தமிழுக்கு நேர்ந்த சோதனை!

1 மறுமொழிகள்
மும்பை வாழ் ஏழைத் தமிழர்தம் குழந்தைகள் தமிழ் வழியில் கல்விபயில மும்பை மாநகராட்சி வாய்ப்பு அளித்து வருவதற்கு நாம் முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதேநேரத்தில், தற்போது 8-ம் வகுப்பை தமிழ் வழியில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி வருத்தமளிக்கிறது.

மும்பை பெருநகரில் தமிழர்கள் அதிகம். தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலிருந்தும் - படித்தவர், படிக்காதவர் இரு தரப்பிலும் - குறைந்தது ஒரு குடும்பம் அங்கே வாழ்கிறது. இவர்களில் வணிகம் செய்வோர், அலுவலகங்களில் பல நிலைகளில் வேலை பார்ப்போர் நீங்கலாக, பெரும்பகுதியினர் அன்றாட உழைப்பில் பிழைப்போர்.

தமிழ்நாட்டில் வாழ்கிறோம் என்ற கற்பிதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தமிழர் மட்டுமே வாழும் இடங்கள் அங்கு உண்டு. நிறையச் சம்பாதிக்கும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர். ஆனால் ஏழைத் தமிழ்க் குழந்தைகள் படிக்க வாய்ப்புள்ள ஒரே இடம் மும்பை மாநகராட்சிப் பள்ளிகள். இவர்களுக்காக 48 தமிழ் வழிப் பள்ளிகள் உள்ளன. 15,000 குழந்தைகள் படிக்கின்றனர்.

எட்டாம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தேர்வில் குஜராத்தி, கன்னட மொழிகளில் தேர்வு எழுத அனுமதி உள்ளபோது, தமிழுக்கு மட்டும் அனுமதியில்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழனுக்குச் சென்ற இடமெல்லாம்... எதிர்ப்பு!

போதுமான ஆசிரியர், பாடப்புத்தகம் இல்லை என்பதால் அனுமதி மறுக்கப்படுவதாகக் கல்வி அலுவலர் சொல்லும் காரணம் நம்பும்படியாக இல்லை. தற்போது மும்பை மாநகராட்சியில் பயிலும் குழந்தைகள், செலவு மிகுந்த ஆங்கில வழிக் கல்விக்கு மாற முடியாது. அடிப்படையில் அவர்கள் ஏழைகள். தற்போது படிப்பை தமிழ் வழியில் தொடர முடியாத சுமார் 800 குழந்தைகளுக்கு உதவிட தமிழக அரசு எந்த வகையிலாவது முயற்சிக்க வேண்டும்.

மத்திய ஆட்சியில் தொடர திமுகவின் ஆதரவை நம்பி இருக்கும் காங்கிரஸ் கட்சி மராட்டியத்தில் ஆட்சியில் இருப்பதால், தமிழக முதல்வரின் கோரிக்கையை நிச்சயம் தட்ட முடியாது.

மும்பைத் தமிழ்க் குழந்தைகளுக்கு இன்று ஏற்பட்டுள்ள இன்னல், தொழில் காரணமாக மாநிலம் கடந்து, நாடு கடந்து செல்லும் தமிழர் அனைவருக்கும் உள்ளது. தமிழை மறக்காமல் இருக்கும் தமிழனைத் தமிழகம் மறந்துவிடுவது தொடர்கதையாக உள்ளது.

ஆங்கிலம் கற்க விரும்பும் அயல்மொழி மாணவர்களுக்காக இங்கிலாந்து அரசு வெளியிடும் இலக்கண நூல்கள், மொழிப் பயிற்சி நூல்கள் நிறைய. அதேபோன்று பிரஞ்சு மொழி, கலாசாரம், நுண்கலையை வளர்த்தெடுக்க தனிஅமைப்பு உள்ளது. அவர்கள் உண்மையாகவே அதற்காகப் பாடுபடுகிறார்கள். தங்கள் மொழியைக் கற்கும் அயல்மொழியினருக்காக எளிய கற்பித்தல் முறை, கற்றல் கருவிகள் அனைத்தையும் புதிய தொழில்நுட்பத்துக்கு மாற்றியுள்ளனர்.

ஆனால் நமக்கோ, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் தமிழ் வம்சாவளியினருக்கும் தமிழைச் சொல்லித் தரவே வழியில்லை. இதன் விளைவாக, வெளிமாநிலம், வெளிநாடு வாழ் தமிழனின் குழந்தைகள் தமிழை மறக்கின்றனர். தென்ஆப்பிரிக்காவிலும், மொரீஷியஸிலும் தமிழ் வம்சாவளியினர் தேவாரம், திருவாசகத்தை ஆங்கில எழுத்தில் எழுதி, பிழையான தமிழ் உச்சரிப்புடன் பாடி வரும் அவலம் இதற்கு ஒரு சான்று.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்தம் குழந்தைகள் தடையின்றித் தமிழ் பயில, முடிந்தால் தமிழ் வழியில் பயில, ஆதரவான சூழலை, கற்றலுக்கான தொழில்நுட்ப வசதிகளை தமிழக அரசுதான் உருவாக்க வேண்டும்.


தமிழர் தூங்கும் பின்னிரவில் திரைப்பாடல்களை, திரைப்படங்களை ஒளிபரப்பும் ஊடகங்கள், அந்நேரத்தில் விழித்திருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தமிழ்மொழிப் பயிற்சி வகுப்புகளை ஒளிபரப்ப தமிழக அரசு நிபந்தனை விதிக்கலாம். இதனால் உறுதியாக ஒரு நன்மை உண்டு - ஆங்கிலம் கலவாத தமிழ் பேசும் தமிழ்க் குழந்தைகளின் கூட்டம் தமிழகத்தில் இல்லாவிட்டாலும் உலகின் பிற பகுதிகளிலாவது பல்கிப் பெருகும்.

நன்றி: தினமணி - தலையங்கம்



மும்பைக்கு தமிழ்ப் பாட புத்தகம் தரத் தயார்:- கருணாநிதி கடிதம்

மும்பை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் 8-ம் வகுப்பில் தமிழிலேயே தேர்வு எழுத தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இப்பிரச்னை குறித்து ஜூன் 26-ம் தேதி "தினமணி" நாளிதழில் தலையங்கம் வெளியாகி இருந்தது. அதைப் படித்த முதல்வர் உடனடியாக இதில் பரிகார நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை(27/6/08) எழுதிய கடிதம்:

மும்பை மாநகராட்சி சார்பில் 8 மொழிகளில் தொடக்க கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ் மொழியிலும் தொடக்க கல்வி பயிற்றுவிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் 48 பள்ளிகளில் 15 ஆயிரம் மாணவர்கள் பயன் அடைந்துவருகின்றனர்.

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை 8-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் தேர்வு எழுதுமாறு கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம் குஜராத்தி, கன்னட மாணவர்கள் அவர்கள் தாய்மொழியிலேயே 8-ம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது பாரபட்சமான நடவடிக்கை ஆகும்.

இந்த முடிவுக்கு சில நிர்வாகக் காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகள் தமிழில் படித்த மாணவர்கள் 8-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் தேர்வு எழுத நேர்வதால், அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் மன அழுத்தத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

மாணவர்களின் தாய்மொழியில் தொடக்கக் கல்வி அளிப்பது சிறந்த முயற்சி. அதை நீங்கள் தொடர வேண்டும். தமிழில் பயிற்றுவிக்க ஆசிரியர்கள், புத்தகங்கள் தேவைப்பட்டால் மும்பை மாநகராட்சிக்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளது.


தமிழ் மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு வரை தமிழில் பயிற்றுவிப்பதைத் தொடர வேண்டும். இந்த விஷயத்தில் 15 ஆயிரம் மாணவர்களுக்கு உதவும் வகையில் நல்ல முடிவை மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி: தினமணி - தமிழகம்

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

கவரி வீசிய காவலன்!

0 மறுமொழிகள்
வேந்தே!

நினது போர்க்களத்தில் முழங்குகின்ற நின்னுடைய வீரமுரசு, எனக்கு அச்சம் தருவதாகவும் குருதியைப் பலிகொள்ளும் வேட்கையுடையதாகவும் இருக்கிறது. அது, கருமையுடைய மரத்தினால் செய்யப்பட்ட பக்கங்களையும் குற்றம் தீர வாரினால் இறுகப் பிணிக்கப் பட்டும் உள்ளது. நீண்டு தழைத்த மயில் தோகை மாலையினால் அணிசெய்யப்பட்ட அது, புள்ளிகளையுடைய நீலமணி மாலையை அணிந்துள்ளது போன்றிருக்கிறது.

அரண்மனையிலிருந்த கட்டில், எண்ணெய் நுரையைப் போன்று மென்மையான பரப்பினையுடைய பூக்கள் பரப்பப் பட்டிருந்தது. அது, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்த வீரமுரசு அமரக்கூடிய முரசுக் கட்டில் என்பதை அறியாமல் அதன் மீது ஏறிக் கிடந்து உறங்கினேன்.

அதனைக் கண்ட நீயோ சினங்கொண்டு நினது வாளினால் என்னை இரு கூறாக்கிக் கொல்லாது விடுத்தாய்.

அதுமட்டுமல்லாது, என்னருகே வந்து நின்னுடைய வலிமையான முழவு போன்ற தோளினை உயர்த்திக் குளிர்ச்சியுடன் அருளுடன் எனக்குக் கவரி வீசவும் செய்தாய்! இச்செயல், நீண்டு அகன்று பரந்த உலகில் உயர்நிலை உலகமாகிய அங்கு தங்குதல் என்பது உயர்ந்த புகழுடையவர்க்கு அல்லாது பிறர்க்கு இயலாது என்பதை நன்கு கேட்டிருந்த தன்மையாலோ?

வெற்றியுடைய தலைவனே! நீ செய்தது எதனாலோ? எனின், நீ நல்ல தமிழின் இனிமை முழுவதும் உணர்ந்தவன் ஆகையால் இத்தகைய பண்பு நினக்கே உரியது! ஆகையால், இச்செயலும் நின்னால் சாலும்.

பாடியவர்: மோசிகீரனார்.

பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.

திணை:பாடாண். துறை: இயன் மொழி.

குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந்துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.


மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?


மின்தமிழ் இடுகை: புலவர் இரவா

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் இராசேந்திரன்

0 மறுமொழிகள்
"சமூக மதிப்போடு சம்பாத்தியமும் தரும் மொழி தமிழ்''!

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக ஒன்பதாண்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பொறுப்பில் இரண்டரை ஆண்டுகள், மொழிபெயர்ப்பியல் அகர முதலித் திட்டக் கூடுதல் முழுப் பொறுப்பு இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக மூன்றாண்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வுப்பணி தனி அலுவலராக இரண்டாண்டுகள், தமிழ்ப் பல்கலைக் கழகச் சிறப்புத்தகைமை மற்றும் விரிவுரையாளராக மூன்றாண்டுகள், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு நூலகத்தில் பன்னிரண்டாண்டுகள், குறள்பீடம் பொறுப்பு, மொழிபெயர்ப்புத் துறையின் துணை இயக்குநர் என்று 34 ஆண்டுப்பணி அனுபவம்.

மேலும்

சுவடிகளைப் பதிப்பித்தல், வெளியிடல், தமிழ்ப் பயிற்றுவித்தல், தமிழ் ஆய்வு, தமிழாய்விதழ் பதிப்பு, மின்-அகராதி, பிழைதிருத்தி போன்ற கணினித் தமிழ் வளர்ச்சிப் பணிகள், சங்க இலக்கியங்களை இந்தியிலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்தல், செம்மொழித் தமிழ் இலக்கியத் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், தமிழாய்வு மற்றும் நிர்வாகப் பணிகளாக என் 34 ஆண்டுக் காலப் பணி அனுபவங்கள்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானதற்கு இவரைவிடச் சிறந்த அனுபவசாலி நிச்சயமாக இருக்கமுடியாது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முனைவர் ம. இராசேந்திரனை சென்னை, திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

உங்கள் குடும்பம் பற்றி?

பிறந்த ஊர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்னவாசல். சொந்தஊர் குடவாசல். ஞானாம்பாள் - மகாதேவன் தம்பதியரின் ஒரே மகன். இரண்டு சகோதரிகள். என் தந்தை ஒரு தவில் வித்வான். எங்கள் குடும்பம் ஓர் இசைக்குடும்பம். எனக்கு ஒரு வயதாக இருக்கும்போதே தந்தை காலமாகிவிட்டார். தாயின் அரவணைப்பிலும் தாய்மாமன் வளர்ப்பிலும் பள்ளிப்படிப்பை முடித்தேன்.

இசைக் குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் இசை பயிலாமல், தமிழில் ஆர்வம் காட்டியதற்குக் காரணம் என்ன?

இசையும் தமிழும் பிரிக்கமுடியாவை. இசை குடும்பத்தில் இருந்து வந்த நான், இசையும் தமிழுமாக வளர்ந்து, திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றேன். எங்கள் தலைமுறையில் முதன்முதல் படித்து பட்டம் பெற்றது நான்தான். நான் கோபாலகிருஷ்ண ஐயரின் மாணவன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். அன்றைக்கு இருந்த ஆசிரியர்கள் தமிழுணர்வோடு பேசிப்பழகியதாலும் பாடம் நடத்தியதாலும் எனக்கு தமிழ்மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

உங்களது தொடர் வளர்ச்சிக்குக் காரணம்?

தொடந்து படித்ததுதான்.

உங்கள் துணைவியார், குழந்தைகள் பற்றிக் கூறுங்களேன்?

துணைவியார் பெயர் மைதிலி.

இரண்டு பெண்கள். மூத்தபெண் தென்றல், இளையவள் எழில். என்னுடைய இரண்டு பெண்களுக்கும் கலப்புமணம்தான் நடந்தது. தமிழ்மேக்னா என்று ஒரே ஒரு பேத்தி.



உங்கள் குடும்பத்தில் தமிழிலக்கிய ஆர்வம் எப்படி?

குடும்பத்தில் அனைவருக்குமே தமிழார்வம் அதிகம். என்னுடைய இளைய மகள் மூன்று வயதிலேயே கவிதை சொல்வாள். இதைக்கண்டு நான் வியந்ததுண்டு.

இன்றைக்குத் தமிழ் படித்தால் சமுதாயத்தில் மதிப்பு கிடைப்பதில்லை என்றும், தொழில்நுட்பத்துறை போன்றவற்றில்தான் பணி வாய்ப்புகளும் ஊதியமும் அதிகம் என்றும் கூறிவருகின்றனரே அது குறித்து தங்கள் கருத்தென்ன?

சமூக மதிப்பைத் தருவது மொழி. சம்பாத்தியம் தருவது தொழில்நுட்பத்துறை. சம்பாத்தியம் மட்டுமே வாழ்க்கையாகாது. சமூகத்தில் மதிப்போடு சம்பாத்தியத்தையும் தரும் ஒரே மொழி தமிழ்மொழி மட்டும்தான்.

உ.வே.சா. தமிழ்ப்படித்ததால் அவருக்கு எந்தவித இழப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பார்க்கப்போனால் அவர் தமிழ்பயிலாமல் இருந்திருந்தால் இன்றைக்குத் தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். என்னைப் பொறுத்தவரை தமிழால் உயர்ந்தவர்கள்தான் அதிகம்.

செம்மொழி ஆய்வு மையம் குறித்து உங்கள் புதிய பணியின் பங்களிப்பென்ன?

செம்மொழி ஆய்வு மையம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படவுள்ளது. அந்த நிதி பகிர்வில் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால், அதன் பணிகளில் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்ந்துச் செயலாற்றும்.

தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி கிடைத்தது குறித்து உங்கள் கருத்து என்ன?

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சூழலிலும், ஏற்கெனவே தமிழ் பாடங்களைப் பள்ளிக்குழந்தைகள் படிக்க நேர்ந்ததும், ஆலயங்களில் தமிழ் அனுமதிக்கப்பட்டிருப்பதுமான இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரானது குறித்து மிகுந்த பெருமைப்படுகிறேன்.

தமிழ் வளர்ச்சி குறித்து தங்கள் கருத்து என்ன?

தமிழைத் தனியாக வளர்க்க முடியாது. சார்புப் படுத்தித்தான் வளர்க்கமுடியும், பக்தி காலத்தில் பக்தியை வளர்ப்பதற்காக மொழி வளர்க்கப்பட்டது. ஜனநாயகத் தேர்தல் காலத்திலும் மொழி வளர்க்கப்பட்டது. இன்றைக்கு மொழி வளர்த்தெடுக்கப்போவது எது என்பதைக் கண்டறிந்தால் போதும். அது உலகமயமாக்களில்தான் உள்ளது. உலகமயமாக்கல் என்பது முதலில் குடும்பத்தில் இருந்து உருவாகவேண்டும். ஏனென்றால், ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் வேறு வேறு நிறுவனங்களில் பணிபுரிபவராகவும், ஒரு தொலைக்காட்சியில் பல்வேறு அலைவரிசைகளைப் பார்ப்பவராகவும் இருக்கின்றனர். எதிலும் ஒற்றுமை கிடையாது. உலகமயமாக்கல் என்பது முதலில் வீட்டுக்குள்ளேயே உருவாகவேண்டும். இந்த ஒற்றுமைதான் உலகமயமாவதற்கு நம்மைத் தயார்படுத்தும்.

கி.மஞ்சுளா

படங்கள்: ஏ.எஸ். கணேஷ்

நன்றி: தினமணியின் ஞாயிறு கொண்டாட்டம்
மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

சோழர்கள் | 5 நிமிட வாசிப்பு!

2 மறுமொழிகள்
சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.

காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.

கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. அவர்கள் சூடும் மலர் ஆத்தி.

பொருளடக்கம்
1 தோற்றமும் வரலாறும்
2 முற்காலச் சோழர்கள்
2.1 முற்காலச் சோழர்களின் வீழ்ச்சி
2.1.1 களப்பிரர்கள்
2.1.2 வீழ்ச்சி
2.1.3 தமிழ்நாட்டில் சோழர்கள்
3 பிற்காலச் சோழர்கள்
3.1 இராஜராஜ சோழன்
3.2 இராஜேந்திர சோழன்
3.3 பின்வந்த சோழ மன்னர்
3.4 முதலாம் குலோத்துங்கன்
3.5 சோழப் பேரரசின் வீழ்ச்சி
4 சோழ நாடு
5 ஆட்சி
5.1 அரசுரிமை
5.2 உள்ளாட்சிப் பிரிவுகள்
6 சமூகநிலை
6.1 பெண்டிர்
6.2 உடன்கட்டை ஏறுதல்
6.3 ஆடல் மகளிர்
6.4 சோழரும் சாதியமும்
6.5 அடிமைகள்
7 வெளிநாட்டு வணிகம்
8 சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள்
8.1 கலைகள்
8.2 கல்வி
8.3 மொழி
8.4 இலக்கியம்
8.5 சமயம்
9 இவற்றையும் பார்க்கவும்
10 மேற்கோள்கள்
11 வெளி இணைப்புகள்

மேலும் வாசிக்க...

தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதர்

3 மறுமொழிகள்
கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல், கற்பனையைப் பறக்கவிட்டு, வண்ணங்களைக் குழைத்தெடுத்து, தன் திறமை முழுவதையும் கொட்டி, அழகு சொட்டும் வண்ண ஓவியம் ஒன்றை எழுதினானாம் ஒருவன்.

மற்றொருவன் அதன் கீழே அவனது பெயரை எழுதினானாம். யாருடைய பெயர் ஓவியத்தில் உள்ளதோ, அவனே சித்திரத்தை எழுதியதாக இன்றளவும் நம்பப் படுகிறதாம். ஏறத்தாழத் தமிழிசையின் கதை யும் இது தான்.

வரலாறு எழுதாமையும் அதைப் பேணாமையும் தமிழரின் மிகப் பெரும் குறைகள். தமிழரின் சாதனைகளுக்கு உரிமை கொண்டாட நினைப்போரின் வேலை சுளுவானது. நமது வரலாற்றைத் திரிப்பது எளிது. புதைக்கப்பட்ட வரலாற்றைத் தோண்டி எடுக்கவும் திரிக்கப்பட்ட சரித்திரத்தைத் திருத்தி அமைக்கவும் கடும் முயற்சிகள் தேவை. தமிழிசையின் வேர்களைக் கண்டு பிடித்து, அது கர்நாடக இசையாகத் திரிந்து வந்துள்ளதை நிறுவிய ஆராய்ச்சியாளர்களின் முன்னோடி ஆபிரகாம் பண்டிதர். 'யாழ் நூல்' இயற்றிய விபுலானந்தருக்கும் முந்தியவர் பண்டிதர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் கர்நாடக இசையையும் பழைய தமிழ் நூல் களையும் ஆழமாக ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் எழுதிய நூல் 'கருணாமிர்த சாகரம்'.

ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான பக்கங்கள் கொண்டது அந்நூல். இசையின் வரலாறு, அறிவியல், இலக்கியம், இசை வாணர்கள் பற்றி விரிவாகவும் நுட்பமாகவும் அது அலசுகிறது. இசை பற்றிய கலைக்களஞ்சியமாக அதைச் சொல்லலாம்.

புஷ்பக விமானம், கூடுவிட்டுக் கூடுபாய்தல் எனப் பண்டிதர் கயிறு திரிக்கவில்லை. ஆய்வுப் பொருளை அறிவியல் பார்வையில் அவர் அணுகினார். கேள்விகளை எழுப்பினார். விடைகளைக் கண்டறிந்தார். தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கும் வாதங்களை அடுக்கினார். பின்னப் பகுப்பு முறையில் அமைந்த நமது சுருதியமைப்பில் ஏழு சுவரங்களும் பன்னிரண்டு சுவர தாளங்களும் உள்ளன. இருபத்தி நான்கு சுருதிகள் இருப்பதுதானே முறை! ஏன் இருபத்திரண்டு சுருதிகள் மட்டும் உள்ளன? அது தவறல்லவா என்ற வினாக்களைத் தொடுத்தார். வித்துவான்களிடமும் அறிஞர்களிடமும் விவாதித்தார். பத்திரிக்கைகள் வாயிலாக மக்களிடமும் விடை பெற முயன்றார். தாய்ப்பண் எனும் அடிப்படை இராகம் மேளகர்த்தாவிலிருந்து பிறக்கிறது. கர்நாடக சங்கீதம் எழுபத்திரண்டு மேளகர்த்தாக்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், "32 மேளகர்த்தாக்களுக்கு மட்டுமே ஜன்யராகத்தகுதி இருப்பது ஏன்?" என ஆபிரகாம் பண்டிதர் கேட்டார். சங்க இலக்கியங்கள், சிலப் பதிகாரம், பக்தி இலக்கியங்களைக் கற்றுணர்ந்து, அவற்றில் இசை, இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகளையும் ஆராய்ந்து விளக்கினார். நாதசுவரம், கின்னாரி போன்ற வாத்தியங்கள் கடல்கோளுக்கும் முந்திய தொன்மையுடையவை என நிறுவினார். நமது செங்கோட்டி யாழே நவீன கால வீணை என்றும் நிரூபித்தார்.

தமிழாசிரியராகப் பணிபுரிந்த ஆபிரகாம் பண்டிதர், ஒரு சித்த வைத்தியருமாவார். சுருளி மலையில் வசித்த கருணானந்தர் என்ற ஞானியிடம் பண்டிதர் மருத்துவ முறைகளையும் மூலிகை இரகசியங்களையும் கற்றறிந்தார். தஞ்சாவூரில் ஒரு தோட்டம் அமைத்து மூலிகை ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்து வந்தார். தமிழ் வைத்திய முறையைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக அரசு அவருக்கு 'இராவ் பகதூர்' என்ற பட்டம் வழங்கியது.

1907ஆம் ஆண்டு 'கருணாமிர்த சாகரத் திரட்டு' என்ற புத்தகத்தைப் பண்டிதர் வெளியிட்டார். தொண்ணூற்றைந்து தமிழ்ப் பாடல்கள் அதிலிருந்தன. அத்தனையையும் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதரே. ஒவ்வொன்றுக்கும் அவரே இசையமைத்து அவற்றின் சுவரங்களையும் வெளியிட்டார்.

இசையுலகில் சுடரொளிவிட்டுப் பிரகாசித்த ஜாம்பவான்களுடன் தன் வாழ்நாள் முழுவதிலும் அவர் தொடர்பு கொண்டிருந்தார். கோனேரிபுரம் வைத்யநாத ஐயர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், பஞ்சாபகேச பாகவதர் ஆகிய இசைவாணர்கள் பண்டிதரின் நண்பர்கள்.

தென்னிந்தியாவின் முதல் இசை மாநாட்டை மாபெரும் அளவில் பண்டிதர் நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். இசை மாநாடுகள் பண்டிதரது சொந்த செலவில் நடந்தன. ஒவ்வொன்றிலும் பயன் மிகு விவாதங்கள் நடந்தன. புது கருத்துகள் வெளியாயின.

டிசம்பர் 14, 1912இல் சங்கீத வித்யா மகாஜன சங்கம் என்ற அமைப்பைப் பண்டிதர் தோற்று வித்தார். தென்னிந்திய இசை வளர்ச்சியே அதன் குறிக்கோள். இசைப்பள்ளி ஏற்படுத்துதல், இசை ஆராய்ச்சி, இசை பற்றிய சந்தேகங்களைத் தீர்த்தல் என்பன சங்கம் பின்பற்றிய முறைகள். தஞ்சாவூரின் திவான், ஆபிரகாம் பண்டிதரின் இசை மாநாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதே பாணியில் அகில இந்திய அளவில் இந்திய இசை பற்றிய மாநாட்டைப் பரோடாவில் கூட்டினார். அதில் பண்டிதர் பங்கேற்றுக் கட்டுரை வாசித்தார். மாநாட்டில் ஆபிரகாம் பண்டிதரது மகள் மரகதவள்ளியம்மாள் வீணை மீட்டினார்.

பண்டிதரின் மூன்றாவது மகனாகிய வரகுண பாண்டியன், தம் தந்தை 1919ஆம் ஆண்டு மறைந்தபோது விட்டுச் சென்ற ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார். 'பாணர் கைவழி என்னும் யாழ்நூல்' அவரது படைப்பு.

தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்பன குயிலுவக் கருவிகள் எனப்பட்டதாக வரகுண பாண்டியன் கூறுகிறார். மிடறு என்றால் 'தொண்டை' எனப் பொருள். மிடற்று இசையே வாய்ப்பாட்டு. கஞ்சக்கருவி உலோகத்தால் ஆனது. ஜலதரங்கம், மோர்சிங் போன்றவை கஞ்சக் கருவிகள்.

யாழ் முதலிய இசைக் கருவிகளின் விவரிப்பை வரகுண பாண்டியன் தருகிறார். யாழின் பதினெட்டு உறுப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார். தனது தந்தை, சகோதரனைப் போலவே பண்டிதரின் மகள் மரகதவள்ளியம்மாளும் தமிழிசை ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ளவர். கருணாமிர்தசாகரத்தின் இரண்டாம் பகுதியை அவர் எழுதியுள்ளார்.

1859ஆம் ஆண்டு பிறந்த ஆபிரகாம் பண்டிதரின் 148ஆம் பிறந்தநாள் விழாவின் போது அவரது குடும்ப வாரிசான முனைவர் அமுதா பாண்டியன் 'கருணாமிர்தசாகரம்' பற்றிய ஆய்வு நூலை வெளியிட்டார். ஆறு ஆண்டுகள் ஆராய்ச்சிகளின் பலனான அப்புத்தகத்தின் முதல் பிரதியைப் பேராசிரியர் அன்பழகன் கொடுக்க பண்டிதர் வழி வந்த முத்தையா பாண்டியன் பெற்றுக்கொண்டார். பாடல்கள் இயற்றிப் பண்ணமைத்து, இசையாராய்ச்சி செய்து, மாநாடுகள் நடத்தி, நூல் வெளியிட்டு தமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு மனமும், தமிழ்ப்பற்றும், இசை ஆர்வமும் நூற்றாண்டுகள் கடந்து, தலைமுறை களைத் தாண்டி மங்காமலிருக்கின்றன.


நன்றி - கலைகேசரி
சொல்புதிது இதழ்-9 இல் வெளிவந்த கட்டுரை

பழகினால்தானே இனிமை தெரியும்!

2 மறுமொழிகள்
மொழி: பழகினால்தானே இனிமை தெரியும்!

- ரவிக்குமார்.

அம்மாவை "மம்மி' என்றும் அப்பாவை "டாடி' என்றும் அழைப்பதையே பெரிதும் விரும்புகின்றனர் தமிழ்நாட்டின் பெற்றோர்கள். குழந்தைகளைச் சொல்லிக் குற்றமில்லை. இந்தளவிற்கு நர்சரி மோகத்திலும், ஆங்கில மோகத்திலும் ஊறிப்போயிருப்பவர்கள் பெற்றோர்கள்தான். "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது போல், அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ்ச் சொற்களை சென்னையின் பல பகுதிகளிலிருக்கும் குழந்தைகளுக்கும் மாதத்திற்கு இரண்டு முறை சென்று சொல்லிக் கொடுத்து வருகிறார் விஜய் பார்த்திபன் என்னும் தமிழ் ஆர்வலரும் அவரின் நண்பர்களான தமிழ் ஆர்வலர்களும்.

வரைகலை பணிபுரியும் விஜய் பார்த்திபன், இதற்காகவே "பழகு தமிழ் பயிலரங்கம்' என்னும் அமைப்பை கடந்த ஏப்ரல் 14 அன்று தொடங்கியிருக்கிறார். இனி தமிழ்ப் பேச்சு... அவரின் மூச்சு...


""பஸ், ஸ்டாப்பிங், ரோட், சைக்கிள்... இப்படி நாம் அன்றாடம் பேசும் ஆங்கில வார்த்தைகளையே பேருந்து, நிறுத்தம், சாலை, மிதிவண்டி... என்று தமிழில் பயன்படுத்த குழந்தைகளுக்குச் சொல்கிறோம். அவர்களும் சந்தோஷமாகப் பயன்படுத்துகின்றனர். பெற்றோர்களும் கூட இப்போது ஆர்வமாக இந்தப் பயிலரங்குகளுக்கு வரத் தொடங்கியிருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், அன்றாடப் பயன்பாட்டில் அதிகம் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் அடுக்ககங்களில் வாழும் பெற்றோர்கள் கூட அவர்களின் குழந்தைகளோடு எங்களின் இந்தப் பயிலரங்குகளில் பங்கெடுக்கின்றனர்.

யாராவது எங்களின் பகுதிகளில் இப்படியொரு பயிலரங்கை நடத்துங்களேன் என்று அழைத்தாலும், நாங்கள் அவர்களின் இடத்தில் சென்று நடத்துகிறோம். இதற்காகவே தமிழ்நாடு முழுவதுமிருக்கும் தமிழ் ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். மாதத்தில் இரண்டாவது, நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மாம்பலம் பகுதிகளிலிருக்கும் கிட்டு பூங்காவில் இந்தப் பயிலரங்கை நடத்துகிறோம். முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகிலிருக்கும் வரதராஜப் பேட்டை என்னும் குடிசைப் பகுதியிலிருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நல்ல தமிழில் பேசுவதற்குப் பயிற்சியளிக்கிறோம். இதேபோல் ஒவ்வொரு பகுதிக்கும் நாங்களே நேரில் சென்று பயிற்சியளிக்க இருக்கிறோம்.

சிறிது காலத்திற்குப் பிறகு அந்தப் பகுதியில் நீங்கள் கொச்சைத் தமிழே கேட்க முடியாது.
தமிழ் அன்பர்களின் வீடு, பூங்கா, இப்படி எந்த இடத்திலும் இந்தப் பயிலரங்கு நடக்கும். ஒவ்வொரு கூட்டத்திலும் ஏறக்குறைய 25 லிருந்து 50 பேர் வரை கூடுகின்றனர். ஒவ்வொரு சந்திப்பிலும் 20 முதல் 50 ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளைச் சொல்லித் தருகிறோம். இல்லை இல்லை, ஞாபகப்படுத்துகிறோம் அவ்வளவுதான்!

ஏனென்றால், இதில் பெரும்பான்மையானவை நமக்குத் தெரிந்ததுதான். செவ்வியல் மொழியாக தமிழ் இருந்தாலும், அன்றாடம் மக்கள் செப்பும் மொழியாகவும் தமிழ் இருக்கவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்.
வீட்டிற்கு உள்ளேயும், பொது இடங்களிலும் நமது அன்றாட பயன்பாட்டு மொழியாக தமிழைத் தொடர்ந்து பேசிவந்தாலே போதும். ஏறக்குறைய 200 வார்த்தைகள் வரை தெரிந்தாலே போதும், நமது அன்றாட பயன்பாட்டில் முழுக்க முழுக்க நாம் தமிழில் பேசமுடியும். தமிழர்கள் தமிழில் பேசவேண்டும் என்று முதலில் நினைக்க வேண்டும். அதை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும்.

முன்னேறிய நாடுகளான சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் கணினிப் பயன்பாட்டில் கூட அவர்களின் மொழியைத்தான் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டுள்ளார்களே தவிர, ஆங்கில மொழியைப் பயன்படுத்தி அல்ல. இந்த உணர்வு தமிழர்களுக்கும் வேண்டும்.

அடுத்தமுறை நீங்கள் பேருந்தில் பயணிக்கும் போது, "பாரீசுக்கு ஒரு டிக்கட்' என்று கேட்பதற்குப் பதில், "பாரிமுனைக்கு ஒரு பயணச்சீட்டு' என்று கேட்டுப் பாருங்கள். நடத்துனர் நிச்சயம் கொடுப்பார்.

அதேபோல், தானி (ஆட்டோ) திருவல்லிக்கேணிக்கு வருமா? என்று ஓட்டுனரிடம் கேட்டுப் பாருங்கள். முதலில் நீங்கள் கேலி செய்கிறீர்களோ என்று அவர் நினைத்தாலும், அவரும் புரிந்து கொள்வார் உங்களின் நல்ல தமிழின் இனிமையை. பயன்படுத்தினால்தானே தமிழின் இனிமை தெரியும்..'' என்றார் விஜய் பார்த்திபன்.


நன்றி:தினமணி கதிர்.

மின்தமிழ் இடுகை: ஆல்பர்ட் பெர்னாண்டோ

ஈன்றாரை இழந்த புறப்பாடல்கள்!

0 மறுமொழிகள்
காதலை மொழிவது அகநானூறு என்றால், காதலைத் தவிர்த்த உணர்வுகளை மொழிவது புறநானூறு. நானூறு இனிய பாடல்களின் தொகுப்பு.

எல்லாப் பாடல்களுக்கும் பாடியவர் யார்?

பாடப்பட்டவர்கள் யார் யார்? என்றெல்லாம் குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.

ஆனால் பாடிய புலவர் பெருமக்கள் யார் என்று தெரியாத நிலையில் புறநானூற்றில் பதினான்கு பாடல்கள் உள்ளன. பாடல்களின் பொருளாழம் கருதி இவை இன்றளவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்தகு "ஈன்றாரை இழந்த புறப்பாடல்களில்" சில:
ஒருத்தி தன் கணவனுடன் காட்டுவழியாக வந்துகொண்டிருக்கிறாள். அங்கு நேர்ந்த போரில் கணவன் இறந்துவிடுகிறான். வருத்தத்துடன் அருகிருக்கும் குயவனை நாடிச் செல்லும் அவள், குயவனிடம் இவ்வாறு வேண்டுகிறாள்: "குயவனே! என் அன்பிற்குரிய கணவன் வீர மரணம் அடைந்துவிட்டான். அவனை அடக்கம் செய்ய பெரிய தாழியை செய்துகொடு. அந்தத் தாழியில் அவனுடன் நானும் அடக்கம் ஆகவேண்டும். அதற்கேற்ப பெரிய தாழியாகச் செய்," என்று வேண்டுகிறாள். பாடல் இதுதான்:


"கலம்செய் கோவே கலம் செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லிபோலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலிது ஆக வனைமோ
நனைத்தலை மூதூர்க் கலம் செய் கோவே". - (புறம்-256)

கணவனின் வீர உணர்வைத் தனித் தகுதியாகவே போற்றிய மனைவியாகத் திகழும் இவள், காட்டு வழியே அவனுடன் பயணம் செய்ததை அழகியதோர் உவமையாகச் சொல்கிறாள். வண்டிச் சக்கரத்தில் உள்ள ஆரத்தைப் பொருத்தி, அதாவது அதன்மேல் ஒட்டிக்கொண்டு வந்த சிறிய பல்லியைப்போல் பாலையைக் கடந்து வந்தேன் என்கிறாள். பயணத்தின் பொழுது ஆரத்தைவிட்டு விழாத வண்ணம் பல்லி எவ்வாறு உறுதியாகப் பற்றிக்கொண்டு வந்ததோ, அதுபோல் நானும் கணவனை உறுதியோடும், உரிமையோடும் பற்றி வந்தேன்' என்பது இங்கே நுட்பமான பொருளாகும். பாடல் இருக்கிறது, பாடலை ஈன்றவர் யார் எனத் தெரியவில்லை.

*****

இரண்டு தலைவர்களுக்கிடையில் பகை. ஒருவனது பசுக்கூட்டத்தை அடுத்தவனின் வீரர்கள் தங்கள் ஊருக்குக் கடத்திச் செல்கின்றனர். ஒரு வீரன் மட்டும் விரைந்து சென்று பகைத் தலைவனை வழி மறைத்து வீரர்களுடன் போரிட்டுப் பசுக்களை மீட்டு வந்து தமது தலைவனிடம் ஒப்படைக்கிறான். இவனது இந்த வீரம் பகைத் தலைவனுக்கு செருப்புக்கும் பாதத்திற்கும் இடையில் சிக்கிய சிறு கல் போல் இருந்து மிகவும் உறுத்தியதாம்; வருத்தியதாம்.


"செருப்பு இடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கன்
குச்சின் நிரைத்த குருஉமயிர் மோவாய்ச்
செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
யார் கொலோ அளியன் தானே".... - என்று நீள்கிறது இந்தப் புறப்பாடல் (257)

அந்த வீரனின் புறத்தோற்றத்தை இவ்வாறு சொல்லோவியமாக்கிக் காட்டுகிறார் புலவர். அவன் திரண்ட கால்களை உடையவன். அழகிய வயிற்றை உடையவன். குச்சுப்புல் நிரைத்தது போன்ற நிறம் பொருந்திய தாடியை உடையவன். காதுகளையும் கடந்து செல்லும் முன்னே தாழ்ந்த கதுப்பினையுடையவன்.

*****

கடத்திச் சென்ற பசுக் கூட்டங்களை மீட்டு வருகையில் இந்தத் தலைவனைப் பகைவர்கள் சூழ்ந்து நின்று கொன்று விடுகின்றனர். அவனுக்கு நடுகல், அதாவது நினைவுச்சின்னம் எழுப்பி ஊரார் போற்றி வணங்குகின்றனர். இந்நிலையில் அவ்வூருக்கு வருகை தரும் பாணன் ஒருவனை நோக்கி இவ்வாறு கூறுகிறான் தலைவனின் நண்பன்:

"ஒரு பெரிய ஆண் யானையின் காலடியைப்போல விளங்கும் ஒரு கண்ணையுடைய பெரிய பறையையுடையவனே! இரவலனே! புகழ் பூத்த எம் தலைவனின் நடுகல்லை வணங்கிச்செல்க. அப்பொழுதுதான் நாட்டில் மழை பொழியும்; வளம் கொழிக்கும்; மலர்கள் நிறைந்த இடத்தில் தேனை உண்ண வண்டுகள் மொய்க்கும்'' என்று தனது நம்பிக்கையையும் தெரிவிக்கிறான். தலைவன் மீது கொண்ட பற்றினை விளக்கும் புறப்பாடல் இதோ:


"பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
வண்டுமேம் படூஉம் இவ் வறநிலை யா
ேபல்லாத் திரள்நிறை பெயர்தாப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விளங்கியோன் கல்லே!" - (புறம்-263)
*****

வீரனொருவன் பகைவரின் யானைகளைக் கொன்றுவிட்டு தானும் புண்பட்ட நிலையில் நிற்கிறான். அவ்வேளையிலும் தம்மைத் தாக்கவரும் யானையை எதிர்த்துக் கொல்கிறான். அவனது இந்த வீரத்தைக் கண்ட அவனது மன்னனும், இத்தகைய போர்க்களத்தில் இறப்பதைவிடவும், புலவர்களால் பாராட்டப்பெறும் சூழல் நமக்கு வேறில்லை என உணர்ந்து போரிட்டு இறந்துவிடுகிறான். அத்தகைய தலைவன் இப்போது எங்கு உள்ளானோ என்கிறார் புலவர்.


"ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றோடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
....... ........ .........


நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும் இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ....." (புறம்-307)

இங்கே ஓர் உவமை! எதிர் வரும் பகைவரையெல்லாம் தீர்த்துக் கட்டுகிறான் இந்த வீரன். இது எப்படி இருக்கிறதென்றால், "புல்லும் நீரும் இன்றி, உப்பு வாணிகரால் கைவிடப்பட்ட - முடமாகிவிட்ட எருமைக்கடா தன்னருகே உள்ள அனைத்தையும் தின்று தீர்த்துவிடுவதைப் போல் உள்ளது," என்கிறார் புலவர்.

இந்தப் பாடல் தலைவனொருவனின் ஊர்நலம் கூறும் பாங்கினைக் கொண்டுள்ளது. ஆம்! இவ்வூரில், புலியிடம் அகப்பட்டுக்கொண்டு பிறகு தப்பித்தாவிச் செல்கின்ற ஒரு மான் கன்றுக்குச் சினமில்லாத ஒரு முதிய பசு தன் பாலைத் தரும் பண்புடையது. மேலும் பரிசிலரான பாணர்க்கு அவர்கள் எண்ணிய வண்ணம் நல்கும் ஈகை; போர்க்களத்தில் உரல் போன்ற கால்களையுடைய களிற்றைக் கொல்வதற்காக மட்டும் வாளை உறையினின்றும் எடுக்கும் பண்பு இவற்றை உடையவனது ஊராம் இந்த ஊர்.


"புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும்
கா...........பரிசிலர்க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
வெள்வேல் ஆவம் ஆயின் ஒள்வாள்
கறையடி யானைக்கு அல்லது
உறை கழிப் பறியா வேலோன் ஊரே!" - (புறம்-323)

கவிமாமணி டாக்டர் வேலூர் ம. நாராயணன்.

நன்றி: தமிழ்மணி (தினமணி)

மின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES