என்றால், அது தன்னை நினைந்து தூது சென்றவள் இரையானாளா, அல்லது, தலைவன் தான் தூது வந்தவளைத் தான் விடுவானேன் என்று செய்த அலங்கோலமா, அல்லது, தூது சென்றவளே தலைவனை மயக்கித் தனக்குச் செய்த துரோகமா... இப்படி 'என்னடி நடந்தது?" என்ற சாதாரணமாகத் தோன்றும் கேள்வியில், நடனமாடும் பெண்ணின் கற்பனைக்கும் நடனத் திறனுக்கும் ஒரு விஸ்தாரமான வெளியை பரதமும் அதன் சஞ்சாரி பாவமும் உருவாக்கிக் கொடுத்து விடுகின்றன. அது ஒரு உலகம். ஒரு அனுபவம். அப்போதே நடனமாடும் கணத்தில் தோன்றி அப்போதே மறையும் அனுபவம். நினைவுகள் மாத்திரம் தங்கி, பின் காலம் மெதுவாக மங்கி மறையச் செய்துவிடும் அனுபவம். இப்போது தங்கி இருப்பது பதம் மாத்திரமே.

இது தான் ஒரு சில கலைகளின் உன்னதமும் சோகமும். அகப்பாடல்களும் சரி, பக்தி கால தேவாரமும், பாசுரங்களும் சரி. எழுதப்பட்டவை அல்ல. பாடப்பட்டவை. பின்னர் நினைவு கூர்ந்து சேர்க்கப்பட்டவை. எத்தனை அழிந்தனவோ தெரியாது. லக்ஷக்கணக்கில் ஞான சம்பந்தர் பாடியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மிஞ்சியுள்ளது முன்னூத்திச் சொச்சம். இப்படித்தான் கீர்த்தனைகளும் பதங்களும். தியாகய்யர் பாடியதில் கிடைப்பது எழுநூறோ என்னவோ தான். இராமலிங்க ஸ்வாமிகள் பாடிச் செல்ல பாடிச் செல்ல உடன் சென்றவர்கள் பின் நினைவிலிருந்து எழுதியவை தாம் மிஞ்சியவை. இப்படித்தான் பதங்களும், ஜாவளிகளும். §க்ஷத்திரக்ஞர் பாடப் பாட அருகில் இருந்து கேட்டவர்கள் எழுதி வைத்தவை தான் எஞ்சியவை. தமிழிசை இயக்கம் இருந்திருக்க வில்லையெனில், எவ்வளவு பதங்களும் கீர்த்தனை களும், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர், சுப்புராமயயர் போன்றவர்களது கிடைத்திருக்கக் கூடும் என்பது தெரியவில்லை. கிடைத்த ஜாவளிகள் என, டி.பிருந்தா தொகுத்து ம்யூசிக் அகாடமி பிரசுரித்தது என ஒரு குறிப்பு மு. அருணாசலம் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தமிழ் இசைப் பாடலகள் பற்றிய புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. என் பிரதியில் புத்தகத்தின் பெயர் கூட இல்லை.

எத்தனை பேருக்கு

என்றைக்கு சிவகிருபை வருமோ - ஏழை
என் மனச் சஞ்சலம் அறுமோ

என்ற பதம் நீலகண்ட சிவன் எழுதியது என்பது தெரிந்திருக்கும். இதே போல

வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்
உள்ளங்குழையுதடி கிளியே - ஊனுமுருகுடீ

என்ற கிளிக்கண்ணி ஏதோ சித்தர் பாடல் என்று நான் என் அறியாமையில் ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். இது அம்பா சமுத்திரம் சுப்பராயஸ்வாமி என்பவர் இயற்றியது. இது இன்னும் நிறைய கண்ணிகளைக் கொண்டது. அவர் ஒரு தலைமைக் காவலராக (ஹெட் கான்ஸ்டபிள்) இருந்தவர் என்றும் தெரிகிறது. அவர் கண்ணிகள் தான் ஏதோ சித்தர் பாடல் போல், நாட்டுப் பாடல் போல மிகப் பிராபல்யமாகியிருக்கிறதே தவிர பாவம் அம்பா சமுத்திர ஏட்டையாவை நாம் மறந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. "என்னடி நடந்தது" எனற பதத்திற்கு அபிநயித்த நடனமணி யார் என்பதும் அவரது அன்றைய மாலை கலையும் அன்று பார்த்த ரசிகர்களின் நினைவுகளோடு மறைந்து விட்டது போல.

நமது வரலாற்றில் எல்லாமே வாய்மொழியாகத்தான் ஒரு தலைமுறை தன் கலைகளை இன்னொரு தலைமுறைக்கு கொடுத்து வந்துள்ளது. அப்படித்தான் கலைகள் ஜீவித்து வந்துள்ளன. எழுத்து தோன்றிய பின்னும் வாய்மொழி மரபின் முக்கியத்துவம் முற்றாக மறைந்து விடவில்லை. பாரதியே தனக்குச் சொல்லிக்கொடுத்துள்ள பாடம் வேறு, அச்சில் வந்துள்ள பாடம் வேறு என்று சிறுமியாக பாரதி பாடக்கேட்டு வளர்ந்த யதுகிரி அம்மாள் தன் பாரதி நினைவுகளில் எழுதுகிறார். பாரதிக்கே அந்த கதி என்றால், தாசிகளின் நடன வாழ்க்கையில் தான் பதங்கள் வாழும் என்ற நிலையில், தாசிகளும் சமூகத்தால் இழிவுபடுத்தப்பட்டு, கோவில்களும் அவர்களைக் கைவிட்ட நிலையில், பதங்களுக்கும் ஜாவளிக்கும் நேரும் கதியைப் பற்றிச் சொல்லவேண்டும். நேற்று மறைந்த பால சரஸ்வதியின் ஆட்டப் பட்டியலைப் (repertoire) பார்த்தால் பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையில் அதில் வர்ணங்களும்(13), பதங்களும்(97), ஜாவளிகளும்(51) இருக்கும். அவ்வளவு நிறைவான ஆட்டப்பட்டியல் வேறு யாருக்கும் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் பாலசரஸ்வதிக்கு இவை எல்லாம் தஞ்சை சகோதரர் காலத்திலிருந்து அவர் குடும்பத்திற்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தவை. அவர் குடும்ப சொத்து போல. அந்த வரலாற்றின் தாக்கம் அதில் இருக்கும். எதற்குச் சொல்கிறேன் என்றால் பாலசரஸ்வதியின் இந்த ஆட்டப்பட்டியலில் தமிழின் பங்கு என்ன என்று பார்த்தால் ஏமாற்றமாக இருக்கும். 13 வர்ணங்களில் தமிழில் 2-ம், 97 பதங்களில் தமிழ்ப்பதங்கள் 39-ம் தான் இருந்தன. 51 ஜாவளிகளில் தமிழ் ஜாவளி ஒன்று கூட இல்லை.. இப்போது பால சரஸ்வதி இல்லை. அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. அன்றைய நிலை அப்படி. மேடையில் ஆடப்பட்டால் தான் தமிழ்ப் பதங்களும் வர்ணங்களும், ஜாவளிகளும் வாழும். வாய்மொழி மரபின் இடத்தை அச்சு எடுத்துக்கொண்டுவிட்ட பிறகு அவை அச்சிலாவது பதிவாக வேண்டும்.

தற்செயலாக நடை பாதையில் கிடைத்த புத்தகங்களில் அச்சிடப்பட்டிருக்கும் பதங்களையும் ஜாவளிகளையும் ஒன்று சேர்த்துத் தரலாமே என்ற எண்ணம் ஒரு கிருஷாங்கினிக்குத் தோன்றி இந்த தொகுப்பு நம் கைகளுக்கு இப்போது வந்துள்ளது. நிறைய இன்னும் இருக்கின்றன. கிருஷாங்கினியைப் போல நம் கண்ணுக்குப் படுவதையெல்லாம் நாம் தொகுப்பது நம் மண்ணுக்கும், மொழிக்கும், கலைகளுக்கும் நாம் ஆற்றும் கடமையாகும்.

கடைசியில் எனக்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரியத்தைச் சொல்லத் தோன்றுகிறது. எனக்குள் கோபால கிருஷ்ண பாரதியைப் பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அது அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, பின் அவரைப் பற்றி உ.வே. சா எழுதியுள்ள சின்ன வாழ்க்கைச் சரிதம் இவற்றிலிருந்து பெற்றது. கிருஷாங்கினியின் தொகுப்பில் கோபால கிருஷ்ண பாரதியின் பெயரில் ஒரு கீர்த்தனை இருக்கிறது.

பேயாண்டி தனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்
பெண்களுக்கழகாமோ...

என்ற பல்லவியுடன் தொடங்குகிறது அது. சிவனைப் பற்றியது தான். நிந்தாஸ்துதி தான். இருப்பினும் இப்படியும் கோபால கிருஷ்ண பாரதி எழுதியிருக்கிறாரா? என்று ஆச்சரியப்பட வைத்தது இது.

_______________________________________________________________

தமிழில் பரத நாட்டியப் பாடல்கள்: தொகுப்பு: கிருஷாங்கினி: சதுரம்
பதிப்பகம், 34- சிட்லபாக்கம் 2-வது பிரதான சாலை, தாம்பரம் சானடோரியம்,
சென்னை-47 பக்கம் 204 -ரூ 100

வெங்கட் சாமிநாதன்/4.3.08

பதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும் (1)

0 மறுமொழிகள்
வெங்கட் சாமிநாதன்

காதல், விரஹ தாபம், தோழியைத் தூது அனுப்புதல், பின் இந்தக்காதலே இறைவனிடம் கொள்ளும் பக்தியாக பரிணாமம் பெறுதல், இவை அத்தனையும், கவிதையாக, சங்கீதமாக, நடனமாக, பல ரூபங்களில் பரிணாமம் பெறுதல், அத்தனையும் ஒரு நீண்ட வரலாறாக, இடைவிடாத பிரவாஹமாக சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் தமிழ் வரலாற்றில், வாழ்க்கையில் அதன் கலைகளில் பரிணமித்திருப்பது போல வேறு எங்கும் இதற்கு இணை உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. தமிழில் பரதநாட்டியப் பாடல்கள் என்ற ஒரு தொகுப்பைப் பார்த்த போது, நமக்குத் தெரிந்த ஒரு இரண்டாயிர வருஷ நீட்சி என் முன் விரிந்தது.

ஊடலும் கூடலும் குகையில் வாழ்ந்த காலத்திலேயே தொடங்கியது தான். ஆனால்,

"நில், ஆங்கு நில்,
நீ நாறு இருங் கூதலார் இல் செல்வாய், இவ் வழி
ஆறு மயங்கினை போறி, நீ வந்தாங்கே மாறு."

என்று அது கவிதையாக மலர்ந்து நம் முன் விரிகிறது. பரத்தை வீடு சென்று வந்த தலைவனை 'வந்த வழியைப்பார்த்துப் போய்யா', என்று விரட்டுகிறாள் காதலி. ஏதோ சட்டென கிடைத்த ஒன்றைச் சொன்னேன். தமிழ்க் கவிதையில் இதற்கும் பின்னோக்கி நாம் செல்லக்கூடும். இதற்கு மாறாக, திருமங்கை ஆழ்வார் தன்னையே திருமாலின் அழகில் மயங்கி நிற்கும் மங்கையாகக் கற்பித்துக் கொள்கிறார்.

தஞசம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சித்த்¢த்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்தது ஒன்று பணித்தது உண்டு.

இப்படி நாம் அகப்பாடல்களிலும் ஆண்டாள் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் பாசுரங்களிலும், மாணிக்கவாசகர் திருக்கோவையாரிலும் நெடுக காணலாம். அது இசையிலும் ஆடலிலும் தொடர்ந்து வந்துள்ளது. கானல் வரியிலிருந்து இந்த காதலும், பிரிவாற்றாமையும், தவறாகப் புரிந்து பிணங்குதலும் ஆடலிலும் சங்கீதத்திலும் சேர்ந்தே வெளிப்பாடு பெற்று வந்துள்ளன. இது நமக்கே உரிய சிறப்பு.

இப்போது நான் யோசிக்கும் போது, காதலும், அது பக்தியாக மேல் நிலைப்படுத்தப்பட்டு உன்னதமாக்கப் பட்டும் சங்கீதமாகவும், நடனமாகவும் பரிணாமம் பெற்றுள்ள ஒரு உதாரணம், ஜெயதேவர். ஜெயதேவர் இல்லாது ஒடிஸ்ஸி ஏது? ஒடிஸ்ஸி இல்லாது கொனாரக் சிற்பங்களும் ஏது?

தெற்கிலும், தமிழ் நாட்டிலும் இந்த கூட்டுக் கலவையான மரபு தொடர்ந்து வந்துள்ளது தான். ஆனால் இப்போது நமக்குக் கிடைக்கும் பதங்கள் அதிகம் பின்னோக்கிப் போனால் 16-ம் நூற்றாண்டு முத்துத் தாண்டவரோடு நின்று விடுகிறோம். ராமானுஜரும் வைஷ்ணவ ஆச்சாரியார்கள் சிலரும் சரியாக நூறாண்டு வாழ்ந்ததாக சொல்கிறார்கள். அது போல முத்துத் தாண்டவர் வாழ்ந்ததும் சரியாக ஒரு நூறாண்டு (1525-1625) காலம். தஞ்சையில் நாயக்கர்கள் ஆண்ட காலம். கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்கு மேலாக விஜயநகர் ஆட்சியிலும் நாயக்கர்களின் ஆட்சியிலும் தமிழ் நாடு இருந்த போதிலும், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகளுக்கு அவர்கள் தந்த ஆதரவு ஒரு புறம் இருந்த போதிலும், 17-ம் நூற்றாண்டு கடைசி வரையிலும் இசையிலோ நாட்டியத்திலோ அல்லது நாடகத்திலுமோ தமிழ் தான் தொடர்ந்து வெளிப்பாட்டு மொழியாக இருந்து வந்துள்ளது. தெலுங்கு இன்னும் மேலாண்மை பெற்று விடவில்லை. இசைக்கு ஏற்ற மொழி தெலுங்கு தான் என்று யாரும் சொல்லத் தொடங்கவில்லை. இசைக்கும் நாட்டியத்துக்கும் கீர்த்தனங்களும் பதங்களும் தந்தவர்கள் என, முத்துத் தாண்டவர், பாப விநாச முதலியார் போன்ற தெரிந்த பெயர்களோடு வென்றி மலைக்கவிராயர் என்று அவ்வளவாகத் தெரிய வராத பெயர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் இதற்குள் ஆந்திராவிலிருந்து தஞ்சைக்கு சொக்கநாத நாயக்கர் காலத்தில் தான் §க்ஷத்திரக்ஞர் வருகிறார். வேங்கட மஹியின் சதுர்தண்டி பிரகாசிகை அப்போது தான் எழுதப்பட்டு வருகிறது. ஆக, சுமார் 200 வருஷங்களுக்கு மேல் நீண்ட விஜய நகர, நாயக்கர்கள் ஆட்சியிலும் கூட இசையிலும் நடனத்திலும் தமிழே வெளிப்பாட்டு மொழியாக இருந்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம் இவ்விரண்டு கலைகளும் தமிழ் மண்ணில் ஊன்றியிருந்த ஆழ்ந்த வேர்கள் என்று தான் நினைக்கிறேன்.

தொடர்ந்து, மாரிமுத்தா பிள்ளை (1712-1782), அருணாசலக் கவிராயர் (1711-1779), ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர் (1715-1794) போன்றோரின் கீர்த்தனைகளும் பதங்களும் வெளிவருகின்றன. இப்படிப் பெயர்களைச் சொல்லிக்கொண்டு போனால் சட்டென இவர்களுடைய ஆளுமையின் கீர்த்தி புலப்படாது. "சேவிக்க வேண்டுமய்யா, சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா" (முத்துத்தாண்டவர்) "தெண்டனிட்டேன் என்று சொல்லடி", "காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே, என்னைக் கைதூக்கி ஆள் தெய்வமே" (மாரி முத்தா பிள்ளை), "ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்க நாதரே நீர் ஏன் பள்ளி கொண்டீரய்யா" (அருணாசலக் கவிராயர்), "தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி", "ஆடாது அசையாது வா கண்ணா" (ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர்) போன்றவை நமக்கு இன்றும் பழகிய பதங்கள் கீர்த்தனைகள்.

இடைக்காலத்தில் சங்கீத மும்மூர்த்திகளின் ஆளுமையின் காரணமாகவும், இசைக்கும் நடனத்திற்கும் தமிழ்நாட்டின் படைப்பு மையமாக இருந்த தஞ்சை மராட்டிய மன்னர்கள் காலத்தில் தெலுங்கு பெற்று ஆதரவின் காரணமாகவும் தமிழ் பின்னுக்கு நகர்ந்தது. தமிழ்ர்களே ஆன முத்துசாமி தீக்ஷ¢தரும், சியாமா சாஸ்த்ரிகளும், பட்டனம் சுப்பிரமணிய ஐயரும் கூட சமஸ்கிருதம் தெலுங்கின் பக்கமே சாய்ந்தனர். அதோடு மட்டுமல்லாமல், மராட்டிய மன்னர்களே இசைக்கும் நடனத்துக்கும் போஷகர்களாகி விட்ட காரணத்தால், பதங்களுடன் ஜாவளி என்ற புதிய இசை வடிவமும் வந்து சேர்ந்தது. அது ஒன்றும் புதிய இசை வடிவம் அல்ல. இசையும் நடனமும் சொல்ல வந்த புதிய செய்தி என்று சொல்லவேண்டும். பதங்களில் பக்தியின் இடத்தில் சிருங்காரம் வந்து உட்கார்ந்து கொண்டது. தலைவி தலைவனுக்காக ஏங்கியதைச் சொல்லும் அகப்பாடல்கள், நேரடியாகவும், தலைவி எனத் தன்னைக் கற்பித்துக்கொண்டும் இறைவனைச் சரணடையும் மார்க்கமாகக் கொண்ட பதங்கள், பக்தியின் இடத்தைச் சிருங்காரமே மேலோங்கச் சொல்லும் ஜாவளிகள், மராட்டிய மன்னர்கள் காலத்தில் இறைவனுக்குப் பதிலாக, தன் கால நிர்ப்பந்தத்தில் மன்னனையே காமுறும் நிலையைச் சொல்லி மன்னனைத் திருப்திப்படுத்தின.

இதற்கு அதிக கால விரயம் தேவையாக இருக்கவில்லை. நடனம் ஆடுபவர்கள் மாதவி காலத்திலிருந்து தாசிகளே. நடனத்தை போஷித்தவர்களோ மன்னர்கள். அல்லது ஆங்காங்கே இருந்த பெருந்தனக்காரர்கள், ஜமீன்கள். சிருங்காரமே பதங்கள் சொல்லும் செய்தியாக மாற அதிகம் கஷ்டப்படவேண்டியிருக்கவில்லை. கோவலன் கானல் வரியில் கடலைப் பாடினாலும், மாதவி என்ன பாடினாள்? சரி, ஜெயதேவர் கண்ணனுக்காக ஏங்கும் ராதையைக் கற்பித்துக்கொள்ள அவருக்கு அருகிலேயே பத்மாவதி நடனமாடிக்கொண்டிக்க அவருக்கு வேறென்ன வேண்டும்?. சிருங்காரம் அல்லாமல் வேறு என்ன வரும்? இந்த சிருங்காரத்தைப் பதங்களில் வார்த்து தஞ்சைக்குக் கொண்டு வந்த க்ஷத்திரக்ஞரை என்னேரமும் சூழ்ந்திருந்தவர்கள் தாசிகள். தாசிகள் மத்தியிலேயே திளைத்தவர் அவர். ஆக, அவ்ருக்கு, சிருங்காரம் அல்லாமல் வேறென்ன வரும்?. இருந்தாலும் அவை சிருங்காரத்திலிருந்து பக்திக்கு நம்மை இட்டுச் சென்றன. சடகோபரையும், திருமங்கையாழ்வாரையும், அரையர் சேவை செய்யும் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் அரையர்களையும் பக்திக்குத் தான் இட்டுச் செல்கின்றன.

என்னதான் சொன்னாரடி, அன்னமே அவர்
எப்போது வருவாரடி

என்று பல்லவி அமைத்துக்கொண்டால் கேட்கும் ஜமீந்தாருக்கோ மன்னருக்கோ சுகமாகத்தான் இருக்கும். பின்னால் அனுபல்லவியில் தான் அவள் விசாரிப்பது புதுவை வளர் பங்கயத் திருமார்பன், வெங்கடேஸ்வர ஸ்வாமியை என்பது தெரிய வரும். அதனால் என்ன? பின் வரும் சரணங்களும் திரும்பத் திரும்ப வரும் பல்லவியும் சொல்வது தன்னைத் தானென்று கற்பித்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த கொஞ்சமளவு சால்ஜாப்பு கூட இல்லாது,

காசிருந்தால் இங்கே வாரும் - சும்மா
கடன் என்றால் வந்த வழி பாரும்

என்று கவி குஞ்சர பாரதி நேராகவே விஷயத்துக்கு வந்து விடுகிறார். கிட்டத் தட்ட இந்த மாதிரிதான் வேறு ஒரு ஜாவளி நான் கேட்டிருக்கிறேன். அது யார் எழுதியது என்பது தெரியவில்லை. அனேகம் பதங்கள் நமக்கு எப்போது எழுதியது, யார் எழுதியது என்பது தெரிவதில்லை. ஆனால் வெகு பிரபலமான பதங்கள் அவை. ஒன்று நான் கேட்டது,

காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவைச் சாத்தடி....

என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறார் அவர்.

அழகுள்ள துரை இவர் யாரடி?

என்று ஒரு பதம் ஆரம்பித்தால் அது என்னத்தைச் சொல்லும்?

நேற்று ராத்திரிப் போன பெண் வீடு இதுவல்ல
நிலவரமாக உற்று பாரும்


என்பது சுப்புராமய்யர் என்பவர் இயற்றிய ஒரு பதம். ஜாவளி என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா?

பழங்கலத்தில் பழங்கள்

0 மறுமொழிகள்
ரெ.கார்த்திகேசு

நான் பினாங்குக்கு 1975இல் வந்தேன். இப்போது 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. பிறந்தது பீடோ ங் என்ற ஊரில்; படித்தது ஹார்வார்ட் தோட்டத்துத் தமிழ்ப் பள்ளி (அப்போது தெரியாவிட்டாலும் இப்போது அந்தப் பெயரின் மகிமை பூரிக்க வைக்கிறது); ஆங்கிலம் படித்தது சுங்கை பட்டாணியிலும் கூலிமிலும்; 19 வயதில் ஐந்தாம் படிவம் முடித்து வேலை செய்ய வந்த இடம் குவாலா லும்பூர். 16 ஆண்டுகள் தலை நகர் வாசம் முடிந்து ஒலிபரப்புப் பணிக்குத் தலை முழுகி கல்விப்பணி மேற்கொண்டு பினாங்குக்கு வந்து சேர்ந்தேன். சொல்வது போல் பாலத்தின் கீழ் நிறையத் தண்ணீர் ஓடிவிட்டது.

பினாங்குதான் இப்போது சொந்த ஊராக ஆகிவிட்டது. பினாங்கை நான் அதிகம் நேசிக்கிறேன். என் படிப்பையும் வாழ்க்கையையும் எழுத்தையும் ஒளிர வைத்த ஊர் இதுதான். கல்வி, ஆய்வு, இலக்கியம், சமயம், சமூகம் எனப் பல பணிகள் ஆற்றி ஓய்ந்தாகிவிட்டது.

பினாங்கை என் கதைகளிலும் நாவல்களிலும் அதிகமாகவே நான் காட்டியுள்ளேன். அதைப் பலர் ரசிக்கிறார்கள். ஆனால் மலாக்காவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர்/வாசகி "ஏன் இப்படிப் பினாங்கையே வளைத்து வளைத்து எழுதுகிறீர்கள்? சலிப்பாக இருக்கிறது" எனவும் எழுதியிருந்தார்.

என்ன செய்வது அம்மா? என் இதயத்துக்கு அணுக்கமான இடமாக இப்போது இது ஒன்றுதான் இருக்கிறது. இதைப் போன்று எண்ணிய அளவில் உற்சாகம் தரும் வேறோர் ஊர் இல்லை. இங்குள்ளதைப் போல சல சலவென்று காற்று வீசுகிற கடற்கரை வேறு எங்கு இருக்கிறது? சீனரும் பாபாஞோஞாக்களும் மலாய்க்காரரும் சயாமியரும் பர்மியரும் இந்தியர்களும் கலந்து வாழும் வர்ணஜாலம் உள்ள ஊர் வேறு எது? (இந்தியர்களில் எத்தனை வகை! பிள்ளைமார், தேவர்மார், செட்டியார், யாழ்ப்பாணத்தவர், மலையாளியர், தெலுங்கர், சீக்கியர், குஜராத்தியர், சிந்தியர், தமிழ் கிறிஸ்துவர், தமிழ் இஸ்லாமியர்.) இங்கே போல ஆசியாவிலேயே சிறந்த சீன உணவும் நாசி கண்டாரும் செண்டோ லும் ரோஜாக்கும் கிடைக்கும் ஊர் வேறு எது? இன்னும் பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலச் சின்னங்களையும் மரபு வழியான சீனர் கட்டிடக் கலையையும் பழைய ஹிந்துக் கோயில்களையும் கவனமாகப் போற்றிப் பாதுகாத்து வரும் ஊர் வேறெது? உங்களுக்கு உங்கள் ஊர் பெரிதாக இருக்கலாம். எனக்கு இந்தப் பினாங்குதான்.

இப்போ, இந்தப் பினாங்கு இந்தியர்களின் பழசைக் கொஞ்சம் கிளறிப் பார்ப்போம்.

1760 வாக்கில் பிரான்சிஸ் லைட் இந்தத் தீவை கெடா சுல்தானிடமிருந்து வாங்கினார். ஆரம்பத்தில் இது குற்றவாளிகள் தீவாகத்தான் பயன்படுத்தப் பட்டது. 1786இல் இதற்கு மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் பெயராக ஜோர்ஜ் டவுன் என்ற பெயரைச் சூட்டினார். இன்றளவும் அந்தப் பெயர் நிலைத்திருக்கிறது. இந்த நகரை நிறுவ உழைத்தவர்கள் சூலியாக்கள், சீனர்கள், கிறிஸ்துவர்கள் என லைட் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூலியாக்கள் தமிழர்கள்தான். இன்றும் சூலியா ஸ்த்ரீட் பினாங்கில் இருக்கிறது. தமிழர் பெயரிலும், கிளிங் என்ற பெயரிலும், மதராஸ் பெயரிலும் தெருக்கள், இடங்கள் இன்னமும் இருக்கின்றன.

1801இல் கிழக்கிந்தியக் கம்பெனி 130 இந்தியக் குற்றவாளிகளை இங்கு கொண்டுவந்து அவர்களை இப்போதுள்ள பிஷப் சாலை, சர்ச் சாலை ஆகியவற்றை அமைக்கப் பயன் படுத்தியது. இந்தக் குழுவில்தான் சின்ன மருதுத்தேவரின் மகன் துரைசாமித் தேவர் இருந்திருக்கிறார். (பீர் முகமதுவின் "மண்ணும் மனிதர்களும்" நூலில் இவர் பற்றி எழுதியிருக்கிறார். ப.சந்திரகாந்தமும் இந்தக் கதையை எழுதியுள்ளார். கலைஞர் கருணாநிதியும் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மருது சகோதரர்களின் குடும்ப நண்பர், (பின்னர் பிரான்சிஸ் லைட்டின் மருமகன்) கேப்டன் வெல்ஷ், துரைசாமித் தேவரை இங்கு 1818இல் கைதியாகச் சந்தித்திருக்கும் சோகத்தைக் குறித்திருக்கிறார்.)

பினாங்கு பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் அதிவேக வளர்ச்சி அடைந்தது. சாலைகள் அமைக்கவும் தண்ணீர் அளிப்பு வசதிகள் அமைக்கவும், போக்குவரத்து, நீர்ப்பாசனம், கழிவு நீர் வசதிகள் ஆகியவற்றுக்காகவும் தென்னிந்தியர்கள் சஞ்சிக் கூலிகளாகக் கொண்டுவரப்பட்டனர். பின்னர் குஜராத்திகள், தமிழ் முஸ்லிம்கள் முதலியோர் வர்த்தகர்களாக வந்தார்கள். அவர்கள், பாக்கு, மருந்து, மூலிகைகள், வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்து (இப்போ இதில் எதையுமே காணோம்) உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தார்கள். அவர்களின் சந்ததியினர் பலர் இன்றும் கப்பல் தொழிலிலும் ஏற்றுமதி இறக்குமதியிலும் இருக்கிறார்கள். இளைய தலைமுறை நவீன தொழில்களில் (வழக்கறிஞர், டாக்டர்) நிபுணத்துவம் பெற்றிருக்கிறது.

கிழக்கிந்தியக் கம்பெனி பினாங்கில் நன்கு காலூன்றியவுடன் அது ஒரு பத்திரிகை நடத்தத் திட்டமிட்டது. ஆனால் இங்கு பத்திரிகை அச்சடிப்புத் தொழில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ஆகவே மதராசிலிருந்து (இப்போதைய சென்னை) அச்சுத் தொழில் தெரிந்தவர்களைக் குடியிறக்கினார்கள். இவர்களைக் கொண்டே "பினேங் கெஜட்" (Penang Gazette) ஆரம்பிக்கப் பட்டது. இந்த அச்சுத் தொழிலாளர்கள் ஆர்கைய்ல் ரோட், டிரான்ஸ்கபர் ரோட், பினேங் ரோட், நோர்தம் ரோட் ஆகியவற்றைச் சுற்றிக் குடியேற்றப் பட்டார்கள்.

இந்த பினேங் கெஜட் பத்திரிக்கையில் பணியாற்ற வந்தவர் வி.நடேசம் பிள்ளை. 1890இல் இந்தப் பத்திரிக்கையின் அச்சுக்கூட மேற்பார்வையாளராக ஆகி 1933 வரை பணியாற்றினார். அதன் பின் தனது சொந்த அச்சகமாக "மெர்கண்டைல் பிரஸ்' தொடங்கினார். பினாங்கு ஹிந்து சபா இவரால்தான் தொடங்கப் பட்டது. சபாவில் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் அச்சுத் தொழிலாளர்களே. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து "சமாதான நீதிபதி" பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியர் நடேசம் பிள்ளைதான்.

ஆர்கைல் ரோட்டின் அருகே வசித்த பலர் அந்தக் காலத்திலேயே தங்கள் கூலித் தொழில்களில் இருந்து விடுபட்டு வசதியாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் நல்ல கல் வீடுகளில் வசித்ததோடு சொந்தமாகக் குதிரை வண்டி வைத்துக் கொண்டு கம்பீரமாகச் சவாரி சென்றிருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவர் தாயம்மாள் அம்மாள் என்ற பெண்மணி. இவர் சொந்தமாக வைத்துப் பயன்படுத்திய குதிரை வண்டியை இப்போதுமுள்ள குயின் ஸ்த்ரீட் அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்தார். (இந்த வண்டி பலகாலம் பயன் படுத்தப்பட்டு பழுது பட்டு இப்போது கைவிடப்பட்டுள்ளது.) தாயம்மாள் அம்மாளின் வழித்தோன்றல்கள் இப்போதும் பாலிக் புலாவிலும் பட்டர்வர்த்திலும் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

தமிழர்கள் அமைத்து நிலைபெற்ற குடியிருப்புகளில் டோ பி காட் (வண்ணான் துறை) என்பதும் குறிப்பிடத் தக்க ஒன்று. சலவைத் தொழிலாளர்கள் தங்கள் தொழிலை நடத்திய இடம். பினாங்கு நதியின் ஓரமாக அமைந்தது. இப்போது பினாங்கு நதியின் நீர் பயன் படுத்த முடியாத அளவு கெட்டுவிட்டாலும் இப்போதும் சலவைத் தொழிலாளர்கள் குழாய் அமைத்துக் கொண்டு அங்குத் தொழில் பார்த்து வருகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் இப்படித் தொழில் பார்த்து செழிப்படைந்தவர்களில் ஒருவர் ஒரு பெண்மணி. இப்போது டோ பி ராணி என்று மட்டுமே பெயர் தெரிகிறது. இவர் பெயர் இன்றளவும் தெரியக் காரணம் இவர் தனது சொந்த நிலத்தைத் தானமாகக் கொடுத்து இங்கு இப்போது அமைந்துள்ள இராமர் கோயிலைத் தோற்றுவித்ததுதான். (பி.கு.: இப்போது இந்தக் கோயிலுக்கு முன்னாள் பகுத்தறிவுப் புயலும் இன்னாள் ஆன்மீகத் தென்றலுமாக விளங்கிவரும் அன்புக்குரிய சித. இராமசாமி அவர்கள் தலைவராக இருக்கிறார்.)

சரி, இப்போ கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டு, வெறும் 30 ஆண்டுகளுக்கு முன்பு பினாங்குக்கு வந்த எனக்கு இந்த இரண்டரை நூற்றாண்டுக் கதை தெரிய வந்த கதையைக் கூற வேண்டும்.

2001ஆம் ஆண்டில் பினாங்கு முதுசொம் அறக்கட்டளையும் (Penang Heritage Trust) பினாங்கு மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கமும் (Malaysian Indian Chamber of Commerce and Industry, Penang) இணைந்து "பினாங்குக் கதை" என்ற கருப்பொருளில் ஒரு கருத்தரங்கத்தினை நடத்தின. அதில் நானும் ஒரு செயற்குழு உறுப்பினராக இருந்தேன். அதில் பினாங்குத் தமிழர்கள் பற்றிய இத்தனை அரிய தகவல்களைத் திரட்டித் தந்தவர் பி.கிருஷ்ணன் என்று எல்லோருக்கும் தெரிந்த பி.இராஜவேலன். அவருடைய கட்டுரையிலிருந்துதான் இந்தத் தகவல்கள் அனைத்தும். இன்னும் இருக்கின்றன. "நாற்காலிக்காரர் கம்பம்" பற்றியும் "தண்ணீர்மலை" சிறப்பு பற்றியும் அடுத்து எழுதுகிறேன்.

இருக்கட்டும். இந்த பத்திக்கு நான் கொடுத்துள்ள தலைப்பு யாருக்காவது புரிகிறதா? எங்கிருந்து இந்த வாசகம் எடுக்கப் பட்டிருக்கிறது தெரிகிறதா? சரியான விடை யாராவது சொல்லக் கூடும் என ஒரு மூன்று வாரம் காத்திருக்கிறேன். சொல்பவர்களுக்குப் பரிசு உண்டு. யாரும் சொல்லவில்லையானால் அப்புறம் நானே சொல்லிவிடுகிறேன்.

பொதிகை புனித யாத்திரை

0 மறுமொழிகள்
தென் காஞ்சி கோட்டம் என அழைக்கப்படும். 'திககெல்லாம் புகழும் திருநெல்வேலி' எனும் திருத்தலத்தினை மையமாகக் கொண்ட தென் பாண்டிச்சீமை இது. இம்மாவட்டத்தின் மக்களுக்கு பல பெருமை உண்டு. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை.தமிழே ஓடுகிறது என்பர். தஞ்சை மாவட்டத்தாருக்கு இசை எப்படி உயிரோ, அதுபோல நெல்லைச் சீமைக்காரர்களக்கு இலக்கியம் ரசிகமணி டி.கே.சி.யின் 'கம்பர் தரும் காட்சி' அப்படியே மனக்கண்முன் வருகிறது.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை 'மனோன்மணீயம்' என்ற ஒப்பற்ற நாடக நூலை ஆக்கினார்.அதில் சீவகபாண்டியன், மதுரையின் நீங்கி திருநெல்வேலியை தலை நகராக்கிச் சில காலம் அரசாண்டு வந்ததாகக் கூறியுள்ளார்கள்.

நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டபோது,நெல்லை மாவட்டத்தினர் பலர் திசைக் காவலர்களாக அமர்த்தப்பட்டனர். ஆயுதம் தாங்கிய படையை உடையவர்களானதால் 'பளையக்கார்கள்' என்றும் அழைக்கப்பட்டனர். வடகரை, ஆவுடையாள்புரம், ஊத்துமலை, சிவகிரி, சிங்கம்பட்டி, அளகாபுரி, ஊர்க்காடு, சுரண்டை, கடம்பூர், இளவரசனேந்தல்,மணியாச்சி,பாஞ்சாலங்குறிச்சி முதலியன அத்தகைய பாளையப்Àட்டுகள் ஆகும்.

அப்படி வந்ததே பாளையங்கோட்டையும்.நெல்லை மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை வட மேற்கு எல்லையில் துவங்கி,நேர்தெற்காக தென்காசிக்கருகே ஒரு சிறு வளைவாகித் தண்பொருளைப் பள்ளத்தாக்குடன் கூடிய பாவநாசம் வரை செல்கிறது. பின் தென்கிழக்காகத் திரும்புகிறது. மிகத் தொலைவிலுள்ள எந்த சமவெளியிலிருந்து பார்த்தாலும் இந்த மலைத் தொடரில பல முடிகளைக் காணலாம்.

சுமார் ஐயாயிரம் அடி உயரமுள்ள,இருபதுமுடிகள் இந்த எல்லையில் உள்ள சிவகிரியில் துவங்கி,கள்ளக்கடை, மொட்டை, கோட்டைமலை, குளிராட்டி, குற்றாலத்திற்கு அருகில் உள்ள பஞ்சம்தாங்கி, அம்பாசமுத்திர எல்லையில் மத்தானம், பாறை பாவநாசம் அருகில் அகத்தியர் மலை, அதற்குத் தெற்கில் ஐந்து தலைகள் கொண்ட, ஐந்தலைப்பொதிகை, திருக்குறுங் குடியையொட்டி மகேந்திரகிரி, பணகுடி கணவாய்க்குத் தென்கிழக்கே 'ஆரல்-ஆம்- பொழி' இன்று ஆரல்வாய் மொழி என அழைக்கபப்டும் எல்லை வரை. நெல்லை மாவட்டத்தின் பேராறு தான் 'தாமிரபரணி' என அழைக்கப்படும் 'தன்பொருணை' ஆறு.

பொதிகை முழுவதும் மலையில் தோன்றி மாவட்டம் முழுவதும் வளப்படுத்துகிறது.தன்பொருணைÔடன் சேரும் ஆறுகள் எண்ணற்றவை. பாம்பாறு காரியாறு, ஐந்தும் மலையில் தோன்றி மலை மேலேயே பொருணையோடு சேருபவை.சிங்கம்பட்டிக்கு

அருகில் மணிமுத்தாறும், செங்கல் தேரிச் சோலையில் தோன்றும் வரட்டாறும் கூசன்குழி ஆறும் சிற்றாறுகளாகும்.கடையம் அருகில் கீழைச்சரிவில் தோன்றுவது, சம்புநதி, கடையத்திற்கு தெற்கே ஓடுவது ராமநதி.இவை இரண்டும் சேர்ந்து கருணை ரவண சமுத்திரம் அருகில் சேர்கிறது. இரண்டும் சேர்ந்து கருணை ஆற்றோடு, வராகநதி சேருவது திருப்புடை மருதூரில்.

களக்காட்டு மலையான வெள்ளிமலையில் தோன்றுவது 'பச்சையாறு', 'தருவை' என்ற இடத்தில் பேராற்றில் கலக்கிறது.

சீவலப்பேரில் வந்து கூடுவது சிற்றாறு. இது குற்றால மலையாகிய திரிகூட மலையில் தோன்றி குற்றாலம், தென்காசி, கங்கை கொண்டான் வழியே அறுபது கி.மீ. ஓடிப் பாய்கிறது. பண்புளி மலையில் தோன்றும் அநுமநதியும், சொக்கம்பட்டி மலையில் தோன்றும் கருப்பாறும் வீரகேரளம்தூர் அருகில் சிற்றாறில் சேர்கின்றன.

மத்தளம் பாறையிலிருந்து வரும்அமுதக்கண்ணியாறும்,ஐந்தருவியாறும் சிற்றாரோடு சேர்கிறது. சிந்தாமணிக்கு அருகில் தோன்றும் உப்போடை, சீவலப்பேரி அருகில் சிற்றாறில் கூடுகிறது.உப்போடை, சிற்றாறு, பேராறு மூன்றும் கூடும் இடமே முக்கூடல். தென்காசிக்கு மேற்கே ஒரு முக்கூடலும், திருப்புடைமருதூர் அருகில் ஒரு முக்கூடலும் உண்டு.. தண்பொருணையாறு அம்பாசமுத்திரம் சேரன் மகாதேவி, திருநெல்வேலி வழியாகப் பாய்ந்து கொற்கை அருகில் கடலில் சேருகிறது.

கிருஷ்ணன்,
சிஙகை

மின் தமிழ் வெளியீடு

கம்பர் - பெயர் விளக்கம்

0 மறுமொழிகள்
கம்பர் - மக்கள் பெயர் "கம்மம்புல்" என்னும் உணவுப்பயிரின் பெயரும், கம்பம் பள்ளத்தாக்கு என்னும் இடத்தின் பெயரும் - அழகு, இனிமை, மணம் என்னும் பொருள் தரும் சொல்லால் காரணப் பெயராயிற்று. இது போலவே கம்பர் என்னும் மக்கட் பெயரும் காரணப்பெயர்.

கம்பர் என்ற பெயர் மக்களுக்கு 11,12 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பரவலாக வழங்கி வந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. மகேந்திர பல்லவன் என்னும் பேரரசன் காலத்தில் தொண்டைமண்டலத்தைச் சார்ந்து "மல்லம்" என்னும் சிற்றூர் இருந்தது. (இவ்வூர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் தாலுக்காவில் உள்ளது) மல்லம் பகுதியைக் கம்பவர்மன் என்னும் குறுநில மன்னன் ஆட்சி செய்தான். மல்லத்திலுள்ள சுப்ரமணியர் கோயிலில் இந்தக் கம்பவர்மன் ஆட்சியைக் குறிக்கும் கல்வெட்டுகள் உள்ளன.

மாதவன் கம்பன்,
கம்பதேவன்,
சிவப்பிராமணன் கம்பன் உய்ய வந்தான்


என்னும் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி எட்டு எண்கள் 34,38,40-ல் பல பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. தொகுதி பதினொன்று கல்வெட்டு எண் 95-ல் "இடையன் கம்பன் தந்தையும்'' என்றும் காணப்படுகிறது. பண்டைய நாளில் கம்பன் என்ற பெயர் தமிழகத்தில்
குறுநில மன்னருக்கும்,

சிவப்பிராமணருக்கும்,
ஆடுமாடுகளைப் பேணும் இடையருக்கும் மற்றும்
பொதுமக்கள் பலருக்கும் உரியனவாக இருந்தமை அறியலாம்.


தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்களை ஆதரித்த வள்ளலான இருதய ஆலய மருதப்பர் என்னும் குறுநில மன்னர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் சொக்கம்பட்டி எனும் ஊரின் அருகில் உண்டாக்கிய "கம்பன் ஏரி" என்ற குளமும்,அக்குளக்கரையில் அமைந்த புதுப்பட்டியும் இன்றும் காணத்தக்கவையாகும்.



கவிச்சக்கரவர்த்தி கம்பர் சிவன் கோயில் கொடிமரத்தின் அடியில்(துவஜஸ்தம்பம் - கம்பம்) அனாதையாக பேணுவார் இல்லாமல் கிடந்த குழந்தையாக இருந்து வளர்ந்தவர், அதனால் கம்பர் எனும் பெயர் பெற்றார். இளம் வயதில் கம்பங்கொல்லையைக் காவல் செய்தவர், அதனால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்னும் தவறான கருத்துக்களைச் சொல்லும் கதைகளை ஏற்க வேண்டாம்.

தேவ பாஷையில் இராமாயணத்தைச் செய்த மூவரில் முன்னவரான வான்மீகி நாவினால் உரைத்த காவியச்செய்திகளை இனிமை மிகுந்த தமிழ்ப்பாவினால் மணம் மிகுந்த தமிழ்ப் பண்புகளை உணர்த்தி, நடையின் நின்று உயர் நாயகன் ஆன அழகன் இராமனின் மாக்கதையைச் சொன்ன கவிச்சக்கரவர்த்தியைக் கம்பர் என்னும் காரணப் பெயர் இட்டுத் தமிழ் மக்கள் அழைத்தனர். மகேந்திர பல்லவப் பேரரசன் காலத்திலேயே கம்பர் என்னும் பெயர் பெருவழக்காக இருந்தமையைக் கல்வெட்டுகளால் அறிகிறோம்.



அதனால், கவிச்சக்கரவர்த்தியின் பெற்றோர்கள் தம் மகனுக்குக் கம்பன் என்னும் பெயரை இடுகுறியாக வைத்துப்போற்றினர் எனவும் கொள்ளலாம்.

தொல்காப்பியர் கூறிய "கமம்" என்னும் வேர்ச்சொல்லின் வழித் தோன்றியவைகளே கமழ்,காமர், கம்பர் எனக்கொள்ள வேண்டும்.

நல்லாசிரியர் சு.தி. சங்கரநாராயணன்

நன்றி: தினமணி

பூம்புகாரில் வரலாற்றுப் புதையல்

1 மறுமொழிகள்
பூமிக்குள் புதையல் கிடைக்கலாம். ஆனால் ஒரு மாநகரமே வரலாற்றுப் புதையலாய் கடலோரத்தில் புதைந்து கிடக்கிறது.

பாடிய பட்டினப்பாலை இருக்கிறது. பாடப்பட்ட பட்டினம் கடலுக்குள் பாலையாய்க் கிடக்கிறது.

புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும்கூட.

தமிழ் வளர்ச்சித் துறை சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள ஊர்களைப் பட்டியலிட்டு, அவை தற்போது எந்தெந்த மாவட்டங்களில் எப்படி இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்த "ஊரும் சீரும்" எனும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.


ஊரும் சீரும் திட்டத்தில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது பூம்புகார். பூம்புகாரை ஆவணப்படமாக்கும் திட்டச் செயற்பாட்டின் போதுதான் (இப்பணியில் சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர் திரு.சந்துரு, இயக்குநர் திரு.சீனிவாசன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்) பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழி கிடைத்தது.




பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி

முதுமக்கள் தாழி - இறந்தவர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் வைத்து பூமிக்குள் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய சால் ஆகும். புறநானூறு "கலம் செய்கோவே" என்று முதுமக்கள் தாழி பற்றிய குறிப்பைத் தருகிறது.

தமிழ் இலக்கியங்களில் மட்டுமன்றி, பிராகிருத மொழியில் உள்ள புத்த ஜாதகக் கதைகளும் புத்தவம்சகதாவும், தாலமியின் பூகோளநூல் போன்ற வெளிநாட்டார் நூல்களும் பூம்புகாரைக் குறிப்பிடுகின்றன.

செம்பியன்,
மனுநீதி சோழன்,
கரிகாலன்,
கிள்ளிவளவன்

காலங்களில் பூம்புகார் துறைமுகத் தலைநகராக இருந்திருக்கிறது. பத்துப்பாட்டில் ஒன்றாகிய பட்டினப்பாலை இவ்வூரைப்பற்றி பாடுகிறது.

மகதம்,
அவந்தி,
மராட்டா


நாட்டுக் கைவினைக் கலைஞர்களின் தொழிற்கூடமாகவும் பூம்புகார் இருந்திருக்கிறது.

இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் பூம்புகாரில் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை ஆகியவை ஆய்வு மேற்கொண்டு சங்ககாலப்

படகுத்துறை,
புத்தர்விகாரை,
உறைகிணறுகள்,
அரிய மணிகள்,
கட்டடங்கள்,
காசுகள்


ஆகியவற்றைக் கண்டுபிடித்துத் தந்துள்ளன.

தமிழக முதல்வர் வழங்கிய ஆதரவைக்கொண்டு ஏற்கெனவே கோவா ஆழ்கடல் அகழாய்வு மையம் பூம்புகாரில் நடத்திய ஆய்வில் கடலுக்குள்ளிருக்கும் கறுப்பு,சிவப்புப் பானை ஓடுகள் கட்டடப் பகுதிகள், நகர்ப் பகுதிகளைக் கண்டறிந்துள்ளது. ஆனால் தற்போது கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, தனிச் சிறப்பிற்கு உரியதாகும்.

பெரிய தாழியில் பத்துக்கும் மேற்ப்பட்ட சிறுசிறு கலயங்கள் கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்த முதுமக்கள் தாழிகளைவிடப் பெரிய அளவிலும் உடையாத கலயங்களும் தற்போது கிடைத்துள்ளன.

கறுப்பு சிவப்பு கலயத்தில் எழுத்துப் பொறிப்புடன் கிடைத்துள்ள முதல் கலயம் இதுதான். குறியீடுகளோடு பூம்புகாரில் இதுவரை கறுப்பு சிவப்புக் கலயம் ஏதும் கிடைக்கவில்லை. இதில் கழுத்துப் பகுதியில் கோட்டிற்குமேலே பாய்மரப் படகும் மீனும் பொறிப்புகளாக உள்ளன. இது 21 செ.மீ உயரமும் 10 செ.மீ. வாய்ப்பகுதி அகலமும் கொண்டுள்ளது.

பூம்புகாருக்கு அருகில் வானகிரி கோசக்குளத்தில்,1997-98-ல் எழுத்து பொறிக்கப்பட்டிருந்த பானை ஓடு கிடைத்துள்ளது. ஆனால் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை இன்றுவரை ஆய்வாளர்கள் ஏற்கும் வகையில் உறுதிப்படுத்த முடியவில்லை. செம்பியன் கண்டியூர் அய்யனார் கோயிலில் கிடைத்துள்ள கறுப்புநிற பானையின் கழுத்துப் பகுதியில் இரண்டு அம்புக்குறியீடுகள் மட்டும் உள்ளன. இதே ஊரில் கிடைத்த கல்கத்தி அல்லது கல்கோடாரியில் சிந்துவெளிக் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கல்கத்தியின் காலம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது என்று தொல்லியல் அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.

தற்போது கிடைத்துள்ள ஆதாரம் பலவகைகளில் குறிப்பிடத்தக்கது. கறுப்பு சிவப்பு நிறம் என்பது கி.மு.5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தைக் காட்டுகிறது. கறுப்பு சிவப்பு நிறப்பானை சமதரையில் கிடைக்காமல் முதுமக்கள் தாழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. முதுமக்கள் தாழியின் காலம் பெருங்கற்காலம். பெருங்கற்காலம் கி.மு.1000-லிருந்து கி.மு.3000 வரையிலான காலத்தைச் சேர்ந்தது. மேலும் உறை கிணறு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாலை, "உறைகிணற்றுப் புறசேரி" (வரி 27)யைப் பற்றி குறிப்பிடுகிறது.

கிணறுகள் பலவகை.

கடலுக்கு அருகில் அமைக்கப்பட்ட கிணறு ஆழிக்கிணறு;
ஒழுங்கமைவு இல்லாத கிணறு கூவம்;
ஆற்றுமணலில் தோண்டுவது தொடுகிணறு;
ஏரியின் நடுவில் உள்ள கிணறு பிள்ளைக் கிணறு;
பூட்டை உருளை கொண்டு கமலை நீர் பாய்ச்சத் தோண்டிய கிணறு பூட்டைக் கிணறு.
இவ்வரிசையில் மேலும் ஒரு கிணறு உறை கிணறு.

பூம்புகாரில் கடலோரத்தில் வானகிரியில் உறைகிணறு ஒன்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கடற்கரை மணலில் குடிநீருக்காக தோண்டப்படுகின்ற கிணறுகள் மண் சரிந்து தூர்ந்து போகாமல் இருக்க கட்ட மண் வளையங்கள் கொண்டு உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொற்கை, நந்தன் மேடு, அரிக்க மேடு ஆகிய பகுதிகளில் உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூம்புகாரின் கடற்கரையில் விழா நடைபெற்றபோது மக்கள் கூடியிருந்த செய்தியை உறைகிணறு உறுதிப்படுத்துகிறது.

குறியீடுகளோடு கறுப்பு சிவப்பு நிறக் கலயம் முதுமக்கள் தாழியிலிருந்து கிடைத்திருப்பதும் கடற்கரையில் விழாக் காலங்களில் மக்களின் தாகத்தைத் தீர்த்த உறைகிணறு வெளிப்பட்டிருப்பதும் வரலாற்றாய்விற்கும் தமிழியல் ஆய்விற்கும் புதிய வெளிச்சத்தைத் தரக்கூடும்.

நன்றி: தினமணி

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES