Showing posts with label History of Chola. Show all posts
Showing posts with label History of Chola. Show all posts

நற்றமிழ் நாவலர் வேங்கடசாமி நாட்டார்

0 மறுமொழிகள்
சோழவள நாட்டில் தஞ்சைக்கு வடமேற்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் நடுக்காவேரி. இவ்வூர் காவேரியின் கிளை நதியாகிய குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கண்டியூருக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் தாரண ஆண்டு சித்திரைத் திங்கள் 2ம் நாள் (12.4.1884) கள்ளர் குலத்தில் முத்துசாமி நாட்டார் - தைலம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக வேங்கடசாமி பிறந்தார். இவர் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான். தமிழ் நூற்கடலை நிலை கண்டு உணர்ந்தவர். அன்பும், அடக்கமும், அமைதியும் அணிகலனாய்ப் பூண்ட இப்பெருமகனே பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆவார்.



இளமையும் கல்வியும்:-

வேங்கடசாமிக்கு முதலில் இட்ட பெயர் சிவப்பிரகாசம். தொண்டையில் கட்டி ஏற்பட்டு திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட பின் குணமானதால் வேங்கடசாமி என்று பெயர் மாற்றம் பெற்றார். வேங்கடசாமியின் தந்தையார் முத்துசாமி நாட்டார், தமிழ் இலக்கியப் பயிற்சி உடையவர்.

நைடதம்
திருவிளையாடற் புராணம்
வெங்கைக்கோவை
திருப்புகலூர் அந்தாதி
முதலிய நூல்களைக் கற்றவர். மேலும், இவர்
கைவல்யம்
ஞானவாசிட்டம்
சாதகாலங்காரம்
குமாரசுவாமியம்
உள்ளமுடையான்

முதலிய நூல்களைக் கற்ற வேதாந்தியாக விளங்கினார். வேங்கடசாமியின் பள்ளிப்படிப்பு 4ம் வகுப்புடன் நின்றது.

திருப்புகலூர் அந்தாதி
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி
வெங்கைக்கோவை
நைடதத்தின் முதல் பகுதி
ஆகிய நூல்களைத் தம் தந்தையாரிடம் பாடம் கேட்டார்.
திருவிளையாடற் புராணம்
வில்லிபாரதம்
கம்பராமாயணம்

முதலியவற்றைத் தாமே படித்து வந்தார்.

அப்போது அவருக்கு வயது 16. தம் குடும்ப முன்னேற்றம் கருதி, வேளாண்மையில் நேரிடையாக ஈடுபட்டார். ஒழிந்த நேரங்களில் தமிழ் நூல்களைத் தாமே படித்து வந்தார்.

சூளாமணி நிகண்டு
அமரநிகண்டு

ஆகியவற்றிலுள்ள பாடல்களை மனப்பாடம் செய்தார். நன்னூல் முழுவதையும் தாமாகவே கற்று மனனம் செய்தார். தஞ்சையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கக் கூட்டங்களுக்குத் தம் தந்தையாருடன் சென்று, கேள்வி அறிவை வளர்த்துக் கொண்டார்.
பண்டிதர் பட்டம்:-

அந்நாளில் அப்பகுதியில் தொடக்கப்பள்ளி மேற்பார்வையாளராக இருந்த ஐ.சாமிநாத முதலியார் நல்ல தமிழ்ப் பற்றாளர். "சாவித்ரி வெண்பா" எனும் நூலை இயற்றியவர். அவர் வேங்கடசாமியின் தமிழறிவை வியந்து, பாண்டித்துரைத் தேவர் தோற்றுவித்த மதுரைத் தமிழ்ச் சங்கம் பற்றியும், அச்சங்கம் நடத்தி வரும்;

பிரவேசபண்டிதம்
பாலபண்டிதம், பண்டிதம்

ஆகிய தமிழ்த் தேர்வுகள் பற்றியும் கூறி, அத்தேர்வுகளை எழுதுமாறு அவரைத் தூண்டினார்.
இளைஞர் வேங்கடசாமி,

1905ல் பிரவேசபண்டிதம்,
1906ல் பாலபண்டிதம்,
1907ல் பண்டிதம்

ஆகிய தேர்வுகளில் சிறப்பாகத் தேறி பல பரிசுகளைப் பெற்றார். பண்டிதம் தேர்வில் முதன்மையாகத் தேறியமைக்காக பாண்டித்துரைத் தேவர் தம் கையினாலேயே வேங்கடசாமிக்குத் தங்கத்தோடா (தங்கக்காப்பு) அணிவித்துப் பெருமைப்படுத்தினார். அனைவரும் அவரை "முத்தேர்வும் மூவாண்டில் முதன்மையினில் முற்றுவித்த பெருமான்" எனப் பாராட்டினர். 1908ல் காஞ்சி பரமாசாரியார் நடுக்காவேரி வந்திருந்தபோது, வேங்கடசாமியை நேரில் வரவழைத்து சிவப்புப் பட்டாடையைப் போர்த்திச் சிறப்பித்தார். நாட்டார் தாம் படிப்பதற்காகப் பயன்படுத்திய இல்லத்தின் மாடி அறை "தமிழவள் இருக்கை" என்ற பெயருடன் இன்றும் இலங்குகிறது.

கல்லூரி, பல்கலைக்கழகப் பணி:-

ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி கல்லூரியில் 1908 -1909 வரை ஓராண்டும், 1910 முதல் 1933 வரை 23 ஆண்டுகளும் தமிழ்ப் பேராசிரியராய் பணி புரிந்தார். நாட்டார் திருச்சியில் இருந்தபோது, பாரதியார் இவர் இல்லம் வந்திருந்து சிலப்பதிகாரத்திலும், தொல்காப்பியத்திலும் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டு தெளிவுபெற்றுச் சென்றார் என்ற செய்தியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1933ல் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரி மூடப்பட்டது. அவ்வாண்டிலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேருமாறு நாட்டாருக்கு அழைப்பு வந்தது. அக்காலத்து தமிழறிஞர் பலருடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி 1941ல் ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்குப் பின்னர் தஞ்சைக் கரந்தைப் புலவர் கல்லூரியில் மதிப்பியல் முதல்வர் பொறுப்பினை ஏற்றார். அவருக்கு 8.5.1944ல் மணிவிழாக் கொண்டாட ஏற்பாடாயிற்று. மணிவிழா நடைபெறுவதற்கு 40 நாட்கள் முன்னரே 28.3.1944ல் இறைவனடி சேர்ந்தார். அவரை அவரது சொந்த ஊரில் சமாதி வைத்து, அங்கு கோயில் எழுப்பினர். ஆண்டுதோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.

நல்லாசிரியர்:-

நாட்டார் வகுப்புகளில் பாடம் நடத்தும்போது அமைதி நிலவும். அவருக்கு எல்லாப் பாடங்களும் மனப்பாடம். அவலச்சுவை, பக்திச்சுவை நிறைந்த பாடல்களை இசையோடு படிக்கும்பொழுது அவர் விழிகளில் நீர் ததும்பும். பதம் பிரித்துப் படிக்கும்போதே பொருள் விளங்கும். ஒன்பான் சுவையும் தோன்றுமாறு கற்பிப்பது அவரின் தனிச்சிறப்பு. நாட்டாரது பெருந்தன்மை, பெரும்புலமை, வீண்பேச்சுப் பேசாமை, ஒழுக்கமுடைமை, தெய்வ பக்தி முதலியன மாணவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கின. செய்யுள்களை இசையோடு பாடிக்காட்டுவார்.

வெண்பாவை சங்கராபரணத்திலும்,
அகவலை தோடியிலும்,
துறையைப் பைரவியிலும்,
விருத்தப்பாக்களை காம்போதி, கல்யாணியிலும் பொருந்தப்பாடி மாணவர்களை மகிழ்விப்பார்.

நற்றமிழ் நாவலர்:-

நாட்டார் அழகு தமிழில் ஆற்றொழுக்காகப் பேசும் திறன் மிக்கவர். அரிய பொருள்களையும் கேட்போர் மனங்கொள்ளுமாறு எளிமையாகச் சொல்லும் இயல்புடையவர்.

அவர்

மதுரைத் தமிழ்ச் சங்கம்,
திருச்சி சைவ சித்தாந்த சபை,
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயம்,
திருநெல்வேலி தமிழ்ச் சங்கம்

போன்ற தமிழ் மற்றும் சைவ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். திருச்சியில் 1923 - 25 ஆகிய மூன்றாண்டுகளில் தமிழ்ப் புலவர் மாநாட்டைக் கூட்டினார். 1939 மார்ச் திங்களில், கொழும்பு சென்று விவேகானந்தர் சங்கத்தில் "நால்வர்" என்னும் தலைப்பில் உரையாற்றினார். 1940ல் திருப்பதியில் நடைபெற்ற கீழ்த்திசை மாநாட்டில் திருச்சி, கருவூர் சேரர் தலைநகரமாகிய வஞ்சியன்று என வலியுறுத்தி மு.இராகவையங்கார், இரா.இராகவையங்கார் ஆகியோரின் கூற்றை மறுத்துரைத்தார்.
சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 24.12.1940ல் நாட்டாருக்கு "நாவலர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

ஆராய்ச்சி நூல்கள்:-

"வேளிர் வரலாறு" என்ற நூலில் வேளிர் என்பார் வடநாட்டினின்று வந்தவரல்லர், அவர்கள் தமிழ் நாட்டுப் பழங்குடியினர் என நிறுவியுள்ளார்.
1919ல் எழுதப்பட்ட "நக்கீரர்" என்ற நூல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது.

"கபிலர்" என்ற நூலில், மாணிக்கவாசகப் பெருமான் பிறந்த திருவாதவூரே கபிலர் பிறந்த ஊர் என நிறுவியுள்ளார்.

1923ல் எழுதப்பட்ட "கள்ளர் சரித்திரம்" என்ற நூல் ஒரு குறிப்பிட்ட இனத்தின் வரலாறு எனினும், பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கத்தக்க தகுதியை உடையது எனத் தமிழ்த் தாத்தா உ.வே.சா. பாராட்டியுள்ளார். மேலும் "கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்', "சோழர் சரித்திரம்', "கட்டுரைத் திரட்டு' ஆகியவையும் இவர் எழுதிய நூல்கள்.

நாட்டார் தலைசிறந்த உரையாசிரியர்.

இன்னா நாற்பது,
கார் நாற்பது,
களவழி நாற்பது,
ஆத்திசூடி,
கொன்றைவேந்தன்,
மூதுரை,
நல்வழி,
நன்னெறி

ஆகிய நூல்களுக்கு உரை வகுத்துள்ளார். 1931ல் "பெருஞ்சொல் விளக்கனார்" அ.மு.சரவண முதலியார் துணையுடன் திருவிளையாடற் புராண உரை வெளியிடப்பெற்றது. சிலப்பதிகார உரை, சிலப்பதிகாரம் முழுமைக்கும் அமைந்த உரையாகும்.

கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையுடன் இணைந்து நாட்டார் அகநானூற்றுக்கு உரை எழுதியுள்ளார். நாவலர் நாட்டார், திருச்சி, தஞ்சைப் பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டுமென 1925ல் கனவு கண்டார். அக்கனவு தற்போது நனவாகியுள்ளது. தற்போது தஞ்சை அருகிலுள்ள வெண்ணாற்றங்கரையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி என்னும் பெயரில் தமிழ்க் கல்லூரி இயங்கி வருகிறது.

சான்றோரின் தூய எண்ணங்கள் செயல்வடிவம் பெறத்தக்கன என்பதற்கு இவற்றினும் வேறு சான்றும் வேண்டுமா?

முனைவர் ப.சுப்பிரமணியன்

நன்றி: தமிழ்மணி (தினமணி) மற்றும் திண்ணை

மேலும் குறிப்புக்கள்

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES