மண்ணின் குரல்: ஏப்ரல் 2017:தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில்

0 மறுமொழிகள்
வணக்கம்.




மதுரையின் திருப்பரங்குன்றம் மலையில் தெற்கே தென்பரங்குன்றம் பகுதியில் கி.பி.8-9ம் நூற்றாண்டளவில் ஒரு சமணக் குடைவரைக் கோயில் உருவாக்கப்பட்டது. இக்குடைவரைக் கருவரையில் புடைப்புச் சிற்பமாக ஒரு தீர்த்தங்கரரின் உருவமும் செய்விக்கப்பட்டிருந்தது. கி.பி.1223இல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரைக் கோயில் ஒரு சிவன் கோயிலாக மாற்றம் கண்டது.

சுந்தர பாண்டிய ஈஸ்வரம் என்று பெயர் மாற்றம் பெற்று அதன் பராமரிப்புக்காகப் புளிங்குன்றூர் என்னும் கிராமத்தை மன்னன் தானமளித்த செய்தி இக்கோயிலிலுள்ள குடைவரையின் கிழக்குச் சுவற்றில் வெட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலைச் சிவன் கோயிலாக மாற்றுவதில் பிரசன்ன தேவர் என்னும் சைவத்துறவி முக்கியப் பங்காற்றியுள்ளார் என்ற செய்தியும் கல்வெட்டின் வழி அறிய முடிகின்றது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் புளிங்குன்றூரை இன்று உள்ள வேடர் புளியங்குளம் என்ற ஊராகக் கொள்ளலாம்.

தற்போது உமையாண்டவர் கோயில் என்று இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. அதற்கு ஏற்ப ஏற்கனவே இருந்த சமணத் தீர்த்தங்கரர் உருவத்தை மாற்றம்  செய்து அர்த்தநாரியின் உருவத்தையும்  அதன் பின் நந்தியின் உருவத்தையும் செய்துக்கியுள்ளனர். அர்த்தநாரியின் தலைக்கு மேலாக அசோக மரத்தின் சுருள் சுருளான கிளைகள் இன்றும் காணப்படுகின்றன.

கோயிலின் வெளிப்புறத்தில் சைவக் குரவர் நால்வரின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.   பாறையைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களாக இறைவடிவங்கள், வடிக்கப்பட்டிருக்கும் அழகிய கலைக்கோயில் இது. இக்கோயிலின் வரலார்றைச் சொல்லும் தமிழ் எழுத்துக்களில் செதுக்கப்பட்ட விரிவான கல்வெட்டுச் செய்தியும் இக்கோயிலில் இருப்பது சிறப்பு.  மதுரையின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒரு கலை வடிவம் இக்குடைவரைக் கோயில் எனலாம்.


துணை நூல்:
மாமதுரை,பொ.இராசேந்திரன், சொ.சாந்தலிங்கம், -  பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடு.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2017/04/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=lbRUKG1tagA&feature=youtu.be












பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


மண்ணின் குரல்: மார்ச் 2017: திருப்பரங்குன்றம் சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா

0 மறுமொழிகள்
வணக்கம்.

மதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் குன்றின் மேல் இஸ்லாமிய மக்கள் வந்து வழிபட்டுச் செல்லும் ஒரு தர்கா ஒன்று இருக்கின்றது.

தென்பரங்குன்றம் ஸ்ரீ காசிவிசுவநாதர் கோயிலுக்குச் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள படிகளில் ஏறிச் செல்லும் போது மேற்பக்கத்தில் மலைப்பகுதியில் வலது பக்கத்தில் மற்றுமொரு பாதை விரிவதைக் காணலாம். அந்த விரிந்து செல்லும் பாதையில் தொடர்ந்து சென்றால் அங்கே சமமான ஒரு தரைப்பகுதி இருப்பதையும், அதன் அருகிலேயே ஒரு சுனை ஒன்று நீருடன் காட்சி அளிப்பதையும் காணலாம். அங்கிருந்து வடக்கு நோக்கிப் பார்த்தால் இரண்டு சமாதிகள் எழுப்பப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்தச் சமாதி இருக்கும் இடத்திலிருந்து மேலே செல்வதற்கென்று கற்படிகளோ அல்லது வாகனம் செல்லும் சாலையோ இல்லை. ஆனால் மரங்கள் நிறைந்த அப்பகுதியில் மேலே மனிதர்கள் செல்லும் ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பதைக் காண முடியும். அந்த ஒற்றையடிப்பாதையில் ஏறி படிப்படியாக ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் நடந்தால் மேலே இருக்கின்ற தர்காவைக் காணமுடியும்.

நான் சென்றது மதிய நேரம். மேலே நான் வந்து சேர்ந்த போது மணி ஏறக்குறைய முற்பகல் பன்னிரண்டு இருக்கும். நான் உள்ளே நுழையும் போது குடும்பங்களாக ஆணும் பெண்ணுமாக இஸ்லாமிய மக்கள் வழிபாடு முடித்து வந்து கொண்டும் தர்காவிற்குள் சென்று கொண்டும் இருந்தனர். வாசலில் சில வயதான பெரியோர் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் தன் பக்கத்தில் மயிலிறகு கட்டு ஒன்றினையும் வைத்திருந்தார். தர்காவிற்கு வருபவர்களுக்கு மந்திரித்து அவர்களுக்குப் புனித நீரைக் கொடுப்பது மற்றும் மயிலிறகுக் கட்டினால் அவர்களின் தலையின் மேல் வைத்து எடுத்து  ஓதிப் பிரார்த்திப்பது என்பது போன்ற சடங்குகளைச் செய்பவர் இவர்.

 சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் தர்கா என்பது இந்த தர்காவின்  பெயர். இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்காக ஏறக்குறை எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரேபிய நாட்டிலிருந்து இப்பகுதிக்கு வந்து பின் இங்கே வாழ்ந்து மறைந்தவர் பெயரில் தான் இந்தத் தர்கா வழங்கப்படுகின்றது. அப்போது மதுரையைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். மன்னருக்கும் ஏனையோருக்கும் நோய் ஏற்படும் போதும், உடல் உபாதைகள் ஏற்படும் போதும் மருத்துவ உதவிகளை குரான் ஓதுதல், மூலிகை மருத்துவம் என்ற வகையில் செய்து பிணி தீர்க்க இங்கு வாழ்ந்த இஸ்லாமிய குருமார்கள் உதவியிருக்கின்றனர். இதன் அடிப்படையில் இந்த குருமார்களுக்குப் பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் அருகாமையில் இருந்த கிராமங்களில் வாழ்வதற்கான இடங்கள் வழங்கப்பட்டன. சுல்தான், மற்றும் அவருடன் வந்த மந்திரிகள், மத குருமார்கள், மந்திரியாக இருந்து வைத்திய சாத்திரம் படித்த இஸ்லாமிய மருத்துவர் ஆகியோர் சமாதிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இங்குள்ள ஐதீகத்தின் படி, இந்தச் சுல்தான் தன் வயோதிக வயதில் இந்தக் குன்று இருக்கும் பகுதியில் மறைந்தார் என நம்புகின்றனர்.

சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலியுல்லாஹ் அவர்களின் சமாதி இந்தத் தர்காவின் உட்புறத்தில் அமைந்துள்ளது. இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையில் பின்புறமாக இந்தச் சமாதி எழுப்பப்பட்டுள்ளது. குடைவரை கோயில் போன்ற அமைப்பு உள்ளே இருக்கின்றது. அந்தச் சமாதியின் மேல் பக்கம் பச்சை நிறத்திலான துணி போர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சமாதிக்கு முன் புறத்தில் மேலும் ஒரு சமாதி ஒன்றும் உள்ளது. இது சுல்தானுடன் வந்த மந்திரியின் சமாதி. இந்தச் சமாதிக்கு முன்னர் மிக வித்தியாசமான தோற்றத்தில் அமைந்த வெண்கல குத்து விளக்குகளை வரிசையாக வைத்திருக்கின்றனர். இந்தச் சமாதி பிரத்தியேகமாக ஒரு இரும்புக் கம்பி போட்டு பாதுகாக்கப் படுகின்றது. சுல்தான் மட்டுமல்லாது இந்த மந்திரியும் மருத்துவத்தில் திறமை பெற்றவராக இருந்திருக்கின்றார். அவர்கள் வந்து சேர்ந்த இப்பகுதியில், காடுகளில் கிடைத்த மூலிகைகளைக் கொண்டு நோய்வாய்ப்பட்டு வாடும் மக்களுக்கு உதவும் சேவையை இவர்கள் செய்திருக்கின்றனர். இந்த மந்திரியின் பெயர் லுக்மான் ஹகீம் என்பது.



விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/03/blog-post_26.html
யூடியூபில் காண:      https://www.youtube.com/watch?v=zzUknnJFI6s&feature=youtu.be








பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​




வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 4

0 மறுமொழிகள்
வணக்கம்.
நெல்லை வட்டார வழக்கு இனிமையானது அதில் உள்ள சிறப்பான மேலும் சில சொற்களை நமக்காக வழங்குகின்றார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் திரு.ஆமோஸ் நவீன் இளையராஜா.


குறிப்பு: பேஸ்புக் பக்கத்தில் த.ம.அ பதிவுகளைப் பார்த்து தாமும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என முன் வந்து ஆக்ககரமான முறையில் ஒரு பதிவினை செய்து அனுப்பி வைத்த  தம்பி ஆமோசின் முயற்சியைப் பாராட்டுகின்றேன்!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


மண்ணின் குரல்: மார்ச் 2017: தென்பரங்குன்றம் கன்னிமார் கோயில் குலதெய்வங்கள் வழிபாடு

0 மறுமொழிகள்
வணக்கம்.

மதுரை மாநகரில் ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலைப் பற்றி பெரும்பாலோர் அறிந்திருப்போம். அங்கே தென்பரங்குன்றம் என ஒரு பகுதியும் உள்ளது. திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வரும் வழியில், அதாவது மலையின் நேர் பின் பக்கத்தில் இந்தத் தென்பரங்குன்றம் அமைந்துள்ளது. தென்பரங்குன்ற மலையின் சமணர் குடை வரை கோவில் ஒன்று உள்ளது. தற்போது உமையாண்டார் கோயில் என இக்கோயில் அழைக்கப்படுகின்றது.  இந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதிக்குக் கீழே உள்ள காட்டுப்பகுதியில் ஆங்காங்கே மரங்களின் கீழ் வராகி, நாகர், முனியாண்டி சாமி என நாட்டார் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழர் பண்டைய பாரம்பரியத்தின் வழிபாட்டுக் கூரான குலதெய்வ வழிபாடு என்பது இப்பகுதியில் சிறப்புப் பெற்றுள்ளது. இங்கே மூலைக்கு மூலை அமைந்திருக்கும் சிலைகளை மக்கள் ஒவ்வொரு சிறப்பு நாட்களிலும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். 


இங்குள்ள குடைவரைக் கோயிலில் பாதுகாவலராக இருக்கும் பெரியவர் ஒருவர் என் உடன் வந்து இந்தக் குலதெய்வ சாமிகள் இருக்கும் இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றியும்  விளக்கம் அளித்தார். இதே பகுதியில் சற்றே உயரமான ஒரு குன்று பகுதியில் சப்த கன்னிமார்  கோயில் அமைந்துள்ளது. இங்கே கருப்புசாமி, விநாயகர், நாகம்மா ஆகிய தெய்வங்களும் வழிபாட்டில் இடம்பெறுகின்றன. 

அருகிலேயே  ஒரு சிறு கூடாரத்திற்குள் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது.  சிவலிங்கத்திற்குப் பால் சுனை கண்ட சிவபெருமான் என்பது பெயர். இங்கு பஞ்சலிங்க சன்னிதி ஒன்றும் அமைந்திருக்கின்றது.

இந்தப் பகுதி அழகிய வனம் சூழ்ந்து இயற்கை எழிலுடன் அமைந்திருக்கின்றது. குலதெய்வ வழிபாடு இன்றும் மிகச்சிறப்புடன் நடத்தப்படுகின்ற ஒரு பகுதியாக இது திகழ்கின்றது.


விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/03/blog-post_18.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=iBpJhzgYVMc&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​



















வட்டார வழக்கு - ஒப்பாரிப் பாடல்கள் -ஆண் பாடகர்

0 மறுமொழிகள்
வணக்கம்.

ஒப்பாரிப் பாடல்கள் வழி  வழியாய் தமிழர் பாரம்பரியத்தில் வருகின்ற ஒரு கலை.  பொதுவாக இறந்தோர் இல்லங்களில் வயதான பெண்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுவர். ஆனால் வித்தியாசமாக ஆண் ஒருவர் ஒப்பாரிப் பாடலை பாடுவதை இப்பதிவில் கேட்கலாம்.



இந்தியாவின் மிகப் பழைமையான மாநகராட்சியான மெட்ராஸ் பட்டிணத்தின் வட சென்னையில் வாழும் மக்களிடையே நிலவும் வாய் மொழிப் பதிவு இது. மரண நிகழ்வில் பாடப்படும் பட்டினத்தார் பாடல்கள் இதில் முக்கியத்துவம் பெருகின்றன.

பூதவுடலை எடுக்கும்போதும், இடுகாட்டிற்குக் கொண்டு போகும் வழியிலும், இடுகாட்டின் நுழை வாயிலில் உள்ள அரிச்சந்திரன் கோயிலின் முன்னேயும், பின்பு பிணத்தைப் புதைக்கும்போதும் ஏராளமான பாடல்கள் பாடப்படுகின்றன. அந்தப் பாடல்கள் பெரும்பாலும் பட்டினத்தார் பாடல்களாக இருக்கின்றன. அந்த பாடல்களின் சிறப்பு அவற்றைக் கேட்கும் போது புலப்படும். அந்தப் பாடல்களை அவர்கள் ஒப்பாரிப் பாடல்களாவும் சடங்குப் பாடல்களாவும் கருதுகின்றனர்.



குறிப்பு.  இந்த ஒலிப்பதிவுகளையும் புகைப்படங்களையும் நமக்கு வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்கு நமது நன்றி.

பாடல் பதிவு 1
பாடல் பதிவு 2






அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


மண்ணின் குரல் ஒலிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 3

0 மறுமொழிகள்
வணக்கம்.

இந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் பாடப்படும் சில பாடல்களைப் பற்றி விவரிக்கின்றார்.

கிராமிய பாடல்கள் என்றாலே எளிமையும் அழகும் நிறைந்திருக்கும் தானே. சின்னச் சின்னப் பாடல்கள் தாம் என்றாலும் இவையும் மறக்கப்படும் சூழல் உருவாகிக்கொண்டிருப்பதைத் தானே காண்கின்றோம்!


பதிவைக் கேட்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


மண்ணின் குரல்: பெப்ரவரி 2017: கோரிப்பாளையம் தர்கா, மதுரை

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழகத்தின் மதுரையில் வைகையாற்றின் வடகரையில் உள்ள நகர்ப்பகுதிக்கு முகமது கோரியின் நினைவாக, அல்லது கோரியின் படைகள் வந்திறங்கிய இடம் என்ற பொருளில் கோரிப்பாளையம் என்ற பெயர் வழங்கி வருகின்றது. இங்கே ஒரு தர்காவும், பள்ளிவாசலும் உள்ளன. இங்குள்ள தர்காவில் சுல்தான் அலாவுதீன் உதௌஜி அவர்களும், அவரது மருமகனான குத்புதீன் பிரோம் ஷாக்குஸ் அவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



இந்த தர்க்காவின் உட்புறம் நடைவழியில் உள்ள மதுரை நாயக்க மன்னன் வீரப்பநாயக்கர் காலக் கல்வெட்டு (கி.பி.1573) தில்லி ஒரு கோல் சுல்தானென்று குறிப்பிடுகின்றது. வாரங்கல் என்பது இக்கல்வெட்டில் ஒரு கோல் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்களிடையே ஒரு கருத்தும் நிலவுகின்றது..

இப்பள்ளிவாசலுக்கு கூன் பாண்டியன் காலத்தில் 14 ஆயிரம் பொன் அளிக்கப்பட்டுள்ளதென்றும் அதனைக் கொண்டு ஆறு  சிற்றூர்கள் வாங்கப்பட்டு இப்பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது என்றும் வீரப்ப நாயக்கன் காலக்கல்வெட்டிலிருந்து அறிய முடிகின்றது.

பாண்டிய மன்னர்களுக்குத் தேவையான குதிரைகளை அரேபியாவிலிருந்து தருவித்த போது, குதிரை வணிகத்தை ஒட்டி அரேபிய நாட்டைச் சேர்ந்த இசுலாமியர் பலர் மதுரைக்கு வந்தனர் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விசயமாகின்றது.

நன்றி: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.


விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/03/blog-post_12.html
யூடியூபில் காண:     https://www.youtube.com/watch?v=gYV0Ptg0ioA&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​


மண்ணின் குரல் ஒலிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 2

0 மறுமொழிகள்
வணக்கம்.

இந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் உள்ள பண்டிகைகள் பற்றியும் அப்பண்டிகைகளின் போது செய்யப்படும் உணவு பதார்த்தங்கள் பற்றியும் சொல்கின்றார்.

பொதுவான நம் பேச்சு வழக்கில் கேட்டிராத பல சொற்கள் இதில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதை இப்பதிவைக் கேட்கும் போது உணரலாம்.

பதிவைக் கேட்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


மண்ணின் குரல் ஒலிப்பதிவுகள்: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 1

0 மறுமொழிகள்
வணக்கம்.

​காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், இப்படி நகரத்தார் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் நகரத்தார் வட்டார வழக்கினை மக்கள் பேசும் போது கேட்டிருப்போம். இன்றோ நகரத்தார்கள் மலேசியா, சிங்கை, பர்மா என்று மட்டுமல்லாமல் அமெரிக்கா ஐரோப்பா என பல நாடுகளிலும் வசிக்கின்றார்கள். நகரத்தார் பேச்சு வழக்கு இங்கேயும் அவ்வப்போது கேட்கத்தான் முடிகின்றது.

வட அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் திருமதி.விசாலாட்சி வேலு தமிழகத்தின்  அரிமளத்தில் பிறந்து வளர்ந்தவர்.  இன்றும் மிக இயல்பாக நகரத்தார் தமிழில் உரையாடும் திறனோடு இருக்கின்றார்.

அவர் நகரத்தார் பேச்சு வழக்கிலேயே செட்டி நாட்டு மக்களிடையே உறவு முறைகளை எப்படி பெயரிட்டு அழைப்பர் என்பதனை விளக்குகின்றார்.

பதிவினைக் கேட்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​


மண்ணின் குரல்: பெப்ரவரி 2017: சமணமலை - மதுரை

0 மறுமொழிகள்
வணக்கம்.

மதுரை நகரின் தெற்கே தேனி செல்லும் சாலையில் நாகமலைப் புதுக்கோட்டைக்குத் தெற்கில் அமைந்துள்ளது சமண மலை. இங்கு இயற்கையான பாறை ஒன்று அமைந்துள்ளது. இதில் ஏறக்குறைய கிபி 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட சுமார் ஆறு அடி உயரமுள்ள அமர்ந்த நிலையில் காணப்படும் மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தை உருவாக்கக்காரணமான குறண்டி திருக்காட்டாம் பள்ளியின் மாணாக்கர்கள் பெயர் இங்கே வட்டெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.வெண்புநாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக நந்திப்ப
2.டாரர் அபினந்தபடார் அவர் மாணாக்கர் அரிமண்டலப்ப டார்அ
3.பினந்தனப்படார் செய்வித்த திருமேனி

என்பது இக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தியாகும்.

இதற்கடுத்து இங்குள்ள குகையில் ஐந்து புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. முக்குடை அண்ணல்கள் அமர்ந்திருக்க  ஒரு இயக்கி சிம்மத்தின் மீது அமர்ந்து யானை மீது அமர்ந்துள்ள அசுரனோடு வீராவேசமாகப் போரிடுவது போல செதுக்கப்பட்டுள்ளது. வலது ஓரம் அம்பிகா இயக்கியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிற்பங்களின் கீழ் வட்டெழுத்தில் இவற்றைச் செய்வித்தோர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

முதல்கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகு
2.ணசேனதேவர் சட்டன் தெய்வ
3.பலதேவர் செய்விச்ச திருமேனி


அடுத்த கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டி
2. த் திருக்காட்டாம்பள்ளிக்
3. குணசேனதேவர் மாணாக்கர் வ
4. ர்தமானப் பண்டிதர் மாணாக்
5. கர் குணசேனப் பெரிய
6. டிகள் செய்வித்த தி
7. ருமேனி

என்றும்

மூன்றாம் கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்
2. கின்ற குணசேனதேவர் சட்டன்
3. அந்தலையான் களக்குடி தன்னை
4. ச் சார்த்தி செய்வித்த திரு
5. மேனி

என்றும் வழங்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின் வழி இச்சமணப்பள்ளிக்கு நெடுங்காலம் பொறுப்பு வகித்தவர் குணசேனதேவர் என்பது அவரது சீடர்கள் இப்பள்ளியை நிர்வகித்து இச்சிற்பங்களைப் பாதுகாத்தனர் என்றும் அறியலாம். மதுரைப்பகுதியிலேயே மிகப்பெரிய பள்ளியாக இது திகழ்ந்தது.

நன்றி: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2017/03/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=HrnlAxeX-ls&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

























 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES