Showing posts with label carnatic music. Show all posts
Showing posts with label carnatic music. Show all posts

Ramanuja Iyengar: Carnatic Classic

0 மறுமொழிகள்


"இராகசுரபி" செம்மங்குடி

0 மறுமொழிகள்
செவி வழிப்புகுந்து, சிந்தையில் உறைந்த பாடகர் அமரர் மகாவித்வான் டாக்டர் செம்மங்குடி சீனிவாசய்யர். இன்று(25/07/2008) அவரது 100வது பிறந்தநாள்.

2003 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மறைந்த அந்த மேதை, இன்னும் 5 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்திருப்பாரானால் "வேத நூற்பிராயம் நூறு" என்ற தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிய பாசுர வரியின்படி 100 வது வயதைத் தொட்டுச் சாதனை படைத்திருப்பார்.



எட்டாம் வயதிலேயே வாய்ப்பாட்டில் நாட்டம் கொண்ட அவர், 9 வது வயதில் தனது தமையனார் வயலின் மேதை செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயரிடம் முதலில் பயிற்சி பெற்றார்.

பின்னர் திருவிடைமருதூர் கோட்டு வாத்திய வல்லுநர் சகாராம் ராவிடம் பயிற்சி பெற்றார். 1920 ஆம் ஆண்டு மகாவித்வான் உமையாள்புரம் சாமிநாதய்யரிடம் குருகுலவாசம் செய்தார்.

திருவிடைமருதூரில் பயின்றுவந்த காலத்தில் பிரபல நாகஸ்வர அறிஞர்களின் வாசிப்பைக் கேட்டும், மதுரை புஷ்பவனம், பிடில் கோவிந்தசாமி பிள்ளை போன்ற பெரும் கலைஞர்களின் சங்கீத ஆளுகைகளைக் கேட்டும் அப்படியே அவர்கள் வழங்கிய நுட்பங்களை தம்குரல் வழியில் பாடும் இலாகவத்தைப் பெறலானார்.

கும்பகோணம் வந்தபோது, தம் தமயனாரான வயலின் மேதை செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயரிடமே தொடர்ந்து கற்கலானார். இந்தக் காலகட்டத்தில் அன்றாடம் எட்டுமணி நேரம் சாதகம் செய்த வித்வான் அவர்.

நாராயணஸ்வாமி ஐயரிடம் பயில்வதற்குத் தடைகள் ஏற்படவே மனோதர்ம மன்னர் மகாராஜபுரம் விஸ்வநாதய்யரிடம் பயிற்சிபெற ஏற்பாடானது. அந்த நேரத்தில் தான் இவருக்குக் குரலில் குளறுபடி தலைதூக்கி, தொல்லையும், இடைஞ்சலும் தந்தது. இதைத் தமது அபாரமான சாதக பலத்தால் சமாளித்து. சாரீரத்தைப் பொங்கிப்பாயும் பிரவாகம் போல் மாற்றிக் கொண்டு விட்டார்.

நாகஸ்வர பாணியில் அதிதீவிர ஆர்வம் கொண்டவர். அமரர் திருவாவடுதுறை நாகஸ்வர சக்கரவர்த்தி இராஜரத்தினம் பிள்ளையை "இராக ரத்தினம்" என்று சொல்லி, ஏற்றிப் புகழ்ந்து போற்றியவர். இந்த வாத்தியத்திலிருந்து எழுந்துவரும் அனைத்து அழகு வடிவங்களையும் அப்படியே கவர்ந்து தமது சாரீரத்தின் வழியாக வெளியிட்ட சாதகி அவர்.


இராகங்கள் நமது கர்நாடக இசையில் தனிச்சிறப்புக் கொண்டவை.
கரகரப்ரியா,
சண்முகப்ரியா,
காம்போதி,
தோடி,
பைரவி
போன்ற இராகங்களை நாகஸ்வர மேதைகள் எப்படி எப்படி எல்லாம் கற்பனைகள் பொழிந்து, மணிக்கணக்கில் ஜோடிப்பார்களோ அதை விடவும் மேலாக அந்த இராகங்களை ஈடற்ற கற்பனைகளோடும், இணையற்ற ஜோடனைகளோடும் ஆலாபித்து இரசிகர்களை மெய்மறக்கச் செய்த கலைஞர் அவர்.

நீராடும் நேரமாயிருந்தாலும் சரி, உணவு கொள்ளும் வேளையானாலும் சரி ஏதாவது ஒரு இராகத்தைத் துவக்கி ஆலாபிக்க ஆரம்பிப்பார். கையில் எடுத்த உணவுக்கவளம் அப்படியே இருக்கும்! இதைக் கண்ணாரக் கண்டவன் நான். சாப்பிடும்போதும் இவருக்கு ஒரு சிறு "சதஸ்" வேண்டும்!


எனவே, இராகம் பாடுவதில் கைதேர்ந்த மாபெரும் கலைஞர் என மதிக்கப்பட்ட டாக்டர் செம்மங்குடியை "இராகசுரபி" என்று குறிப்பிடுவதே பொருத்தம். இவர் பாடாத இசைக்கூடமே இல்லை.
வயலின் மேதை செம்மங்குடி நாராயணஸ்வாமி ஐயர்,
கோட்டு வாத்திய சிகாமணி சகாராம் ராவ்,
மனோதர்ம ஜோதி மகாராஜபுரம் விஸ்வநாதய்யர்,
ஞானச்சுடர் உமையாள்புரம் சாமிநாதய்யர்
ஆகியோரிடம் எல்லாம் குருகுலவாசம் செய்திருந்த போதிலும் காயக சிகாமணி "அரியக்குடி" இராமானுஜ ஐயங்காரையே தமது மானசீக குருவாகப் போற்றி வந்தவர்.

"அரியக்குடி"யின் பாட்டு அசைந்தும் ஒசிந்தும் இயங்கும் ஒரு அழகிய தேருக்கு (இரதம்) இணையானது.

கச்சேரிகளை,
அடிப்பகுதி,
நடுப்பகுதி,
தலைப்பகுதி
என்று மூன்று கட்டங்களாக வகுத்து, ஜோடித்துப்பாடி, மேடைக் கச்சேரிகளுக்கே ஒரு மோஸ்தரை அமைத்து அளித்த ஒரு அபூர்வப்பிறவி இவர் என்று கூறி நெகிழ்ந்து மகிழ்ந்தவர்.

"நான் மறுபிறவி எடுத்தால் அப்போதாவது "அரியக்குடி" ஐயங்கார் மாதிரி பாட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நீயும் எனக்காகப் பகவானை நேர்ந்துகொள்!" என என்னிடம் ஒரு தடவை கூறி, தமது உள்ளக்கிடக்கையை வெளியிட்டவர்.


தாமே கைராட்டையில் நூல்நூற்று காந்தி மகான் கட்டளைப்படி கதராடைகளை அணிந்து வந்தவர். இசையில் மூன்று ஸ்தாயிகள் போல அவரிடம்,
குருபக்தி,
தெய்வபக்தி,
தேசபக்தி
மூன்றும் இடம் பெற்றிருந்தன.

திருவாங்கூர் மன்னர் குடும்பத் தொடர்பு பெற்றிருந்த அவர், ஆஸ்தான வித்வானாகி, பின்னர் ஸ்வாதித்திருநாள் இசைக்கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் பிரபல இசைக்கலைஞர்களை எல்லாம் வரவழைத்து அவர்களை மன்னர் குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி, தக்க சன்மானங்களையும், மரியாதையும் அளிக்கச் செய்து கெளரவித்தார்.

மகாகவி பாரதியார் பாடல்களைக் கச்சேரிகளில் பெருமெடுப்பில் கணிசமாக வழங்கி, களைபெறச் செய்தவர்களில் "செம்மங்குடி"க்கே முதலிடம் தரவேண்டும்.


மகாராஜா சுவாதித் திருநாள் கீர்த்தனைகள்,
சதாசிவ பிரும்மேந்திரரின் பக்திரசப் பாடல்கள்,
அஷ்படதி, மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி
ஆகிய படைப்புகளுக்கு நவநவமான மெட்டுகள் அமைத்து, ஸ்வரப்படுத்தி, "சுதேசமித்திரன்" செய்தி ஆசிரியராக இருந்த அடியேனிடம் பிரசுரத்துக்குத் தந்து உதவிய பெருந்தகை இவர்.

இவை யாவும் 1933 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டுவரை சுமார் 70 ஆண்டுகள் நான் அவரிடம் கொண்டிருந்த பழைய நினைவுகள். "செம்மங்குடி" வென்ற விருதுகள், பட்டங்கள், கெளரவங்கள் இவற்றின் பட்டியல் மிக நீண்டதாகும். மிகப்பெரிய இரசிகர் வட்டத்தைப் பெற்றிருந்தவர் என்றால் மிகையேயல்ல!

பத்திரிகைகளிடமும், பத்திரிகையாளரிடமும் நிறைந்த பரிவு கொண்டிருந்தவர். சென்னையில் பத்திரிகையாளர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டட நிதியுதவிக்காக ஏற்பாடான கச்சேரி வரிசையில் முதலிடம் பெற்றுப்பாட சென்னைக்குத் தன் சொந்தச் செலவில் வருகை புரிந்தார். பயணச் செலவுக்காக அவருக்கு அளித்த பணத்தைக்கூட பத்திரிகையாளர் கட்டட நிதியிலேயே சேர்க்கும்படி என்னிடம் சொல்லிவிட்டார்.

நீலம் - கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்

நன்றி: தினமணி
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்
செம்மங்குடியின் பேட்டி காண இங்கே சொடுக்குக!

தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதர்

3 மறுமொழிகள்
கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல், கற்பனையைப் பறக்கவிட்டு, வண்ணங்களைக் குழைத்தெடுத்து, தன் திறமை முழுவதையும் கொட்டி, அழகு சொட்டும் வண்ண ஓவியம் ஒன்றை எழுதினானாம் ஒருவன்.

மற்றொருவன் அதன் கீழே அவனது பெயரை எழுதினானாம். யாருடைய பெயர் ஓவியத்தில் உள்ளதோ, அவனே சித்திரத்தை எழுதியதாக இன்றளவும் நம்பப் படுகிறதாம். ஏறத்தாழத் தமிழிசையின் கதை யும் இது தான்.

வரலாறு எழுதாமையும் அதைப் பேணாமையும் தமிழரின் மிகப் பெரும் குறைகள். தமிழரின் சாதனைகளுக்கு உரிமை கொண்டாட நினைப்போரின் வேலை சுளுவானது. நமது வரலாற்றைத் திரிப்பது எளிது. புதைக்கப்பட்ட வரலாற்றைத் தோண்டி எடுக்கவும் திரிக்கப்பட்ட சரித்திரத்தைத் திருத்தி அமைக்கவும் கடும் முயற்சிகள் தேவை. தமிழிசையின் வேர்களைக் கண்டு பிடித்து, அது கர்நாடக இசையாகத் திரிந்து வந்துள்ளதை நிறுவிய ஆராய்ச்சியாளர்களின் முன்னோடி ஆபிரகாம் பண்டிதர். 'யாழ் நூல்' இயற்றிய விபுலானந்தருக்கும் முந்தியவர் பண்டிதர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் கர்நாடக இசையையும் பழைய தமிழ் நூல் களையும் ஆழமாக ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் எழுதிய நூல் 'கருணாமிர்த சாகரம்'.

ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்டது அந்நூல். இசையின் வரலாறு, அறிவியல், இலக்கியம், இசை வாணர்கள் பற்றி விரிவாகவும் நுட்பமாகவும் அது அலசுகிறது. இசை பற்றிய கலைக்களஞ்சியமாக அதைச் சொல்லலாம்.

புஷ்பக விமானம், கூடுவிட்டுக் கூடுபாய்தல் எனப் பண்டிதர் கயிறு திரிக்கவில்லை. ஆய்வுப் பொருளை அறிவியல் பார்வையில் அவர் அணுகினார். கேள்விகளை எழுப்பினார். விடைகளைக் கண்டறிந்தார். தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கும் வாதங்களை அடுக்கினார். பின்னப் பகுப்பு முறையில் அமைந்த நமது சுருதியமைப்பில் ஏழு சுவரங்களும் பன்னிரண்டு சுவர தாளங்களும் உள்ளன. இருபத்தி நான்கு சுருதிகள் இருப்பதுதானே முறை! ஏன் இருபத்திரண்டு சுருதிகள் மட்டும் உள்ளன? அது தவறல்லவா என்ற வினாக்களைத் தொடுத்தார். வித்துவான்களிடமும் அறிஞர்களிடமும் விவாதித்தார். பத்திரிக்கைகள் வாயிலாக மக்களிடமும் விடை பெற முயன்றார். தாய்ப்பண் எனும் அடிப்படை இராகம் மேளகர்த்தாவிலிருந்து பிறக்கிறது. கர்நாடக சங்கீதம் எழுபத்திரண்டு மேளகர்த்தாக்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், "32 மேளகர்த்தாக்களுக்கு மட்டுமே ஜன்யராகத்தகுதி இருப்பது ஏன்?" என ஆபிரகாம் பண்டிதர் கேட்டார். சங்க இலக்கியங்கள், சிலப் பதிகாரம், பக்தி இலக்கியங்களைக் கற்றுணர்ந்து, அவற்றில் இசை, இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகளையும் ஆராய்ந்து விளக்கினார். நாதசுவரம், கின்னாரி போன்ற வாத்தியங்கள் கடல்கோளுக்கும் முந்திய தொன்மையுடையவை என நிறுவினார். நமது செங்கோட்டி யாழே நவீன கால வீணை என்றும் நிரூபித்தார்.

தமிழாசிரியராகப் பணிபுரிந்த ஆபிரகாம் பண்டிதர், ஒரு சித்த வைத்தியருமாவார். சுருளி மலையில் வசித்த கருணானந்தர் என்ற ஞானியிடம் பண்டிதர் மருத்துவ முறைகளையும் மூலிகை இரகசியங்களையும் கற்றறிந்தார். தஞ்சாவூரில் ஒரு தோட்டம் அமைத்து மூலிகை ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்து வந்தார். தமிழ் வைத்திய முறையைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக அரசு அவருக்கு 'இராவ் பகதூர்' என்ற பட்டம் வழங்கியது.

1907ஆம் ஆண்டு 'கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற புத்தகத்தைப் பண்டிதர் வெளியிட்டார். தொண்ணூற்றைந்து தமிழ்ப் பாடல்கள் அதிலிருந்தன. அத்தனையையும் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதரே. ஒவ்வொன்றுக்கும் அவரே இசையமைத்து அவற்றின் சுவரங்களையும் வெளியிட்டார்.

இசையுலகில் சுடரொளிவிட்டுப் பிரகாசித்த ஜாம்பவான்களுடன் தன் வாழ்நாள் முழுவதிலும் அவர் தொடர்பு கொண்டிருந்தார். கோனேரிபுரம் வைத்யநாத ஐயர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், பஞ்சாபகேச பாகவதர் ஆகிய இசைவாணர்கள் பண்டிதரின் நண்பர்கள்.

தென்னிந்தியாவின் முதல் இசை மாநாட்டை மாபெரும் அளவில் பண்டிதர் நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். இசை மாநாடுகள் பண்டிதரது சொந்த செலவில் நடந்தன. ஒவ்வொன்றிலும் பயன் மிகு விவாதங்கள் நடந்தன. புது கருத்துகள் வெளியாயின.

டிசம்பர் 14, 1912இல் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்ற அமைப்பைப் பண்டிதர் தோற்று வித்தார். தென்னிந்திய இசை வளர்ச்சியே அதன் குறிக்கோள். இசைப்பள்ளி ஏற்படுத்துதல், இசை ஆராய்ச்சி, இசை பற்றிய சந்தேகங்களைத் தீர்த்தல் என்பன சங்கம் பின்பற்றிய முறைகள். தஞ்சாவூரின் திவான், ஆபிரகாம் பண்டிதரின் இசை மாநாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதே பாணியில் அகில இந்திய அளவில் இந்திய இசை பற்றிய மாநாட்டைப் பரோடாவில் கூட்டினார். அதில் பண்டிதர் பங்கேற்றுக் கட்டுரை வாசித்தார். மாநாட்டில் ஆபிரகாம் பண்டிதரது மகள் மரகதவள்ளியம்மாள் வீணை மீட்டினார்.

பண்டிதரின் மூன்றாவது மகனாகிய வரகுண பாண்டியன், தம் தந்தை 1919ஆம் ஆண்டு மறைந்தபோது விட்டுச் சென்ற ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார். 'பாணர் கைவழி என்னும் யாழ்நூல்' அவரது படைப்பு.

தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்பன குயிலுவக் கருவிகள் எனப்பட்டதாக வரகுண பாண்டியன் கூறுகிறார். மிடறு என்றால் 'தொண்டை' எனப் பொருள். மிடற்று இசையே வாய்ப்பாட்டு. கஞ்சக்கருவி உலோகத்தால் ஆனது. ஜலதரங்கம், மோர்சிங் போன்றவை கஞ்சக் கருவிகள்.

யாழ் முதலிய இசைக் கருவிகளின் விவரிப்பை வரகுண பாண்டியன் தருகிறார். யாழின் பதினெட்டு உறுப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார். தனது தந்தை, சகோதரனைப் போலவே பண்டிதரின் மகள் மரகதவள்ளியம்மாளும் தமிழிசை ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ளவர். கருணாமிர்தசாகரத்தின் இரண்டாம் பகுதியை அவர் எழுதியுள்ளார்.

1859ஆம் ஆண்டு பிறந்த ஆபிரகாம் பண்டிதரின் 148ஆம் பிறந்தநாள் விழாவின் போது அவரது குடும்ப வாரிசான முனைவர் அமுதா பாண்டியன் 'கருணாமிர்தசாகரம்' பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டார். ஆறு ஆண்டுகள் ஆராய்ச்சிகளின் பலனான அப்புத்தகத்தின் முதல் பிரதியைப் பேராசிரியர் அன்பழகன் கொடுக்க பண்டிதர் வழி வந்த முத்தையா பாண்டியன் பெற்றுக்கொண்டார். பாடல்கள் இயற்றிப் பண்ணமைத்து, இசையாராய்ச்சி செய்து, மாநாடுகள் நடத்தி, நூல் வெளியிட்டு தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு மனமும், தமிழ்ப்பற்றும், இசை ஆர்வமும் நூற்றாண்டுகள் கடந்து, தலைமுறை களைத் தாண்டி மங்காமலிருக்கின்றன.


நன்றி - கலைகேசரி
சொல்புதிது இதழ்-9 இல் வெளிவந்த கட்டுரை

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES