நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் -1

0 மறுமொழிகள்
வணக்கம்.

இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. ஏப்ரல் மாதம் வெளிவந்த முதலாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


உள்ளடக்கம்:
  • விஷேஷ கவனிப்பு
  • மாதர்கதி
  • பாம்பு கடிக்காமல் பார்த்துக் கொள்வதும் பாம்புக் ககடிக்கு சிகித்ஸை செய்வதும்
  • கடிதங்கள்
  • மகாத்மா காந்தி
  • செய்தித் திரட்டு
  • சங்க விஷயங்கள்
  • ஆசிரம வாசம்
  • அமெரிக்கா தேசத்தில் பத்திரிகையின் அபிவிருத்தி

அத்துடன் ..
அனுபோக கைத்தொழில் போதினி என்ற தலைபிலான கைத்தொழில் சாஸ்திரத்தை விளக்கும் நூல் பற்றிய விளம்பரமும் இந்த இதழில் உள்ளது.


வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]



மண்ணின் குரல்: மே 2014: சோழ நாட்டுக் கோயில் - காமரதிவல்லி

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சோழர் காலக் கோயிலில் வரிசையில் மேலும் ஒரு பழமையான கோயிலின் பதிவை இன்று காணவிருக்கின்றோம்.

​தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தின் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்திருப்பது காமரதிவல்லி பாலாம்பிகை உடனுறை சௌந்தரேசுவர சுவாமி கோயில். இக்கோயில் சுந்தர சோழனால் இன்றைக்கு சுமார் 1050 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.

மிக மோசமான நிலையில் சிதைந்திருந்த இந்தக் கோயில் சென்னையைச் சார்ந்த மாகாலக்‌ஷ்மி சுப்பிரமணியம் அவர்களது ட்ரஸ்ட் பெரு முயற்சியில் உள்ளூர் மக்களின் பேராதரவுடனும், ஒத்துழைப்புடனும், உழைப்புடனும் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகின்றது.


கோயிலின் மூலவர்: சௌந்தரேசுவர சுவாமி -  கார்க்கோடகன் பூசித்து பேறு பெற்றதனால் இறைவன் 'கார்க்கோட்டீசுவரர்', கார்க்கோடகர் என்ற பெயர்களிலும் விளங்குகிறார்.
கோயிலின் அம்மன்: பாலாம்பிகை

சிற்பங்கள்: ஆலயத்தில் வினாயகர், வள்ளி தெய்வயானையுடன் கூடிய முருகன், துர்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர்.

இத்துடன் சிறப்பாகை சிவலிங்க வடிவில் இருக்கும் பெருமானுக்கு கார்க்கோடகன் பூஜை செய்யும் வகையில் அமைந்த சிற்பம் ஒன்றும் உள்ளது.

இது நாகதோஷத்தை நீக்கும் பரிகாரத் தலமாகவும் கருதப்படுகின்றது. கோயிலின் ஒரு பகுதியில் நாகர் சிற்பங்கள் இருக்கின்றன.

இக்கோயில் சுந்தரசோழனால் (கி.பி.957-974) அவன் ஆட்சி காலத்தில் கி.பி.962ம் ஆண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இக்கோயிலில் சுந்தர சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன்,  மூன்றாம் குலோத்துங்கன், கடாவர்மன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுக்கள் காணக்கிடைக்கின்றன. சில பகுதிகள் சிதைந்து விட்டாலும் வாசிக்கக் கூடிய நிலையில் இன்னமும் பல கல்வெட்டுக்கள் உள்ளன. 

தினமலரின் கோயில்கள் தொகுப்பில் உள்ள இக்கோயிலைப் பற்றிய தகவல்கள் ....... காமன் என்கிற மன்மதன் ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்ற கதை நாம் அனைவரும் அறிந்ததே. தன் கணவன் மன்மதனை மீண்டும் உயிர்பித்துத் தருமாறு ஈசனை நோக்கி தவம் இருந்தாள் அவனது துணைவியான ரதிதேவி. காமனை அழித்து விட்டதால், இனப்பெருக்கம் அப்போது குறைந்து போனதாலும், தன்னை வழிபட்ட ரதிக்கு மாங்கல்ய பிச்சை தருவதற்காகவும் அவள் பார்வைக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை உயிர்பித்துத் தந்தார் ஈசன். ரதிக்கு வரம் கொடுத்த ஊர் என்பதால் ரதிவரபுரம் என்றும் காமனின் தேவியான ரதி தவம் இருந்த தலம் என்பதால், காமரதிவல்லி எனவும் அழைக்கப்படலானது. இதுவே பின்னாளில் காமரசவல்லி ஆகி விட்டது.

ஊர்ப் பெயருக்கான இந்தக் கதை புராணத்தோடு நின்றுப்போய் விடவில்லை. இதை மெய்ப்பிக்கும் வகையில் ரதிதேவியின் செப்புத் திருமேனி ஒன்று இந்த ஆலயத்தில் உள்ளது. தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டி, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி, மாங்கல்ய பிச்சை கேட்கும் கோலத்தில் காணப்படுகிறது இந்தத் திருமேனி. காமரசவல்லியில் ஒவ்வொரு மாசி மாதமும் பவுர்ணமி தினத்தன்று காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை ஆலயத்தில் நட்டு வைப்பார்கள். இறை பக்திக்கு உட்பட்டும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டும் இந்தக் கிளை எட்டே நாட்களுக்குள் மீண்டும் உயிர் பெற்று வளர்கிறது. 
...
ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் நடந்த வேத பாராயண போட்டி பற்றியும், மார்கழி மாதத்தில் நடக்கும் திருவாதிரை விழா பற்றியும், அந்த விழாவில் நடைபெறும் சாக்கக் கூத்து என்கிற கூத்து பற்றியும் கல்வெட்டுகளில் தகவல் இடம் பெற்றுள்ளது. 

இந்த ஊரில் நடந்த ஒரு நிலத் தகராறு பற்றிய வழக்கை விசாரிக்க கி.பி. 1240-ல் போசள மன்னன் வீரசோமேஸ்வரன் காமரசவல்லிக்கு வந்து தீர்ப்பு வழங்கிய விவரத்தையும் ஒரு கல்வெட்டு சொல்கிறது. ஆலய வழிபாடுகளுக்கு மாலைகள் கட்டுவதற்கு நந்தவனம் அமைத்த பகுதி பிச்சதேவன் நந்தவனம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நந்தவனத்தைப் பராமரித்து வந்தவர்கள் வசிப்பதகென ஒரு பகுதியை இருந்துள்ளது. அது திருத்தொண்டன் தொகையன் வளாகம் என வழக்கப்பட்டுள்ளது. http://temple.dinamalar.com/New.php?id=1703


Inline image 4

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள சிற்பம் ஒன்றில் அப்பர் சுவாமிகள் மேளதாளத்துடன் சாக்கி கூத்து நடக்கையில் இருப்பது போன்ற ஒரு சிற்பமும் இருக்கின்றது.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/05/blog-post_30.html

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=Kxs-J4VNG4Q

இப்பதிவு ஏறக்குறைய 14 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் பின்னர் இணைக்கப்பட்டு அறிவிக்கப்படும்!

இவ்விழியம் 1.3.2013ம் நாள் பதிவாக்கப்பட்டது. இப்பதிவினைச் செய்ய துணை புரிந்த திரு.சுந்தர் பரத்வாஜ், டாக்டர்.பத்மாவதி, திரு.பரந்தாமன், காமரதிவல்லி ஆலயபொறுப்பாளர், கிராம நாட்டாமை, கிராம மக்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் -2

0 மறுமொழிகள்
வணக்கம்.

இன்றும் ஒரு சஞ்சிகையை வெளியிடுகின்றோம்.

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. மார்ச் மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


உள்ளடக்கம்:
  • பொதுச்சமாச்சாரங்கள்
  • நாடார் மகாஜன சங்கப்பிரசாரம்
  • குறிப்புகளும் அபிப்ராயங்களும்
  • ஆஷியுமல்ல, ஆச்சியுமல்ல, ஆத்தியே சரி
  • ஆலயச் சம்த்துவம்
  • கடிதங்கள்
  • தூங்கியது போதும்
  • மகாத்மா கைது செய்யப்பட்டார்
  • ஆசிரம வாசம்

அத்துடன்
நாடார் குல மித்திரன் பத்திராதிபர் சூ.ஆ.முத்து நாடாரவர்களால் பாடப்பட்ட நடராஜப்பதிகம், ஸ்ரீ முத்துமாரியம்மன் பதிகம் பற்றிய நூல் அறிவிப்பும் இடம்பெறுகின்றது.


வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் -1

0 மறுமொழிகள்
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு மார்ச் மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. மார்ச் மாதம் வெளிவந்த முதலாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு தெளிவு மிக குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


உள்ளடக்கம்:
  • சென்னைக்கேகும் நாடார்களுக்கு வசதி
  • மிஸ்டர் அஸரியா நாடாரவர்கள் போட்டோ படம்
  • மேலக்கோட்டையூர் சின்னையாபுரம் நாடார் ஷத்திரியவித்தியாபி விர்த்திசங்கம் - 2வது ஆண்டு நிறைவு விழா
  • நம் தாய்பாஷை ஜலதோஷத்தால் வருந்துகிறாள்
  • நற்போதனைகள்
  • செய்தி திரட்டு
  • அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் இரதோர்ச்சவம்
  • நாடார்களுக்கோர் எச்சரிக்கை
  • சங்க விஷயங்கள்
  • பொது வர்த்தமானம்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்: மே 2014: திருச்சி தமிழ்ச் சங்கம்

0 மறுமொழிகள்
வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 
திருச்சி தமிழ்ச்சங்கம் பல ஆண்டுகளாக தமிழிலக்கியப்பணி மேற்கொண்டு  வருகின்றது. திருச்சியின் மையத்திலேயே இச்சங்கத்திற்காக ஒரு கட்டிடமும் அமைந்துள்ளது. 

இச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், புதிய கட்டிடத்தின் தோற்றம் என இவ்விழியப் பதிவில்  விரிவாக விளக்குகின்றார் திருச்சி தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் (செயலாளர்).

இந்த விழியப் பதிவில் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றையும் சங்கத்தின் மேலும் ஒரு பொருப்பாளர் விளக்குகின்றார்.

இப்பதிவு கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நான் தமிழகத்தில் இருந்த பொழுதில் திருச்சி தமிழ்ச்சங்கக் கட்டிடத்திலேயே பதிவாக்கப்பட்டது.

விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.com/2014/05/blog-post_24.html

யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=c86a_hHoE-w

இப்பதிவு ஏறக்குறைய  23  நிமிடங்கள் கொண்டது.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


திருச்சி தமிழ்ச்சங்கம் சென்றிருந்த போது பதிந்த புகைப்படங்கள் இங்கே..!


திருச்சி சாலையில்.. முதல் மாடியில் திருச்சி தமிழ்ச்சங்க அலுவலகம். இந்தக் கட்டிடத்தின் 2ம், 3ம் மாடி முழுவதும் தமிழ்ச்சங்கத்தின் அலுவலகமும் அறைகளும் உள்ளன.


Inline image 2
முன் வாசல் பகுதி





தகவல் பலகை


Inline image 1
வாசலில் திருவள்ளுவர் சிலை


வாசலில் வலது புறத்தில் தமிழ்த்தாய் சிலை


முதல் மாடியில் தமிழ்ச்சங்கக் கட்டிட அலுவலகப் பகுதி




தெ.துரைராசப்பிள்ளை அவர்களது சிலை


Inline image 1
பொன்விழா நிகழ்வு



Inline image 2
நண்பர்.சரவணன், திருச்சி தமிழ்ச்சங்க பொறுப்பாளர்கள், டாக்டர்.பத்மா, சுபா.


Inline image 3
திரும்பும் போது வழியில் தஞ்சாவூரில் ஓரிடத்தில் சாப்பிட்டுச் சுவைத்த பரோட்டா :-)



நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு பெப்ரவரி - 2

0 மறுமொழிகள்
வணக்கம்.

நாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு பெப்ரவரி மாத இதழ்கள் இரண்டு வெளிவந்திருக்கின்றன. பெப்ரவரி மாதம் வெளிவந்த இரண்டாம் இதழை இன்று வெளியிடுகின்றோம்.

குறிப்பு: இந்த மின்னிதழின் மின்னாக்கப் பதிவு சற்று தெளிவு குறைவாக உள்ளது. ஆனால் ஸூம் செய்து பெரிதாக்கிப் பார்த்தால் வாசிக்க முடியும்.


உள்ளடக்கம்:

  • தஷணமகாநாடு
  • வாசகர் கடிதங்கள்
  • கான்பரென்ஸ் கதை
  • நாடார் மஹாஜன சங்கம் மதுரை கவுன்ஸில் மீட்டிங்கு
  • தென்னிந்தியாவில் புகையிலைப் பயிரில் விழும் பூச்சி புழுக்கள்
  • இந்தியவீரர்


வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


மண்ணின் குரல்: மே 2014: சித்தன்னவாசல்

1 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


​அறிவர் கோவில்

புதுக்கோட்டை நகரிலிருந்து 12 கி.மீ தொலைவில் சித்தன்னவாசல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மலையில் சமணர் குகைக்கோவில் ஒன்று உள்ளது. இக்குகைக் கோவிலின் உள்ளே ஒரு சிறு அறையும் வெளியே ஒரு தாழ்வாரமும் உள்ளன. குகைக்கோவிலின் சுவர்களில்  சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. சித்தன்னவாசலும், இதனருகிலுள்ள அன்னவாசலும் பல நூற்றாண்டுகளாகச் சிறந்த சமண மையங்களாக விளங்கின.


​கோவிலுக்குள்ளே

மதுரையைத் தலைநகராகக் கொண்டு அவனிய சேகர ஸ்ரீவல்லப பாண்டியன் (கி.பி, 815-862) ஆட்சி செய்தபொழுது இளம் கௌதமன் என்ற மதுரை ஆசிரியர், சித்தன்னவாசல் குகைக் கோவிலைத் திருப்பணி செய்து, இங்கு உலகம் வியக்கும் ஓவியங்களைத் தோற்றுவித்தார் என்று இக்குகைக் கோவிலிலுள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றன. இங்குள்ள சுவர் ஓவியங்கள் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் உருவானவை என்ற கருத்தும் உள்ளது.
- தமிழ் நாட்டின் தல வரலாறுகளும் பன்பாட்டுச் சின்னங்களும்

சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியம், சிற்பம், நடனம் என முக்கலைகளையும் சிறப்பிக்கும் கலைக்கூடமாக விளங்குகின்றது.


​ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள்

சித்தன்னவாசலோடு இணைந்ததாக அமைந்திருப்பது ஏழடிப்பட்டம் சமணர் பள்ளி. இங்குள்ள பாறையின் மலைப்பகுதியின் மேல் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 17 சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. இங்கே பிராமி எழுத்துக்களிலான கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.  இக்கல்வெடுக்களில் சில கி.மு 3-2 வரையிலானவையாக இருக்கலாம் என அறியப்படுகின்றது.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/05/blog-post_17.html

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=PbY0WlLwXrg

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் பின்னர் இணைக்கப்பட்டு அறிவிக்கப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவிற்கான தகவல்களை எனக்கு அனுப்பி உதவிய திரு.நரசய்யா அவர்களுக்கும், டாக்டர். சுவாமிநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 


மண்ணின் குரல்: மே 2014: கங்கை கொண்ட சோழபுரம் கோயில்

0 மறுமொழிகள்
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 

சோழநாட்டுக் கோயில்களின் பதிவுகளின் வெளியீட்டு வரிசையில் மேலும் ஒரு சிறப்பு மிக்க கோயில்.!

கங்கை கொண்ட சோழபுரம்


விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2014/05/blog-post.html

யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=IA-Gs86bh4c

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.

புகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்!

இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவில் சில தகவல்களை நமக்காகப் பகிர்ந்து கொள்பவர் தமிழகத் தொல்லியல் துறையின் டாக்டர்.பத்மாவதி.

இக்கோயிலைப் பற்றிய சிறந்த அறிமுகத்தை வழங்கும் ஒரு கட்டுரையை இவ்வெளியீட்டில் இணைத்திருக்கின்றோம். இதனை தட்டச்சு செய்து வழங்கிய கீதா சாம்பசிவம், செல்வன் ஆகிய இருக்கும் நம் நன்றி.

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 



நூல்: தமிழ்நாட்டின் தலவரலாறுகளும் பண்பாட்டுச்சின்னங்களும்
ஆசிரியர்: வி.கந்தசாமி எம்.ஏ., எம்.எட்.

கங்கை கொண்ட சோழபுரம்




திருச்சி மாவட்டத்தில், கும்பகோணத்திலிருந்து 27 கிமி தொலைவில் 'கங்கை கொண்ட சோழபுரம்' உள்ளது. (தஞ்சாவூரிலிருந்து 71 கிமி). இவ்வூரின் வரலாற்று சிறப்பினையும், கலை சிறப்பினையும் இங்கே காணலாம்.

வரலாற்றுச் சிறப்பு

தஞ்சையில் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டிச் சீரும் சிறப்புமாக ஆட்சி புரிந்தவர் இராஜராஜ சோழன். இராஜராஜ சோழனின் மகன் முதலாம் இராசேந்திர சோழன் ஆவார். இவரது ஆட்சிகாலம் கிபி 1012 முதல் 1044 வரை ஆகும். இவர் தம் தந்தையை போல் சிறந்த வெற்றி வீரராக விளங்கினார். இலங்கையை முழுவதும் வென்றார். வட இந்தியாவில் வங்காளம் வரை சென்று பல வெற்றிகள் பெற்றார். 'கடாரம்' வரை சென்று வெற்றி பெற்றார். கங்கைவரை சென்று வெற்றிபெற்ற இம்மன்னன் 'கங்கை கொண்ட சோழன்' என்ற சிறப்புப் பெயரை பெற்றார். கங்கைவரை தாம் அடைந்த வெற்றிக்கு அறிகுறியாக 'கங்கை கொண்ட சோழபுரம்' என்ற புதிய நகரை உருவாக்கினார். கங்கைகொண்ட சோழபுரம் உருவாகு முன்பு அந்த இடம் 'வன்னியபுரம்' என்ற ஒரு சிற்றூராக இருந்தது. கிபி 1023ல் புதிய நகர் உருவாகும் பணி தொடங்கபெற்றது. கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறப்புமிக்க அரண்மனை கட்டபட்டது. பலத்த கோட்டைகள் எழுப்பபட்டன. 'கங்கை கொண்ட சோழீசுவரம்' என்ற சிவாலயம் எழுப்பபட்டது. 'கோழகங்கம்' என்ற மிகபெரிய ஏரி வெட்டபட்டது. கிபி ஏறகுறைய 1025ல் கங்கைகொன்ட சோழபுரத்தை இராஜேந்திர சோழர் தமது அரசின் புதிய தலைநகராக கொண்டார். சோழர் தலைநகர் தஞ்சையிலிருந்து கங்கை கொன்ட சோழபுரத்துக்கு மாற்றபட்ட்து.

வடகே துங்கபத்ரா நதி முதல் தெற்கில் இலங்கை வரை உள்ள சோழப் பேரரசிற்கு கங்கை கொன்ட சோழபுரம் தலைநகராயிற்று. முதலாம் இராசேந்திர சோழனுக்கு பின் வந்த சோழ மன்னர்களுக்கும் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகரமாக இருந்தது. கங்கை கொன்ட சோழபுரம் சோழபேரரசின் தலைநகராக்ச் சுமார் 250 ஆண்டுகள் பெருமையுடன் விளங்கியது. இத்துணை சிறப்புமிக்க நகரம் எங்கே போயிற்று? கி.பி. 13ம் நூற்றாண்டில் பெருமையுடன் விளங்கிய பாண்டிய மன்னர் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1251- 68) படையெடுப்பினால் இந்நகரம் அழிவுற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சுந்தரபாண்டியனுக்குப் பின் ஆட்சிபுரிந்த மாறவர்மன் குலசேகரன் (1268 - 1310) மூன்றாம் இராஜேந்திரன் என்ற கடைசி சோழ மன்னரைக் கி.பி. 1279ல் தோற்கடித்துச் சோழராட்சி மறைந்திடச் செய்தார்.

மறைந்த தலைநகரின் எஞ்சிய பகுதிகள் சிலவற்றை இன்று நாம் காணலாம். கங்கை கொண்ட சோழபுரத்திற்கு 2 கி.மி தென்கிழக்கிலுள்ள 'மாலிகை மேடு' என்ற இடத்தில் இராஜேந்திர சோழன் வாழ்ந்த மாளிகையின் அடையாளங்கள் உள்ளன. இங்கு அகழ்ந்து காணப்பட்ட தொல்பொருள்கள் தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையினரால், மாளிகை மேட்டுப் பகுதியிலேயே காட்சிப்பொருள்களாக வைக்கபட்டுள்ளன.

கங்கை கொண்ட சோழபுரத்தின் ' கோ இல்' மறைந்த பின்னும், 'கோவில்' மட்டும் அழியாது நின்று, இராசேந்திர சோழனின் பெருமையைக் கூறுகிறது. தொல்பொருள் துறையினரின் ஆராய்ச்சியில் இந்நகரம் இருந்து வருகிறது.

கங்கை கொண்ட சோழிசுவரத்தின் சிறப்பு

இராசேந்திர சோழர் தம் தந்தையைப்போல் ஒரு சிவபக்தராக விளங்கினார். தம் தந்தை அமைத்த பிரகதிஈஸ்வரர் ஆலயம் புகழுடன் விளங்கினாலும், தம் புதிய தலைநகருக்கு ஒரு சிவாலயம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தினாலும், சிவன் மீது கொண்ட பக்தியினாலும் தம் புதிய தலைநகரத்தில் ஒரு சிவாலயத்தை எழுப்பினார்.  இது 'கங்கை கொண்ட சோழீசுவரம்' எனப்பட்டது.  கங்கை கொண்ட சோழீசுவரத்தின் சிறப்பினைச் சிறிது இங்கு பார்ப்போம்.

1. விமானம், அகமண்டபம், முக மண்டபம், அம்மன் கோவில் திருச்சுற்று மாளிகை, திருமதில், கோபுரங்கள் முதலிய அங்கங்கள் உள்ளிட்டு யாவும் ஒரே காலத்தில் கட்டப்பட்ட சிறப்பினைக் கங்கை கொண்ட சோழீசுவரம் கோவில் கொண்டுள்ளது.

2. கோவிலின் கட்டடப் பகுதிகள் யாவும் கருங்கல்லினாலானவை.  போக்குவரவு வசதி இல்லாத கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வெகு தூரத்திலிருந்து பல டன் எடையுள்ள கருங்கற்களைக் கொண்டு வந்து ஒரு பெரிய கற்கோவிலமைத்திருப்பதை யாரும் பாராட்டாமலிருக்க முடியாது.

3. கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயமும், தஞ்சாவூரிலுள்ள சிவாலயமும் கட்டட மற்றும் சிற்பக் கலையில் பல அம்சங்களில் ஒன்று போலிருக்கின்றன.  கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தஞ்சைக் கோவிலைப்போல் உயரமான அதிட்டான மேடை மீது ஏற்றிக் கட்டப்பட்டுள்ளது.  இருப்பினும் இக்கோயிலின்  அதிட்டான மேடை, கட்டடக் கலையில் தஞ்சைக் கோவிலையும் விஞ்சும் அளவில் உள்ளது.  ஆனால் தஞ்சைக் கோவிலின் அடித்தளம் கண்டுபிடிக்கப்படாத புதிராக உள்ளது.

4. தஞ்சைப் பெரிய கோவிலைப் போல் கங்கை கொண்ட சோழபுரக் கோவிலும் சிறப்பு மிக்க விமானத்தைப் பெற்றுள்ளது.  தஞ்சை விமானத்தைப் போல் இவ்விமானமும் கவர்ச்சி மிக்கது.  மூலவருக்கு மேலுள்ள விமானத்தின் கட்டுக்கோப்பு தஞ்சையைப்போல் அடிமுதல் ஸ்தூபி வரை கருங்கல்லாலாகியது.  ஆனால், தஞ்சை விமானத்தை விட உயரத்தில் குறைவாக உள்ளது.  தஞ்சை விமானத்தின் உய்ரம் 61 மீட்டர். கங்கை கொண்ட சோழபுரக் கோவிலின் விமானம் 55 மீட்டர் உயரமுள்ளது. தஞ்சைக் கோயில் விமானத்தைப் போல் இக்கோவிலின் விமான நிழல் பூமியில் விழாதபடி கட்டப்பட்டுள்ளது.  விமானத்தின் அடி முதல் ஸ்தூபி வரை உள்ள சிற்பங்கள் தென்னிந்தியாவில் உள்ள யாவற்றிலும் வனப்பும் சிறப்பும் பொருந்தியவையாகக் கருதப்படுகின்றன.  விமானத்தின் பிரம ரந்திரத் தளக்கல் தஞ்சைக் கோவிலைப் போல் ஒரே கல்லாலானது.  இவ்வூருக்கு அருகிலுள்ள பரணம் என்ற கிராமத்திலிருந்து சாரம் அமைத்து இக்கல்லை விமானத்தின் சிகரத்தில் ஏற்றினார்களாம்!

5. விமானத்தின் சுவர்களிலுள்ள தேவ கோட்டங்களில் உயிர்ச் சிற்பங்களாகக் காட்சியளிக்கும் பல தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன.  தெற்குச் சுவரில் நர்த்தன விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, ஹரிஹரன், நடராஜர் ஆகிய திருவுருவங்கள் உள்ளன.  மேற்குச் சுவரில் கங்காதரர், லிங்கோத்பவர், உபயதேவிகளுடன் கூடிய திருமால், தேவேந்திரன், உமாமகேஸ்வரர் ஆகிய திருவுருவங்கள் உள்ளன.  வடக்குச் சுவரில் காலசம்ஹாரர், விஷ்ணு, துர்கை, பிரமன், பைரவர், காமதகன மூர்த்தி ஆகிய திருவுருவங்கள் உள்ளன.  கிழக்குச் சுவர்களில் சண்டேச அனுக்கிரஹ மூர்த்தி, ஞான சரஸ்வதி, பிக்ஷாடனர், கஜலக்ஷ்மி ஆகிய திருவுருவங்கள் உள்ளன.  இச்சிற்பங்கள் யாவும் சோழர் காலச் சிற்பிகளின் உன்னதப் படைப்புகள் ஆகும்.  இவை பார்ப்போர் யாவரையும் மெய்ம்மறக்கச் செய்கின்றன.  இவை இந்து சமய வரலாற்றினையும் சிறந்த கலை நுணுக்கத்தையும் கொண்டுள்ளன. சண்டேச அனுக்கிரக மூர்த்தியின் சிற்பம் அதிகச் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.  இச்சிற்பமும் இதர சில சிற்பங்களும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் பணியினால் புதியன போல் காட்சியளிக்கின்றன.

6. துவார பாலர்கள் இக்கோவிலின் மற்றொரு சிறப்பு மிக்க அம்சம் ஆகும்.  கிழக்கு, தெற்கு, வடக்கு வாயில்களிலும், கோயிலுள்ளும் 10 துவார பாலர்கள் சிற்பங்கள் உள்ளன.  இவை சுமார் 4 மீட்டர் உயரத்தில் ஒரே கல்லினால் ஆனவை.  இத்துவாரபாலர் சிலைகள் கோவிலில் கம்பீரமாகத் தோற்றமளிக்கின்றன.

7. கோவிலின் வாயிலை அடுத்து வலப்புறத்திலுள்ள நவக்கிரகச் சிலை புகழ் மிக்கதாகும்.  ஒரே கல்லால் அமைக்கப்பட்ட இந்த நவக்கிரகச் சிலையைப் போல் இந்தியாவில் எங்கும் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  நவக்கிரகம் உள்ள மகா மண்டபத்தில் மேலும் பல அரிய சிற்பங்கள் உள்ளன.

8. கர்ப்பக்கிருகத்திலுள்ள லிங்கம் இக்கோவிலின் மிக முக்கியமான அம்சம் ஆகும்.  மூல லிங்கம் மிகப் பெரிய வடிவுள்ளது.  ஒரே கல்லாலானது.  தஞ்சைக் கோவிலிலுள்ள விங்கத்தை விடச் சற்றுப் பெரியது.  இந்த லிங்கம் உலகிலேயே பெரியது என்று கூறப்படுகிறது.  பகலில் எந்தவித மின் விளக்குச் சாதனமும் இல்லாத இருட்டான சூழ்நிலையில் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது மட்டும் சூரிய ஒளி பிரதிபலிப்பு ஏற்படுவது விநோதமாக உள்ளது.

9. கோவிலிலுள்ள செப்புத் திருமேனிகள் சிறப்பு மிக்கவை.  இவற்றுள் குறிப்பிடத் தக்கது சோமாஸ்கந்தர் சிலையும் சுப்பிரமணியரது சிலையும் ஆகும்.  இவை சோழர் காலத்து வார்ப்புக் கலைத்திறனைக் காட்டுகிறது.

10. சிங்கக் கிணறு இக்கோவிலின் மற்றொரு சிறப்பு ஆகும்.  இராசேந்திர சோழர் தனது வட இந்தியப் படையெடுப்பின் பொழுது கொண்டு வந்த கங்கை நீரின் ஒரு பகுதியை இக்கிணற்றில் ஊற்றினார் என்று கூறப்படுகிறது. இக்கிணற்றின் நீர் இன்றும் பயன்படும் நிலையில் உள்ளது.  உடையார் பாளையம் நிலக்கிழாரால் சிங்கமுகம் கட்டப்பட்டதாகும்.

கோவிலின் வாயிலில் இராசேந்திர சோழன் காலத்தில் அமைத்த கோபுரம் இன்று பாழடைந்த சில கற்களின் அடித்தளத்துடன் மட்டும் காணப்படுகிறது.  இந்ந்கரிலிருந்து 11 கி.மீ தொலைவிலுள்ள கொள்ளிட நதியில் ஓர் அணையைக் கட்டுவதற்குப் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இக்கோவிலின் கோபுரத்திலிருந்தும் மதில் மற்றும் முன் மண்டபங்களிலிருந்தும் கருங்கற்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். (1836)

கோவிலைச் சுற்றியுள்ள பிராகாரத்தில் உத்தர கைலாச அம்மன் கோவில், சண்டிகேஸ்வரர் கோவில், தக்ஷிண கைலாசம், மஹிஷாசுர மர்த்தினி கோவில் ஆகியவை உள்ளன.

கங்கை கொண்ட சோழபுரக் கோவில் தமிழ் மக்கள் பண்பாட்டின் பெருமையைக் கூறும் ஓர் உன்னதச் சின்னம் ஆகும்.  இக்கோவில் முதலாம் இராசேந்திர சோழன் நமக்கு விட்டுச் சென்றுள்ள தலை சிறந்த மரபுரிமைச் செல்வம் ஆகும்.  தஞ்சைச் சோழர்கள் ஆட்சிக்காலம், 'தமிழகக் கோவில் வரலாற்றில் பொற்காலம்' என்பதை உலகிற்குக் காட்டும் கலைக்கோவிலாகும்.



Important sites

1 மறுமொழிகள்
    பயனுள்ள பல இணைய தளங்களின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
ஓம்
வெ.சுப்பிரமணியன்


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES