பாண்டித்துரைத் தேவர்!

0 மறுமொழிகள்
பைந்தமிழ் காத்த பாண்டித்துரைத் தேவர்!

"செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்கு அளித்தேனே!"

என்ற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு ஓர் உதாரணம் வள்ளல் பாண்டித்துரைத்தேவர்.

"சேது சமஸ்தானம்" என அழைக்கப்பட்ட இராமநாதபுரம் மாமன்னராக விளங்கிய பாண்டித்துரைத்தேவர், வள்ளல் பொன்னுசாமி - பர்வதவர்த்தினி நாச்சியார் தம்பதிக்கு 1867ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி இராமநாதபுரம், இராஜவீதி "கவுரி விலாசம்" என்ற இல்லத்தில் பிறந்தார்.

பெற்றோர் இட்ட பெயர் உக்கிரபாண்டியன்.

நாடறிந்த பெயரே பாண்டித்துரைத் தேவர்.
பொன்னுசாமி தேவர் இறந்தபோது பாலகராக இருந்த பாண்டித்துரைத் தேவரை வளர்க்கும் பொறுப்பை ஏஜண்ட் சேஷாத்திரி அய்யங்கார் ஏற்றார்.

அழகர் ராஜு எனும் புலவர் இளம் பருவம் முதல் பாண்டித்துரைத் தேவருக்கு தமிழ் அறிவை ஊட்டி வந்தார். வக்கீல் வெங்டேசுவர சாஸ்திரி ஆங்கில ஆசிரியராய் இருந்தார். பாண்டித்துரைத் தேவர் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றார்.

சிவ பக்தராகத் திகழ்ந்த பாண்டித்துரைத் தேவர் தந்தையின் அரண்மனையை அடுத்து மாளிகை ஒன்றைக் கட்டினார். சிவபெருமான் மீதான பக்தி காரணமாக அம்மாளிகைக்குச் "சோமசுந்தர விலாசம்" என்று பெயரிட்டார்.

1901ம் ஆண்டு சொற்பொழிவாற்றுவதற்காக வள்ளல் பாண்டித்துரைத்தேவர் மதுரை வருகை தந்தார். அப்போது, "திருக்குறள் பரிமேலழகர் உரை" நூலை, விழா ஏற்பாடு செய்த அமைப்பாளரிடம் கேட்டார் தேவர். எங்கு தேடியும் அந்நூல் கிடைக்காதது கண்டும், பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் கண்டு முத்தமிழ் வளர்த்த மதுரையில், திருக்குறள் பரிமேலழகர் உரை கிடைக்காதது கண்டும், தமிழ்ப் பற்றுள்ள தேவரின் மனம் வருந்தியது.



தேவர் உடனடியாக, தமிழ் வளர்த்த மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் வெளியிட விரும்பினார். தமிழ்ச் சங்கம் சார்பில் தரமான தமிழ்க் கல்லூரியும் அமைத்தார் தேவர்.

பாண்டித்துரைத்தேவர் தலைமையில் 1901ம் ஆண்டு மே 24ம் தேதி, மதுரை மாநகரில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ, பெரும்புலவர்களின் ஆலோசனைக் கூட்டம் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கூட்டப்பட்டது.

நற்றமிழ் வளர்த்த மதுரையில் பாண்டித்துரைத்தேவர், தலைவராக வீற்றிருக்க 1901ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி நான்காம் தமிழ்ச்சங்கம் மலர்ந்து, தமிழ் மணம் வீசியது.

அந்நாளில்தான் பழந்தமிழ்க் கருவூலமாக, பாண்டியன் நூலகமும் உருவானது. "தமிழ் ஆய்வு மையம்" அமைத்த பாண்டித்துரைத்தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில், ஆய்வு நுணுக்கமும், ஆழமான புலமையும் மிக்க பெரும் புலவர்களின் கட்டுரைப் பெட்டகமாக 1903ல் "செந்தமிழ்" என்னும் நற்றமிழ் மாத இதழும் மலரச் செய்தார். அந்த "செந்தமிழ்" ஏடு நூற்றாண்டு விழா கண்ட ஏடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சமயத்தில் பாண்டித்துரைத் தேவர் வெளியிட்ட ஓர் அறிக்கை மூலம், பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" பாட்டு பிறந்த கதையை பாராதிதாசனின் "பாரதியாரோடு பத்தாண்டுகள்" நூல் வாயிலாக அறியலாம்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டு இருந்த பாண்டித்துரைத் தேவர் செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதன் கருத்து பின் வருமாறு:-
தமிழ்நாட்டைப் பற்றி சுருக்கமாக எல்லாரும் பாடக் கூடிய மெட்டில் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதி அனுப்புக. நல்லதற்குப் பரிசு தருகின்றோம் என்பது.

அந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி நானும் வாத்தியார் சுப்பிரமணியன் முதலியவர்களும் பாரதியாரைக் கேட்டோம்.

அவர் முதலில் மறுத்தார். எங்களுக்காகவாவது எழுதுக என்றோம்

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்று தொடங்கி பாட்டொன்று எழுதினார் என்று குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.

சேது சமஸ்தானப் பெரும் புவலர்களாக விளங்கிய;

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்,
இரா.இராகவையங்கார்,
மு.இராகவையங்கார்,
அரசன் சண்முகனார்,
இராமசாமிப்புலவர்,
சபாபதி நாவலர்,
சிங்காரவேலு முதலியார்,
நாராயண அய்யங்கார்,
சுப்பிரமணியக் கவிராயர்,
சிவஞானம் பிள்ளை,
சிவகாமி ஆண்டார்,
யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர்,
புலவர் அப்துல்காதிர் இராவுத்தர்,
எட்டயபுரம் சாமி அய்யங்கார்,
பரிதிமாற்கலைஞர்,
அரங்கசாமி அய்யங்கார்,
சி.வை.தாமோதரம் பிள்ளை

ஆகியோரின் தரமான படைப்புகள் வெளிவர, மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" ஏடே உதவியது.

உலக மொழிகளிலேயே, தமிழ்மொழி, செம்மொழி மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலாக ஆதாரத்துடன் ஆய்வு செய்து வெளியிட்டவர், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஆதரவு பெற்ற பரிதிமாற்கலைஞர் ஆவார்.

அழுத்தமான தமிழ்ப் பற்றின் காரணமாக "சூரிய நாராயண சாஸ்திரி" என்ற தன் வட மொழிப் பெயரை "பரிதிமாற் கலைஞர்" என்று பைந்தமிழில் மாற்றிக் கொண்டவர். மேலும் முதன் முதலாக "தமிழ் மொழி வரலாறு" படைத்த சிறப்பும் உடைய பெரும்புலவரே பரிதிமாற்கலைஞர்.

மேலும் சென்னைப் பல்கலைக்கழத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தை அகற்ற, வெள்ளை அரசு திட்டமிட்டபோது, அதைத் தடுத்து நிறுத்திய பெருமை, பாண்டித்துரைத் தேவர் அமைத்த மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தையே சாரும்! மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இருக்க உரிய தீர்மானம் நிறைவேற்றப் பாடுபட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ்ச் செம்மொழி" என்று அன்றே மதுரைத் தமிழ்ச்சங்கம் மூலம் ஆய்வு செய்து பரிதிமாற் கலைஞர் வெளியிட ஆதாரமாக, ஆதரவாக விளங்கிய பாண்டித்துரைத் தேவரும், பாஸ்கரசேதுபதியும் நன்றியுடன் போற்றத்தக்கவர்கள்.

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய வ.உ.சியின் சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கிய பாண்டித்துரைத் தேவர் பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் பேரில் இரட்டை மணிமாலை, இராஜ இராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார் பாண்டித்துரைத் தேவர்.

தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. செத்தாலும் கூட செந்தமிழாய் பூப்பார்கள். அப்பூக்களில் ஒருவர் பாண்டித்துரைத் தேவர்.

புலவர் முத்து வேங்கடேசன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

மயிலை சீனி.வேங்கடசாமி

0 மறுமொழிகள்
தமிழ் மணி: தமிழ்ப் பேரவைச் செம்மல் மயிலை சீனி.வேங்கடசாமி


  • ஐந்தடிக்குட்பட்ட குறள் வடிவம்
  • பளபளக்கும் வழுக்கைத்தலை
  • வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி
  • கனவு காணும் எடுப்பான மூக்கு
  • படபடவெனப் பேசத்துடிக்கும் மெல்லுதடுகள்
  • கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி
  • காலர் இல்லாத முழுக்கைச் சட்டை
  • சட்டைப்பையில் மூக்குக் கண்ணாடி, பவுண்டன் பேனா
  • கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்திரீயம்
  • இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை
இப்படியான தோற்றத்துடன் சென்னைக் கன்னிமரா நூலகத்தை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே அவர்தான் மயிலை சீனி.வேங்கடசாமி என்று எழுத்தாளர் நாரண.துரைக்கண்ணனால் போற்றப்படும் மயிலை சீனி.வேங்கடசாமி 16.12.1900ம் ஆண்டு பிறந்தார்.


தந்தை சீனிவாச நாயக்கர் ஒரு சித்த மருத்துவர். அவரின் இல்லத்தில் ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்களைச் சேகரித்து வாசிக்கும் பழக்கம் இருந்தது. வேங்கடசாமி தன் தமையனார் சீனி.கோவிந்தராஜனிடம் தமிழ்ப்பயிற்சி பெற்றார். தமிழ்ப்பற்று இவருக்கு முன்னோர்கள் வழி கிடைத்த சீதனமாகும். மயிலை புனித சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில், பள்ளி இறுதி வகுப்பை நிறைவு செய்தார். இருபதாவது வயதில் சென்னைக் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டார். பின்பு ஆசிரியப் பயிற்சி முடித்து நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

வேங்கடசாமி, சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். நீதிக்கட்சி நடத்தப்பட்ட "திராவிடன்" நாளேட்டின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணிபுரிந்தார். பின்னாளில் "குடியரசு", "ஊழியன்" போன்ற இதழ்களில் செய்திக் கட்டுரைகள் எழுதினார். "கெளதம புத்தர்" என்ற நூலை எழுதினார். புத்தர் வரலாறு, பள்ளி வரலாற்றுப் பாடத்தில் கற்கும் கதையாக எழுதப்பட்டது. "புத்தர் ஜாதகக் கதைகள்" என்ற நூலைத் தமிழில் முதன் முதலாக எழுதினார். இக்கதைகளில் புத்தமதக் கோட்பாடுகள் எளிமையாகக் கூறப்பட்டுள்ளன.



வேங்கடசாமி 1950களின் இறுதிக் காலங்களில், கி.பி.3ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து மன்னர்களைப் பற்றிய நூல்களை உருவாக்கினார். "மகேந்திரவர்மன்" என்ற நூலை முதன்முதலாக வெளியிட்டார்.

"வாதாபிகொண்ட நரசிம்மன்" என்ற நூலில் நரசிம்மவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட பாறைக் கோயில்கள் குறித்தும், இம்மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட சிற்ப வடிவங்கள் பற்றியும் விரிவான தகவல்களைத் தந்துள்ளார். இந்த நூல் தமிழக சிற்ப வரலாற்றை தெரிந்துகொள்ள பெரிதும் உதவும்.

சேரன், செங்குட்டுவன் ஆய்வில் தொடங்கி, சங்க காலம் குறித்த ஆய்வுகளை நிகழ்த்தி உள்ளார். அக்காலத்தில் தமிழகம்;

சோழநாடு
பாண்டியநாடு
சேரநாடு
துளுநாடு
கொங்குநாடு
தொண்டைநாடு

என்று ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெளிவுபடுத்தி, இதற்கான வரைபடத்தையும் உருவாக்கியுள்ளார்.

ஒவ்வொரு நாடு தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு துளுநாட்டு வரலாறு, கொங்குநாட்டு வரலாறு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தமது அனைத்து ஆய்வுகளிலும் இலங்கை தொடர்பான குறிப்புகளைக் கொடுப்பதை மரபாகக் கொண்டிருந்தார் வேங்கடசாமி.

"தமிழ்நாட்டு வரலாறு" என்ற நூலில் "இலங்கையில் தமிழர்" என்ற ஆய்வை மேற்கொண்டார். தமிழக வரலாற்றை கட்டமைத்து ஒழுங்குபடுத்தியதில் வேங்கடசாமிக்குத் தனித்த இடமுண்டு.

மகாபலிபுரத்துச் சிற்பங்கள் தொடங்கி, பல்லவ மன்னர்கள் காலத்து கட்டடம் மற்றும் சிற்பக்கலை தொடர்பான ஆய்வையும் மேற்கொண்டார். இசைக் கூத்து குறித்தும் ஆய்வு செய்துள்ளார். "தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்" என்ற நூலில் தமிழர்களின் பழங்கால அழகுக் கலைகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

19ம் நூற்றாண்டின் தமிழ் சமூக வரலாற்றை அறிவதற்கான தொகுப்பாக "19ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்" என்ற நூலை எழுதியுள்ளார். வேங்கடசாமி, கன்னடம், மலையாளம், பாலி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயிற்சியுடையவராக இருந்தார். மலையாளத்திலிருந்து சில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்த வேங்கடசாமி, பல்லவர் காலத்து ஓவியங்கள், பிற்காலச் சோழர்கால ஓவியங்கள், பிற்கால ஓவியங்கள் எனப் பல்வேறு ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக, கைலாசநாதர் கோயில் ஓவியம், தஞ்சை பெரியகோயில் ஓவியம், மதுரை நாயக்கர்கால ஓவியம் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் அறக்கட்டளை சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இவற்றை "சங்ககால வரலாற்றில் சில செய்திகள்" என்னும் பெயரில் பின்னர் அப்பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டது.

சங்ககாலத் தமிழரின் வணிகம், சங்ககால விளைபொருட்கள் போன்றவை குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு, "பழங்காலத் தமிழர் வாணிகம்", "சங்க காலத்து பிராமிக் கல்வெட்டு எழுத்துக்கள்," என நூல்களாக வெளியிட்டார். தமிழக அரசு உருவாக்கிய, தமிழக வரலாறு எழுதும் தமிழ்நாட்டு வரலாற்றுக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். "தமிழ்நாட்டு வரலாறு" சங்க காலம், அரசியல் என்ற இரண்டாம் தொகுதியில் மூவேந்தர்களைப் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.

இவ்வளவு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவர், தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும், தெளிவாகவும், சரியாகவும் இன்னும் எழுதப்படாமல் இருப்பது பெருங்குற்றமாகும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"அகல் வரலாறு அனைத்தும்
மிஞ்சுதல் இன்றி கற்றோன்
மேம்பாடு நூலாராய்ச்சி
கெஞ்சிடும் தனைத் துலக்க
கேண்மையோடு உயர்வு செய்வான்!"


என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், வேங்கடசாமியின் ஆய்வைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

திராவிடன்
செந்தமிழ்ச்செல்வி
ஊழியன்
ஆரம்பாசிரியன்
செந்தமிழ்
தமிழ்ப்பொழில் ஆராய்ச்சி
திருக்கோயில்
நண்பன்
கல்வி
இலட்சுமி
ஆனந்தபோதினி
தமிழ்நாடு
செளபாக்கியம்
ஈழகேசரி
கலைக்கதிர்

ஆகிய இதழ்களில் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் 33 நூல்களை எழுதியுள்ளார்.

நம் சிற்பக் கலைப்பொருட்கள் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டன. இதை அறிந்து மிகுந்த வேதனையடைந்த வேங்கடசாமி, அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

1980ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் செம்மல்கள் பேரவை, "தமிழ்ப்பேரவைச் செம்மல்" என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 2001ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் சார்பாக வேங்கடசாமிக்கு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

1981 மே 8ம் தேதி வேங்கடசாமி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

வேங்கடசாமி ஓர்;

இலக்கியக்கடல்
வரலாற்றறிஞர்
மொழிநூற்புலவர்
சமயநூல் வித்தகர்
நுண்கலைவாணர்
சொல்லாய்வுச் செம்மல்
கல்வெட்டு, சாசனம்
தொல்லியல் துறைகளில் தனி முத்துரை பதித்தவர்
பன்மொழிப்புலவர்
சமூகவியல் அறிஞர்

என பல்வேறு பரிமாணங்களின் பெட்டகமாகத் திகழ்ந்தவர். அவரின் உயர்ந்த கருத்துகளை உள்ளத்தில் ஏந்திச் செயல்படுவது அனைத்து தமிழர்களின் கடமையாகும்.

பி.தயாளன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

பெண்ணியம் பேசும் பேனா

2 மறுமொழிகள்
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் - பெண்ணியம் பேசும் பேனா
[திரு சந்திரசேகரன், சென்னை (02/11/2008)]




[ஆம், பேசும் பேனாதான்! நாங்கள் பார்க்கச் சென்ற போது கூட, அவர் தினமலருக்கு (திருச்சி பதிப்பு) நாட்டு நடப்புகளைப் பற்றிய தன் எண்ணங்களை பதிவு செய்து வருவதாகக் குறிப்பிட்டார். விஷ்ராந்தியின் நிறுவனர் சாவித்ரி வைத்தி இவரைப் பற்றி குறிப்பிடுகையில் அவருக்கு கைகளை வைத்துக் கொண்டு எழுத லகுவாக மேசை செய்து தர எண்ணம் என்று சொன்னார்.] இன்றோ கூர் மழுங்கினாலும், மையின் தாக்கம் குறையவில்லை!

ராஜம் கிருஷ்ணன். 5/11/1925 பிறந்த நாள். நானும் தமிழ் தேனீ அவர்களும் அம்மாவை சந்தித்தது, சனிக்கிழமை அன்று.




'அவன் ஏன் இன்னும் என்னையெல்லாம் அழைத்துக் கொண்டு போகவில்லை?' என்றார், திடுப்பென்று! மனம் கனத்துப் போனது. இவருக்கே உலகில் இடமில்லை என்றால், தமிழ் தமிழ் என வெற்றுப் பறை சாற்றும் 'தமிழ் மானத் தலைவர்களுக்கு' ஏன் இங்கே இடம் விட்டு வைத்துள்ளார்கள்?

தலை நரைத்திருந்தது. ஆனால் குரலில் சிந்தனையில் காரம் குறையவில்லை. அவர் பேசப் பேச இதுவன்றோ பெண்மை? இதுவன்றோ உண்மை பெண் குரல், பெண் உரிமை என்றெல்லாம் மனம் கொக்கரித்தது. பேனாவின் முனை மழுங்கினாலும், அதிலிருந்து வரும் செய்திகள் சாட்டையடிகள் போலவே மிளிர்ந்தன!

தமிழ்த்தேனீ ம்ருதுவான அவர் குரலைப் பதிவு செய்தாலும், எங்கே செய்திகள் விடுபட்டு விடுமோ என்று, நானும் குறிப்பெடுத்துக் கொண்டேன்.

அவற்றில் சில...

விடுபட்ட விருதுகள்..

- சாகித்ய அகாடமி –இரு முறை
- பாரதீய பாஷா விருது, சோவியத் நாடு – நேரு விருது 1975
- ந்யூயார்க் ஹெரால்டு சர்வதேச விருது. இது எதற்காக என்று அவரையே கேட்டேன். (பெண்ணியத்தை வெளிப்படுத்தக் கூடிய எழுத்துக்களுக்கு ஆசியாவிலிருந்து வருடம் ஒருவரை தேர்வு செய்து பரிசுகள் வழங்குவார்களாம். 1950 வருடத்திய விருது இவருக்கு கிடைத்துள்ளது.)
- கலைமகள் விருது 1973
- திரு.வி.க விருது 1991

மொத்தம் 59 படைப்புகள் வெளிவந்துள்ளன.


எப்படி எழுத்துகளின் மேல் மோகம் வந்தது?

அதைப் பற்றி அவர் கூறுகையில்,'சமூகப் ப்ரக்ஞையும், பெண்களை அவலமாய் சித்தரிக்கும் போக்குமே என்னை எழுத வைத்தன. நானும் பல பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். பதிவுத் தபாலில் திரும்பி வரும். ஆனால், முதன் முறையாக திருச்சி வானொலிக்கு எழுதிய நாடகம், ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று சாதாரண தபாலில் செய்தி வந்தது!

அவசரச் சட்டம் பிரகடனமான போது எழுதிக்கொண்டிருந்த ஒரே பெண் எழுத்தாளர் இவர்தானாம்.

திருச்சி வானொலியில், இவரது நாடகமான 'ஷட்டில் வண்டி' (லால்குடி – திருச்சி இடையே செல்லும் வண்டியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை) நேரடியாக வாசிக்கச் செய்ய அழைத்தார்களாம். தாயாருடன் சென்றிருந்தார். முன்பெல்லாம், நேரடி ஒலிபரப்பு ஆதலால், அங்கே காகிதங்களை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், இயக்குநர் கையை மேலே உயர்த்தினால் குரலை உயர்த்த வேண்டும், கீழே இறக்கினால், குரலையும் சற்று மட்டுப் படுத்த வேண்டும்.புடவை சரசரப்புகள் பதிவு ஆகக் கூடாது, என்று பல கெடுபிடிகள். இவருக்கு இதெல்லாம் ஒத்துவரவில்லை. அதேசமயம் அவர்கள் எதிர்பார்த்த நேரத்தை விட, மிக வேகமாக, உணர்ச்சி பூர்வமாக தன் கருத்துக்களை கொட்டி விட்டு அமர்ந்திருந்தாராம். எனவே, வெளியில் வந்ததும், அப்போது இருந்த தொழில் நுட்ப வல்லுநர் ஹகிம் என்பவர்,'அப்பப்பா,உங்களுக்கு கடிவாளம் போடவே முடியாதும்மா! புருஷன் எப்படி மாட்டப் போறாரோ?' என்றாராம்.

இவர் பேசியதில் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது, ஆதாரத் தகவல்கள் சேர்த்த பிறகே அவர் கதைகளை உருவாக்குவார் என்பது,. அதற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களை வருணித்துக் கொண்டே போனவர், நடு நடுவே, 'இதுதான் என் ப்ரச்னையே! எதிராளியை பேசவே விட மாட்டேன்!" நானே பேசிக் கொண்டிருப்பேன்!" என்றார்.



டாக்டர் ரெங்காச்சாரியின் சுய சரிதை எழுதுகையில், அவர் தொழில் புரிந்த எத்தனையோ ஊர்களுக்கு சென்று பயனுற்றவர்களை பேட்டி எடுத்துள்ளார். அதிகாலை நடை செல்லும் போது இவர் பிரசவம் பார்த்த ஆடு மேய்க்கும் பெண்ணையும் பார்த்து அவளைப் பேட்டி எடுத்துள்ளார். டாக்டர் ரெங்காச்சாரி வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாராம். எனினும் ஒரு மருத்துவ கருத்தரங்கத்துக்கு செல்ல நேரிட்டபோது, உடன் சென்ற அவரது நண்பர் மட்டுமே இவர் பேசியதைப் பதிவு செய்திருந்தாராம். படுத்த படுக்கையாய் இருந்த அவரைப் பேட்டி காண ராஜம் அம்மா, செல்கையில்,தன் நண்பரின் பெயரைக் குறிப்பிடதுமே, 'இரு, நான் சொல்கிறேன்' என்று அந்த நிலையிலும், விரிவாக செய்திகளைப் பகிர்ந்து கொண்டாராம். (நண்பர் கஸ்தூரி ஸ்ரீநிவாசன்) என்று நினைக்கிறேன். மறுநாள் பத்திரிகையை பிரித்த ராஜம் கிருஷ்ணனுக்கு தூக்கிவாரிப் போட்டதாம்! அந்த நண்பரின் மரணச் செய்தியைக் கண்டு! எதற்கு இதை குறிப்பிட்டாரென்றால், ஒரு செய்திக்கு உண்மை எத்தனை முக்கியம் என்று எடுத்துக் காட்ட! (authenticity)

அதேபோல் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு வைத்தியமும் பார்த்து, கையில் பணமும் கொடுத்து அனுப்பியதைப் பார்த்து இவரது நண்பர் திரு. ராமஸ்வாமி சாஸ்திரி என்பவர், " உயிர் கொடுத்தான் அதனொடு, உடமையும்,பொருளும் கொடுத்த நவீன கடவுள் இவன்," எனும்பொருள் படியான ச்மஸ்க்ருத சுலோகத்தை பாடி, டாக்டரை புகழ்ந்தாராம்! நண்பர் ஆதலால்,மவுனம் காத்த டாக்டர். ரெங்காச்சாரிக்கு,கடவுள் நம்பிக்கை கிடையாதாம்!

சிகிச்சைக்கு படுத்திருந்த நோயாளி ஒருவர் கையில் விஷ்ணு சகஸ்ரநாம புத்தகத்தைப் பார்த்து டாக்டர் கோபம் கொண்டு, "அதை நம்புறதா இருந்தா ஏன் என்னிடம் வரே?" என்று கடிந்து கொண்டாராம்!



பிறகு எது உங்களை இவரது சரிதத்தை எழுத வைத்தது? என்று நான் கேட்டேன்.

"என் கணவர் காலாஅஜார் நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார்.அன்பும், அரவணைப்பும், நல் வார்த்தைகளும் சொல்லி, வைத்தியம் பார்த்த பாங்கைக் கண்டு அவரைப் பற்றி விசாரிக்க, ஊரே புகழ்ந்ததால், உந்தப்பட்டு அவரின் சரிதத்தை கதையின் நடையில் எழுதினேன்" என்றார்.

அதே போல், 'முல்ளும் மலர்ந்தது' என்ற சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையரைப் பற்றிய கட்டுரை மிகவும் பிரசித்தி பெற்றதற்குக் காரணம், இவர் நேரடியாக அவர்களை சந்தித்து பேசியதாலேயே!

தனது சகோதரரின் உதவியுடன் தொலை தொடர்பு துறை நண்பர்கள் மூலம, க்வாலியரில் போய் இறங்கினாராம்! பணியில் இருந்த கணவருக்கு பணி நீட்டம் செய்திருந்தாலும், அதனை உதறச் சொல்லிவிட்டு க்வாலியர் வந்து சேரும்படி சொன்னாராம்!

அங்கே, சரணடைந்த கொல்ளையர் ஒரு பக்கம். கொள்ளை,கொலைகள் செய்து கொண்டு பிடி குடுக்காத கும்பல் ஒரு பக்கம். முதலில் கூறிய மக்களைப் பற்றி அதிகமாக யாரும் எழுதாததால், அதைப்பதிவு செய்ய வேண்டும் என்று என்ணி, அவர்கள் சரணடைந்தவுடன் வந்து சேரும் ஒரு ஆசிரமத்தில் (முன்னாள்) கொள்ளையரை சந்திக்கச் சென்றாராம்.

அதில் மறைந்த மாபெரும் கொள்ளையன் மான்சிங்கின் மகன் தாசில்தார் சிங் என்பவனுடன் பேச சுமார் அரைமணி நேரம் பொருமையாக அவனெதிரே இவர் அமர, அந்த மீசைக்கார கொள்ளையனோ, ஒரு தினசரியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தானாம்! ராஜம் அம்மாவின் பொருமையைக் கண்டு, பின்னர் மனம் திறந்த அவன், நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தானாம்! இவன் சுமார் 400 கொலைகள் செய்தவன் என்பது குறிப்பிடத் தக்கது!

மற்றொரு சரணடைந்த கொள்ளையன் மகாவீர் சிங்கை, அவனது இல்லத்தில் சந்திக்க போகையில், இருட்டிவிட்டதால், அங்கேயே கணவன், மனைவி இருவரையும் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்தானாம்! உபசாரமாய் நல்ல சப்பாத்தி, சப்ஜி (காய்கறி) தந்து, பின்னர் குளிருக்கு இதமாய் ரஜாயும் (கம்பளி) தந்தாளாம் அவனது மனைவி.

காலையில், கண் விழித்துப் பார்த்த ராஜம் அம்மாவின் கண்களில், அவனது மனைவி அணிந்திருந்த அதிகப்படியான கனத்த நகைகளே பட்டுக் கொண்டிருந்தது! கால்களை தொட்டு கும்பிட்டு வழியனுப்பியவளிடம் அம்மா, "இவை உங்கள் ஊரில் தாலியா?" என்று கேட்க, கணவனான மகாவீர் சிங் சிரித்துக் கொண்டே, "எல்லாம் கொல்ளையடித்தவை" என்று சொல்லி இடிச் சிரிப்பு சிரித்தானாம்! இவர்களுக்கு தங்க இடம் கொடுத்து வழியெல்லாம் சொன்ன திரு. இந்தூர்க்கர் இவர்களை (மும்பை) அன்றைய பம்பாய்க்கு ரயில் ஏறி அனுப்பி வைத்தாராம். அங்கே தேஷ்முக் என்பவரை சந்திக்கச் சொல்லியிருந்தாராம். தேஷ்முக்கிடம், "திரு. இந்தூர்க்கர் எங்களை அனுப்பி வைத்தார்," என்றதும். "Mr. Indurkar was shot dead yesterday," என்ற அதிர்ச்சி செய்தியை சொல்லி, செய்தித் தாளைக் காட்டினாராம்!

கணவரின் அரசுப்பணியினால், வட மாநிலங்களில் தங்க நேர்ந்ததையும், அப்போதைய கோவாவை தனி மாகாணம் ஆக்குவதா, மகாராஷ்டிரத்தோடு சேர்ப்பதா என்ற சண்டை நேரங்களில், பல இடங்களுக்கு மாற்றப்பட்டதை நகைச்சுவையோடு குறிப்பிட்டார்.

உங்களுக்கு இப்போது எத்தனை பாஷை தெரியும்? எனக் கேட்டேன்.

"ஏழு - 7?" என்றார் சிரித்துக் கொண்டே!

இந்த முள்ளும் மலர்ந்த்து புத்தகத்திற்கு முன்னுரை எழுத திரு. ஜெயப்ரகாஷ் நாராயணணை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அவரைச் சுர்றி இருந்தவர் என்னை அருகிலேயே அண்ட விடவில்லை. சரி, வினோபா பாவேயிடம், சென்று வாங்கிலாம் என்றால், புத்தகத்தை (தமிழ்) முழுதும் பார்த்த அவர், தமிழிலேயே, "நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டவன். எனவே, என்னால் எந்த முன்னுரையும் தரலாகாது," என்றாராம்! ராஜம் அம்மாவோ, அங்கேயே சத்தியாக்ரகம் செய்து, "நீங்கள் தரும் வரை நான் இங்கேயே அமர்வேன்," என்று சொல்லி இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம்! மனம் நெகிழ்ந்த பாபா (வினோபா வபாவேயை அப்படித்தான் அழைத்தர்களாம்), "ஆசீர்வாதங்கள். அன்புடன், பாபா," என்று தமிழிலேயே எழுதி கையெழுத்திடாராம்! அந்த புத்தகம் எங்கோ போய்விட்டது என்றார் ஆதங்கத்துடன்.

இவரது உறுதியைப் பார்த்து கி.வா.ஜகந்நாதன் அவர்கள், 'உன்னை பார்த்தால், பத்ரகாளியைப் பர்ப்பதுபோல் இருக்கிறது," என்பாராம்!

தனது நடை, பற்றி பேச்சு வருகையில்,

(தேனீயார் நீங்கள் ப்ராம்மண பாஷையிலேயே எழுதுவதாக.. என்று ஆரம்பித்தவுடனேயே, வேகமாக மறுத்து,
"அப்படி முத்திரை பதிந்துவிடக் கூடாதென்பதில் நான் கவனமாய் இருந்தேன்.
கருப்பு மணிகள், வேருக்கு நீர் போன்ற பதிவுகளில் ப்ராம்மண பாஷை எஙிருந்து வந்தது? பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியே என் ஆதர்சன குரு. உண்மை, நெஞ்சில்பட்டது, சமூகப் ப்ரக்ஞை – இவை மூன்றுமே நல்ல எழுத்தாளனை வெளிக் கொணரும்.

பிற எழுத்தாளர்களைப் பற்றி கூறுகையில், தயங்காமல், தன் கருத்துகளைப்பட்டென போட்டு உடைத்தார்! லா.ச.ரா – பிறர் புகழ்ந்தாலும், எனக்குப் பிடிக்காது. காரணம், பெண்களை அவர் போகப் பொருளாக மட்டும் பார்த்தார்! சுஜாதா எத்தனை அறிவு ஜீவி,படித்தவர்? அவரும், பெண்களை அவர்களது அங்கங்களை வருணித்து எழுதுவதை தவிர்த்திருக்கலாம். அதே போல் ஜெயகாந்தன். பெண்கள் என்று ஒரு மனிதனாக மதிக்கப்பட்டு, கதைகளில் வெளி வருகிறார்களோ,அன்றுதான் தமிழ் எழுத்துக்களுக்கு விடியல்! என்றார்!

அதோடு திரைப்படத் துறையையும் விட்டு வைக்கவில்லை! பாலசந்தர் என்று ஒருவர். இரண்டு பெண்டாட்டிக் கதை,பெண்களின் அந்தரங்கங்கள், இவற்றையே படம் எடுத்து 'சிகரம்' என்று பேரெடுத்தவர். சினிமா, பெண்களை இன்றும் தவறாகவே சித்தரிக்கும் ஒரு ஊடகம். அதிலிருந்தும் பலர் என் கதைகளைக் கேட்டனர். தர மறுத்து விட்டேன்," என்கிறார்!

சிறிய வயதில் தாம் பார்த்த படைப்புகள், படங்களான,

agony in ecstasy,
flower girl,
biography of Abraham Lincoln,
Ten Commandments,

போன்றாவையே தம்மை படைப்புலகத்திற்கு ஈர்த்தன, " என்கிறார். கணவரின் ஊக்குவிப்பு, ஒப்புதல் பற்றி பேசுகையில், "எந்த சூழ்நிலையிலும், தவறு செய்ய மாட்டேன், என்ற என் மேல் இருந்த நம்பிக்கையே," தன்னை சுதந்திரமாக பணி செய்யவிட்டது என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லும் சகோதரனையும், அங்கே மருத்துவ காரணங்களால், 'சூழ்நிலைக் கைதி'யாய் இருப்பதையும், நடக்க இயலாமை பற்றியும், எப்போதும் கத்திக் கொண்டிருந்த தொ(ல்)லைக் காட்சிப் பெட்டியில் லயித்திருந்த பணிப் பெண்களின் அலட்சியம் (இருவர் தவிர – புகைப் படத்தில் கண்ட அம்மணி, மற்றும் சத்யா எனும் இளம் பெண்- அவர் புகைப்படத்திற்கு மறுத்துவிட்டார்), நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சுற்றியுள்ள முதியவர்களின் சோகம் போன்றவற்றையும், ஒரு படைப்பாளியைப் போலவே, கோர்வையாகப் பேசிப் பதிவு செய்தார்!

எங்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, "மனித நேயம், பெண்மை இரண்டுக்கும் மதிப்பு கொடுங்கள், அதுவே மனிதத்தை உயர்த்தும்,"என்றார்.

83 வயதிலும், தெளிந்த பேச்சு, தீர்க்கமான கருத்துக்கள், என்று தம்மை வெளிப்படுத்திக் கொண்டாலும், அழகிய கண்ணாடி ஜாடி போன்றே அவரது மனம் இருந்ததை எங்களால் உணர முடிந்தது. மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். யாரும் உதவி செய்வதை அவர் விரும்பவில்லை, என்பதும், தமது இந்த நிலை குறித்த வருத்தம் அவர் பேசியதில் வெளிப்பட்டது.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதுதான். அதேபோல்தான் அம்மாவும். ஆனாலும் புலிக்கேற்ற உலவு தளம் தருவது, மிருக ஆர்வலர்களின் கடமையன்றோ? மிருகத்திற்கே அப்படி என்றால், தமிழில் தடம் பதித்த ஒரு பெண் எழுத்தாளருக்கு?

தங்குமிடமும், வைத்திய செலவும் தமிழ் வளர்ப்பதாகச் சொல்லும் அரசு ஏன் செய்யக் கூடாது?

காலம் பின்னிரவு ஆகிவிட்டமையால், மனமின்றி அவரிடம், பிரிய மனமில்லாமல், பிரியா விடை பெற்றுக் கொண்டு வந்தோம்.

சந்திரா.

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES