மண்ணின் குரல்: ஏப்ரல் 2017:தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்

0 மறுமொழிகள்

வணக்கம்.

​இசையும் சொல்லும் கலந்து வருவதுதான் பாடல். தமிழர் பாரம்பரியத்தில் வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் பாடல்களை இட்டுக் கட்டிப் பாடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. தமிழர் நாட்டாற் வழக்காற்றியலில் உள்ள பாடல்கள் தான் எத்தனை எத்தனை?  அவற்றை எல்லாம் நாம் இன்று விரும்பி ரசிக்காமல் ஒதுக்கி விட்டோம் என்று தான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

நாட்டார் வழக்காற்றியல் என்பது ஒரு தனித்துறை. தமிழகத்தைப் பொறுத்தவரை பேராசிரியர் வானமாமலை, பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், பேரா.தொ.பரமசிவன் போன்றோரின் ஆய்வுகள் இத்துறைக்கு பலமும் வளமும் சேர்ப்பனவாக இருக்கின்றன. மேலும் சில சிறந்த ஆய்வுகளும் அவ்வப்போது வெளிவருகின்றன  என்றாலும் கூட, விரிவான வகையில் பதிவு செய்து ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய களம் இது. தமிழகத்திலே கூட நாட்டார் வழக்காற்றியலைப் பாடமாக வைத்திருக்கும் பல்கலைக்கழகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்ற நிலையே இருக்கின்றன.

நம் குடும்பங்களில் இன்றும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது இவ்வகைப் பாடல்களைப் பாடுவோர் இருப்பார்கள். அவர்களைப் பாடச் செய்து பதிவுகள் செய்து அப்பாடல்களில் வரும் சொற்களை ஆய்வு செய்வதும், கதை வர்ணனைகளை ஆய்வு செய்வதும் தமிழ் மக்கள் பண்பாட்டினை அறிந்து கொள்ள நாம் செய்யக்கூடிய  மானுடவியல் ஆய்வுகளில் ஒன்றாக அமையும்.  பாடல்களை இட்டுக் கட்டி பாடும் போது நாட்டுப்புறக்கலைஞர்கள் சொல்லும் கதைகள் ஒன்றுக்கொன்று மாறுபடுவதைக் காணலாம். சில பாடல்கள் வழி வழியாய் வந்த செய்திகளைக் கூறும். சில  பாடல்கள் தற்கால நிகழ்வினைக் கூறும். இவை எதுவாகினும், ஒரு செய்தியானது பாடல் வழியாகப் பதியப்படும் நிகழ்வாகவே நாட்டுப்புறப்பாடல்கள் அமைகின்றன.

இத்தகைய ஆய்வுகள் பதியப்படவேண்டும். அவை ஆராயப்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை நாட்டுப்புறப்பாடல்கள் தொகுப்பு ஒன்றினை வெளியிடுகின்றது. 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லெட்சுமி அம்மாள் அவர்களும் மதுரையைச் சேர்ந்த பெண்மணிகளும் இணைந்து வழங்கியிருக்கும் நாட்டுப்புறப்பாடல்கள் பதிவு இது.



62 வயது நிரம்பிய லெட்சுமி அம்மாள் அவர்கள்,  பருத்திவீரன் போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கதிர் அறுக்க ஒரு பாட்டு
நாற்று நட ஒரு பாட்டு
தாலாட்டுக்கு ஒரு பாட்டு
ஒப்பாரிக்கு 2 பாட்டுக்கள்
மாரியம்மனுக்கு ஒரு பாட்டு
வள்ளி மேல் காதல் கொண்ட முருகனை நினைத்து ஒரு தெம்மாங்குப் பாட்டு...
இப்படி விதம் விதமான பாடல்களுடன் வெளிவருகின்றது தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தப் பதிவு.

இந்தப் பதிவிற்கான ஏற்பாட்டில் உதவிய தியாகராசர் கல்லூரி பேராசிரியர் மலர்விழி மங்கைக்கும் முத்தமிழ் நாட்டுப்புறக்கலைக்குழுவினருக்கும் அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளருக்கும் நமது நன்றி.



விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2017/04/blog-post_22.html
யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=utNClbl3CLU&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

மறுமொழிகள்

0 comments to "மண்ணின் குரல்: ஏப்ரல் 2017:தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்"

Post a Comment

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES