Showing posts with label Sangam. Show all posts
Showing posts with label Sangam. Show all posts

இளமையின் இயல்பும், முதுமையின் ஏக்கமும்!

0 மறுமொழிகள்
சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் புறத்திணை சார்ந்தவை இரண்டு. அவை

புறநானூறும்,
பதிற்றுப்பத்தும்

ஆகும்.

பதிற்றுப்பத்து சிறப்புப் பார்வையில் சேர மன்னர்கள் பற்றிய வரலாற்றுப் பதிவாய் அமைந்தது.

புறநானூறு, கடவுள் வாழ்த்து உள்பட 400 அகவற்பாக்களைக் கொண்டது. இதனைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் பெயர்கள் தெரியவில்லை. இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த புறநானூற்றில் 243ம் பாடலாக இடம் பெற்றிருப்பது தொடித்தலை விழுத்தண்டினார் பாடல்,

"ஒரு சிறு சொல்லேனும் வறிதே விரவாமல் உய்த்துணருந்தோறும் "நவில்தொறும் நூல் நயம் போலும்" என்னும் முதுமொழிக்கிணங்க, இன்பஞ் செய்வன சங்கப் பாடல்களேயாகும்" (உரைநடைக் கோவை: 2 ம் பாகம், ப.96) என்னும் பண்டிதமணியின் புகழாரத்துக்குப் பொருத்தமான ஓர் உதாரணமாக விளங்கும் இப்பாடலின் திறத்தினைக் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இளமையின் இயல்பும், முதுமையின் ஏக்கமும்:

"இப்பொழுது நினைத்தால் வருந்தத் தக்கதாக உள்ளது" (இனி நினைந்து இரக்கம் ஆகிறது) எனத் தொடங்கித் தம் இளமைக் கால அனுபவங்களை -இன்றைய ஊடக மொழியில் குறிப்பிடுவது என்றால் மலரும் நினைவுகளை - ஒவ்வொன்றாகப் பதிவு செய்ய முற்படுகிறார் முதியவர் ஒருவர்.

சிறுவர் விளையாட்டில் மணலைத் திரட்டிச் செய்யப்பட்ட தெய்வ வடிவுக்கு - பாவைக்கு - பறித்த பூவைச் சூட்டியதும்; குளிர்ந்த பொய்கையில் விளையாடும் இளம் பெண்களோடு கைகோர்த்துத் தழுவும் போது தழுவியும், அசைந்தாடும் போது அசைந்தாடியும் ஒளிவு மறைவு என்பவை அறியாத வஞ்சனை இல்லாத கூட்டத்தோடு விளையாடி மகிழ்ந்ததும்; உயர்ந்த கிளைகளை உடைய மருத மரத்தின் உயரம் தாழ்ந்து நீரோடு படிந்து காணப்பெற்ற கிளையைப் பற்றி ஏறி, சிறப்பு மிகக் கரையில் நிற்பவர் வியப்பவும் அலைத்துளி மேலே எழும்பவும் ஆழமிக்க நீண்ட அந்த நீர் நிலையில் "துடும்" என்று ஒலி உண்டாகக் குதித்து மூழ்கி அடிமணலை அள்ளிக் காட்டியதும் ஆகிய அந்தக் களங்கமில்லா இளமை வருந்தச் செய்கிறது. இனி அது எப்பொழுது வாய்க்கும்?



"இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ?"

இங்கே பதினொரு அடிகளில் முதியவர் தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த மூன்று பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து மனம் மகிழ்கிறார்; நெகிழ்கிறார். "இனி நினைந்து இரக்கம் ஆகின்று" என்னும் முதல் அடியிலும், "கல்லா இளமை, அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ?" என்னும் பத்து, பதினொன்றாம் அடிகளிலும் முதியவரின் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் ஆழ்ந்த ஏக்கம் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. "மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு" என்னும் பாடலின் ஐந்தாம் அடி ஒளிவுமறைவு, சூதுவாது என்பவை அறியாத - களங்கமோ, வஞ்சனையோ துளியும் இல்லாத - இளமைப் பருவத்தை நன்கு அடையாளம் காட்டி நிற்கிறது.

பாடலின் கடைசி மூன்று அடிகள் அழகிய சொல்லோவியமாய் அமைந்து முதியவர் ஒருவரை நம் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன. பூண் பிடித்த வளைந்த உச்சியை உடைய பெரிய கம்பினை ஊன்றி, தளர்ந்து நடுங்கியவாறு, இருமலின் இடையிடையே சில சொற்களைச் சொல்லும் ஒரு பெரிய முதியவரைப் படம் பிடித்துக் காட்டும் அடிகள் இதோ:

"தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே."

இதைவிட இரத்தினச் சுருக்கமாய் வேறு எவராலும் முதுமையைச் சித்திரிக்க முடியாது. இப்பாடலைப் பாடிய புலவரின் இயற்பெயர் தெரியாது.

முதுமையின் அடையாளமான கைத்தடியினை(walking stick) "தொடித்தலை விழுத்தண்டு" என்னும் அழகிய சொற்றொடரால் சுட்டியமையால், இவர் "தொடித்தலை விழுத்தண்டினார்" என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றார்.
குண்டலகேசி உணர்த்தும் யாக்கை நிலையாமை:

"பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் வியல்பும் இன்னே
மேல்வரும் மூப்பும் ஆகி
நாளுநாள் சாகின் றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ?"

என்பது உடம்பின் நிலையாமையை எடுத்துரைக்கும் குண்டலகேசிப் பாடல்,

"பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது.
குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் ஏற்படுகிறது.
காளைப் பருவம் செத்து, காதலுக்குரிய இளமைப் பருவம் பிறக்கிறது.
அதுவும் மாறி முதுமை உண்டாகிறது.

இவ்வாறு ஒரு நிலை செத்து அடுத்த நிலை ஏற்படுவதால், நாம் நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறோமே! நமக்காகவே நாம் அழவேண்டி இருக்கிறதே! அவ்வாறு அழாதது ஏனோ" என வினவுகிறது இப்பாடல்.

இதன் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்கும்போது தொடித்தலை விழுத்தண்டினாரின் புறநானூற்றுப் பாடலைக் கையறுநிலைத் துறையில் சேர்த்திருப்பது பொருத்தமானதாகவே தோன்றுகிறது.

பேராசிரியர் இரா. மோகன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: டாக்டர் கண்ணன் நடராஜன்

கவரி வீசிய காவலன்!

0 மறுமொழிகள்
வேந்தே!

நினது போர்க்களத்தில் முழங்குகின்ற நின்னுடைய வீரமுரசு, எனக்கு அச்சம் தருவதாகவும் குருதியைப் பலிகொள்ளும் வேட்கையுடையதாகவும் இருக்கிறது. அது, கருமையுடைய மரத்தினால் செய்யப்பட்ட பக்கங்களையும் குற்றம் தீர வாரினால் இறுகப் பிணிக்கப் பட்டும் உள்ளது. நீண்டு தழைத்த மயில் தோகை மாலையினால் அணிசெய்யப்பட்ட அது, புள்ளிகளையுடைய நீலமணி மாலையை அணிந்துள்ளது போன்றிருக்கிறது.

அரண்மனையிலிருந்த கட்டில், எண்ணெய் நுரையைப் போன்று மென்மையான பரப்பினையுடைய பூக்கள் பரப்பப் பட்டிருந்தது. அது, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்த வீரமுரசு அமரக்கூடிய முரசுக் கட்டில் என்பதை அறியாமல் அதன் மீது ஏறிக் கிடந்து உறங்கினேன்.

அதனைக் கண்ட நீயோ சினங்கொண்டு நினது வாளினால் என்னை இரு கூறாக்கிக் கொல்லாது விடுத்தாய்.

அதுமட்டுமல்லாது, என்னருகே வந்து நின்னுடைய வலிமையான முழவு போன்ற தோளினை உயர்த்திக் குளிர்ச்சியுடன் அருளுடன் எனக்குக் கவரி வீசவும் செய்தாய்! இச்செயல், நீண்டு அகன்று பரந்த உலகில் உயர்நிலை உலகமாகிய அங்கு தங்குதல் என்பது உயர்ந்த புகழுடையவர்க்கு அல்லாது பிறர்க்கு இயலாது என்பதை நன்கு கேட்டிருந்த தன்மையாலோ?

வெற்றியுடைய தலைவனே! நீ செய்தது எதனாலோ? எனின், நீ நல்ல தமிழின் இனிமை முழுவதும் உணர்ந்தவன் ஆகையால் இத்தகைய பண்பு நினக்கே உரியது! ஆகையால், இச்செயலும் நின்னால் சாலும்.

பாடியவர்: மோசிகீரனார்.

பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

திணை:பாடாண். துறை: இயன் மொழி.

குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந்துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.


மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?


மின்தமிழ் இடுகை: புலவர் இரவா

ஈன்றாரை இழந்த புறப்பாடல்கள்!

0 மறுமொழிகள்
காதலை மொழிவது அகநானூறு என்றால், காதலைத் தவிர்த்த உணர்வுகளை மொழிவது புறநானூறு. நானூறு இனிய பாடல்களின் தொகுப்பு.

எல்லாப் பாடல்களுக்கும் பாடியவர் யார்?

பாடப்பட்டவர்கள் யார் யார்? என்றெல்லாம் குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.

ஆனால் பாடிய புலவர் பெருமக்கள் யார் என்று தெரியாத நிலையில் புறநானூற்றில் பதினான்கு பாடல்கள் உள்ளன. பாடல்களின் பொருளாழம் கருதி இவை இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்தகு "ஈன்றாரை இழந்த புறப்பாடல்களில்" சில:
ஒருத்தி தன் கணவனுடன் காட்டுவழியாக வந்துகொண்டிருக்கிறாள். அங்கு நேர்ந்த போரில் கணவன் இறந்துவிடுகிறான். வருத்தத்துடன் அருகிருக்கும் குயவனை நாடிச் செல்லும் அவள், குயவனிடம் இவ்வாறு வேண்டுகிறாள்: "குயவனே! என் அன்பிற்குரிய கணவன் வீர மரணம் அடைந்துவிட்டான். அவனை அடக்கம் செய்ய பெரிய தாழியை செய்துகொடு. அந்தத் தாழியில் அவனுடன் நானும் அடக்கம் ஆகவேண்டும். அதற்கேற்ப பெரிய தாழியாகச் செய்," என்று வேண்டுகிறாள். பாடல் இதுதான்:


"கலம்செய் கோவே கலம் செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லிபோலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலிது ஆக வனைமோ
நனைத்தலை மூதூர்க் கலம் செய் கோவே". - (புறம்-256)

கணவனின் வீர உணர்வைத் தனித் தகுதியாகவே போற்றிய மனைவியாகத் திகழும் இவள், காட்டு வழியே அவனுடன் பயணம் செய்ததை அழகியதோர் உவமையாகச் சொல்கிறாள். வண்டிச் சக்கரத்தில் உள்ள ஆரத்தைப் பொருத்தி, அதாவது அதன்மேல் ஒட்டிக்கொண்டு வந்த சிறிய பல்லியைப்போல் பாலையைக் கடந்து வந்தேன் என்கிறாள். பயணத்தின் பொழுது ஆரத்தைவிட்டு விழாத வண்ணம் பல்லி எவ்வாறு உறுதியாகப் பற்றிக்கொண்டு வந்ததோ, அதுபோல் நானும் கணவனை உறுதியோடும், உரிமையோடும் பற்றி வந்தேன்' என்பது இங்கே நுட்பமான பொருளாகும். பாடல் இருக்கிறது, பாடலை ஈன்றவர் யார் எனத் தெரியவில்லை.

*****

இரண்டு தலைவர்களுக்கிடையில் பகை. ஒருவனது பசுக்கூட்டத்தை அடுத்தவனின் வீரர்கள் தங்கள் ஊருக்குக் கடத்திச் செல்கின்றனர். ஒரு வீரன் மட்டும் விரைந்து சென்று பகைத் தலைவனை வழி மறைத்து வீரர்களுடன் போரிட்டுப் பசுக்களை மீட்டு வந்து தமது தலைவனிடம் ஒப்படைக்கிறான். இவனது இந்த வீரம் பகைத் தலைவனுக்கு செருப்புக்கும் பாதத்திற்கும் இடையில் சிக்கிய சிறு கல் போல் இருந்து மிகவும் உறுத்தியதாம்; வருத்தியதாம்.


"செருப்பு இடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கன்
குச்சின் நிரைத்த குருஉமயிர் மோவாய்ச்
செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
யார் கொலோ அளியன் தானே".... - என்று நீள்கிறது இந்தப் புறப்பாடல் (257)

அந்த வீரனின் புறத்தோற்றத்தை இவ்வாறு சொல்லோவியமாக்கிக் காட்டுகிறார் புலவர். அவன் திரண்ட கால்களை உடையவன். அழகிய வயிற்றை உடையவன். குச்சுப்புல் நிரைத்தது போன்ற நிறம் பொருந்திய தாடியை உடையவன். காதுகளையும் கடந்து செல்லும் முன்னே தாழ்ந்த கதுப்பினையுடையவன்.

*****

கடத்திச் சென்ற பசுக் கூட்டங்களை மீட்டு வருகையில் இந்தத் தலைவனைப் பகைவர்கள் சூழ்ந்து நின்று கொன்று விடுகின்றனர். அவனுக்கு நடுகல், அதாவது நினைவுச்சின்னம் எழுப்பி ஊரார் போற்றி வணங்குகின்றனர். இந்நிலையில் அவ்வூருக்கு வருகை தரும் பாணன் ஒருவனை நோக்கி இவ்வாறு கூறுகிறான் தலைவனின் நண்பன்:

"ஒரு பெரிய ஆண் யானையின் காலடியைப்போல விளங்கும் ஒரு கண்ணையுடைய பெரிய பறையையுடையவனே! இரவலனே! புகழ் பூத்த எம் தலைவனின் நடுகல்லை வணங்கிச்செல்க. அப்பொழுதுதான் நாட்டில் மழை பொழியும்; வளம் கொழிக்கும்; மலர்கள் நிறைந்த இடத்தில் தேனை உண்ண வண்டுகள் மொய்க்கும்'' என்று தனது நம்பிக்கையையும் தெரிவிக்கிறான். தலைவன் மீது கொண்ட பற்றினை விளக்கும் புறப்பாடல் இதோ:


"பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
வண்டுமேம் படூஉம் இவ் வறநிலை யா
ேபல்லாத் திரள்நிறை பெயர்தாப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விளங்கியோன் கல்லே!" - (புறம்-263)
*****

வீரனொருவன் பகைவரின் யானைகளைக் கொன்றுவிட்டு தானும் புண்பட்ட நிலையில் நிற்கிறான். அவ்வேளையிலும் தம்மைத் தாக்கவரும் யானையை எதிர்த்துக் கொல்கிறான். அவனது இந்த வீரத்தைக் கண்ட அவனது மன்னனும், இத்தகைய போர்க்களத்தில் இறப்பதைவிடவும், புலவர்களால் பாராட்டப்பெறும் சூழல் நமக்கு வேறில்லை என உணர்ந்து போரிட்டு இறந்துவிடுகிறான். அத்தகைய தலைவன் இப்போது எங்கு உள்ளானோ என்கிறார் புலவர்.


"ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றோடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
....... ........ .........


நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும் இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ....." (புறம்-307)

இங்கே ஓர் உவமை! எதிர் வரும் பகைவரையெல்லாம் தீர்த்துக் கட்டுகிறான் இந்த வீரன். இது எப்படி இருக்கிறதென்றால், "புல்லும் நீரும் இன்றி, உப்பு வாணிகரால் கைவிடப்பட்ட - முடமாகிவிட்ட எருமைக்கடா தன்னருகே உள்ள அனைத்தையும் தின்று தீர்த்துவிடுவதைப் போல் உள்ளது," என்கிறார் புலவர்.

இந்தப் பாடல் தலைவனொருவனின் ஊர்நலம் கூறும் பாங்கினைக் கொண்டுள்ளது. ஆம்! இவ்வூரில், புலியிடம் அகப்பட்டுக்கொண்டு பிறகு தப்பித்தாவிச் செல்கின்ற ஒரு மான் கன்றுக்குச் சினமில்லாத ஒரு முதிய பசு தன் பாலைத் தரும் பண்புடையது. மேலும் பரிசிலரான பாணர்க்கு அவர்கள் எண்ணிய வண்ணம் நல்கும் ஈகை; போர்க்களத்தில் உரல் போன்ற கால்களையுடைய களிற்றைக் கொல்வதற்காக மட்டும் வாளை உறையினின்றும் எடுக்கும் பண்பு இவற்றை உடையவனது ஊராம் இந்த ஊர்.


"புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும்
கா...........பரிசிலர்க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
வெள்வேல் ஆவம் ஆயின் ஒள்வாள்
கறையடி யானைக்கு அல்லது
உறை கழிப் பறியா வேலோன் ஊரே!" - (புறம்-323)

கவிமாமணி டாக்டர் வேலூர் ம. நாராயணன்.

நன்றி: தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES